வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்பா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜனவரி, 2022

மொழியேது ?18

 


மார்கழியில் பாலைநில மக்களாய் பாடுகின்றேன்!
சீர்முல்லை மண்ணில் சிறப்பிருந்தும்! - நேர்மையின்றிச்
சாதியினம் பேசுகின்றார் சார்ந்தவர்கள்! உன்னிடத்தில்
சேதியிதைச் சொல்லமொழி ஏது?
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கூசாமல் பேசும்!

 


மார்கழி நற்குளிர் வாட்டியும் மேனிசுடும்!
போர்வையாய் என்னவளைப் போர்த்துவதால்! - நேர்நிமிர்ந்து
பேசாதி ருந்தும் பெரியவிழி பேசிவிடும்
கூசாமல் காதலைக் கோர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

பழகிப்பார்!

 


மார்கழியில் பூக்கும் மலரெல்லாம் வாசமில்லை!
நார்தொடுத்த மாலையோ நல்லழகே! - பார்க்க
அழகில்லை! பாசமுடன் ஆளுமென் நெஞ்சைப்
பழகிப்பார்! கண்டயர்வாய் பண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2022

துள்ளும் நெஞ்சம்!

 


மார்கழியில் செந்நெல் வயல்நிறைந்து மண்பார்க்க
வேர்பெருத்த செங்கரும்பு வெய்திருக்க  - ஏர்பிடித்தோன்
உள்ளம் மகிழ்தல்போல் உன்முகத்தைக் கண்டுவிட்டால்
துள்ளுதடி நெஞ்சம் தொடர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

திங்கள், 3 ஜனவரி, 2022

பொய் !

 


மார்கழியில் வந்தாய்! மயக்கத்தைத் தந்துநின்றாய்!
ஓர்வழி இல்லை உனைமறக்க! - தீர்வும்
தெரியவில்லை! என்னுள் தெளிவுமில்லை! உன்னுள்
புரியாமல் போவதெல்லாம் பொய்!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022

புதன், 29 டிசம்பர், 2021

வந்துவிடு வாழ்வோம் ! 9

 



மார்கழியில் ஆண்டாள் மறைவாக வேண்டினாள்!
நேர்வழியில் வேண்டுகிறேன் நேரிழையே!  - கார்வண்ணன்
ஆழ்வார் கனவில் அழைத்திட்டான்! வந்துவிடு
வாழ்வோம் நினைவில் மகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

நோய் பயந்தோடும் ! 8

 


மார்கழியில் ஆற்றோரம் மாங்குயிலின் இன்னிசையில்
நீர்ச்சொட்டும் ஈரமுடன் நிற்கின்றாய்!  - கார்காலம்
காய்ச்சலுடல் தீண்டிடும்! கட்டிக்கொள் என்னுடலை
நோய்பயந் தோடிடும் நொந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

உன்இறை நான்!

 


மார்கழிப் பூக்களை மாலை தொடுத்தெடுத்துச்
சீர்விளங்கும் சன்னதிக்குச் செல்கின்றாய்! - ஊர்வசியே!
உன்னிறை நானென்(று) உணரவைப்பார் உன்னிறைவன்!
அன்றெனைத் தேடுவாய் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

திங்கள், 27 டிசம்பர், 2021

பெண்ணே நவில்!

 



மார்கழியில் நோம்பிருக்கும் மங்கையே! என்னிடத்தில்
ஓர்வார்த்தை பேசா(து) உருகுகிறாய்!  - ஊர்சொன்ன
சொற்களால் உண்டான சூடு தணிந்திடவே
நற்றவத்து பெண்ணே நவில்!
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2021

புதன், 22 டிசம்பர், 2021

கூர்விழியாளே!

 


மார்கழியில் பாடினால் மங்கலஞ் சேருமாம்
சீர்கொண்டு பாடுகிறேன் செந்தமிழில்! - கூர்விழியே
பொன்னும் பொருளும் பொலிந்திடும் ஏற்றமல்ல!
உன்னுயிரைச் சேர்ந்தால் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
20.12.2021

மஞ்சள் நிறமலரே!

 



.
மார்கழிப் பூங்கொடியின் மஞ்சள் நிறமலரே!
வேர்விட நன்னிலம் வேண்டுமா?  - சீர்செய்து
நல்லுரம் ஏற்றிய நல்லிதயம் இங்குண்டு!
செல்லாமல் சேர்ந்தால் செழிப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
19.12.2021

புதன், 15 டிசம்பர், 2021

மார்கழி மலர்!

 



.
மார்கழியில் இட்டுவைத்த மாக்கோலப் பூக்களெல்லாம்
யார்பார்க்க செய்தாயோ என்றறியார்! - ஊர்மக்கள்
உன்முகத்தைப் பார்க்க, ஒளிந்திருந்து நானறிந்தேன்
உன்னுள்ளே என்னை உணர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
16.12.2021

திங்கள், 1 மார்ச், 2021

மூடி மறைத்தாள் முகம்!

 

.

தேடிய காதல் திகட்டியதோ என்றழுது
வாடி வதங்கியதும், வந்துநின்று - பாடினான்!
கூடிக் குழைவதிலும் ஊடுதல் இன்பமென்றே
மூடி மறைத்தாள் முகம்!
.
பாவலர் அருணா செல்வம்
02.03.2021

திங்கள், 19 அக்டோபர், 2020

தென்றலே ஏன்வந்தாய் செப்பு?

 


ஊடலின்றி அன்புமிகுந்(து) ஊற இருந்தவளைக்
கூடலுடன் கோமகன் கொஞ்சாமல் - வாடவிட்டுப்
பொன்பொருள் கொண்டுவரப் போயிருக்கும் வேளையில்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு?
.
பாவலர் அருணா செல்வம்
17.10.2020

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தங்குமனம் நீயெனக்குத் தா!


எத்தனைப் பாடினும் ஏங்கிடும் நெஞ்சத்தால்
பித்தனைப்போல் உன்னைப் பிடித்திட்டேன்! - முத்தமிழே!
மங்காப் புகழ்படைத்த மாத்தமிழை எந்நாளும்
தங்குமனம் நீயெனக்குத் தா!

.
பாவலர் அருணா செல்வம் 

29.08.2020

புதன், 1 ஏப்ரல், 2020

இரு சொல் எழிலணி வெண்பா!



.
சீருணவில் சேர்க்க செரிமானம் செய்வதெது?
பேருள்ளம் கொள்ளும் பெயருமெது? – பேருலகில்
மாந்தருட லோடு மனத்தையும் நல்லுயர்வாய்க்
ஏந்திடும் சீரகமே இங்கு!
.
பாவலர் அருணா செல்வம்
01.04.2020
(ஒரே வெண்பாவில் இரண்டு வினாக்களுக்கு ஒரு விடை வரும்படிப் பாடப்படுவது “இரு சொல் எழிலணி வெண்பா“ எனப்படும்)

வியாழன், 26 மார்ச், 2020

கொம்படைந்த வெண்பா!





நெற்பையோ கொம்படைய நெஞ்சம் மயங்கிடும்!
நற்சொல்லோ கொம்படைய நற்பிரிவாம்! – பற்றுடைய
தேனமைதி கொம்படைய சேறுமினம்! கானகத்தின்
தானழகு கொம்படைய தா!
.
நெற்பைசாக்கு கொம்படைய சொக்கு
நற்சொல்பதம் கொம்படைய பேதம்.
அமைதிசாந்தம் கொம்படைய சொந்தம்.
கானகம்காடு கொம்படைய கொடு.
.
பாவலர் அருணா செல்வம்
26.03.2020

(கொம்படைதல் என்பது தமிழில் உள்ள கொம்பில்லாச் சொற்களில் கொம்பினைச் சேர்த்தல் என்பதாகும். உதாரணமாககாடைஎன்ற சொல்லில் கொம்பைச் சேர்த்தால் கொடைஅல்லதுகோடைஎன வரும். வெண்பாவில் கொம்பில்லாச் சொல்லும் கொம்படைந்த சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களைக் கொண்டு பாடப்படுவதுகொம்படைந்த வெண்பாஎனப்படும்.)

கொம்புடைந்த வெண்பா!



.
உள்ளத்தின் கொம்புடைந்தால் உற்றவுயிர் போக்குவதாம்!
கள்ளுணர்வின் கொம்புடைந்தால் காண்வழியாம்!– கொள்ளையெழில்
கன்னியரின் கொம்புடைந்தால் கானமிடும்! காலமிடும்
பின்னடைவின் கொம்புடைந்தால் பீடு!
.
உள்ளம்நெஞ்சு கொம்புடைந்தால் நஞ்சு.
கள்ளுணர்வுபோதை கொம்புடைந்தால் பாதை.
கன்னியர்பெண்ணின் கொம்புடைந்தால் பண்.
பின்னடைவுசோதனை கொம்புடைந்தால் சாதனை.
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2020

(கொம்புடைதல் என்பது தமிழில் உள்ள கொம்பிருக்கும் சொற்களில் உள்ள கொம்புகளை நீக்குதல் என்பதாகும். உதாரணமாககொல்என்ற சொல்லின் கொம்பை நீக்கினால்கால்என வரும். வெண்பாவில் கொம்புடைய சொல்லும் கொம்புடைந்த சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களைக் கொண்டு பாடப்படுவதுகொம்புடைந்த வெண்பாஎனப்படும்.)

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

5. தளவம் மலர்!



.
செந்நிற மொட்டுச் சிரித்து விரிந்திட
வந்தாடும் வெண்ணிறப்பூ வாசமுடன்! – முந்தும்
தளத்தின் நிறம்மாறித் தண்ணொளிர் வீசத்
தளவமலர் என்றார் தழைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
13.01.2020

4. அனிச்ச மலர்!



.
மென்மைக்குக் காட்டாக மேன்மக்கள் கூறினர்!
அன்னத்திற்(கு) ஒப்பாய் அருங்குணம்! அன்பால்
கனிந்தோரின் ஊடலால் கன்னிமுக மாற்றம்
அனிச்சமலர் கொண்ட அழகு!
.
பாவலர் அருணா செல்வம் 
11.01.2020