வியாழன், 10 ஜனவரி, 2019

மாலை உவமை! - 24




   பாடலில் ஒரு பொருளுக்குப் பல உவமைகள் தொன்ற, அவை ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வந்து கடைசியில் பொருளைச் சொல்லி முடிப்பதாக வருவதுமாலை உவமைஆகும்.

உ. ம்
செம்பொன் நிலம்போல் செழுமையதில் நீர்வளத்தை
நம்பும் பசுங்கொடிபோல் நன்கது - கொம்பினைப்
பற்றாகப் பிடித்துப் பயன்தருதல் போன்றதே
கற்றோர் இடமிருக்கும் கல்வி!

பொருள்செம்மையான பொன் நிறைந்த நிலம்போல, செழிப்பான அதனுள் அமைந்த நீர்வளத்தை நம்பிடும் கொடி போல, அக்கொடியானது நன்கு படர்ந்து வளர அருகிலிருக்கும் கொம்பினைப் பற்றாகப் பிடித்துப் பயன் தருதல் போல நன்மைதரும் கற்றவர் இடத்தில் இருக்கும் கல்வி.
     செம்பொன்போல் செழுமையும், நீர்வளத்தை நம்பும் பசுமையான கொடி போலும், அது அதன் அருகில் இருக்கும் கொம்பினைப் பற்றாகப் பிடிப்பது போல் என்று பாடலில் உவமையாது எங்கும் முற்றுப் பெறாமல் வந்து கடைசியில் கற்றோர் இடமிருக்கும் கல்வி என்று முடிந்துள்ளதால் இது மாலை உவமை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019

இதன்பிறகு, உவமை பிற அணிகளுடக் கூடி வரும் எட்டு உவமை அணிகளும், மேலும் வேறுபாடாக வரும் மூன்று அணிகளும் உள்ளன.

1 கருத்து: