மார்கழியில்
பாலைநில மக்களாய் பாடுகின்றேன்!
சீர்முல்லை
மண்ணில் சிறப்பிருந்தும்! - நேர்மையின்றிச்
சாதியினம்
பேசுகின்றார் சார்ந்தவர்கள்! உன்னிடத்தில்
சேதியிதைச்
சொல்லமொழி ஏது?
.
பாவலர்
அருணா செல்வம்
05.01.2022
மார்கழியில்
பாலைநில மக்களாய் பாடுகின்றேன்!
சீர்முல்லை
மண்ணில் சிறப்பிருந்தும்! - நேர்மையின்றிச்
சாதியினம்
பேசுகின்றார் சார்ந்தவர்கள்! உன்னிடத்தில்
சேதியிதைச்
சொல்லமொழி ஏது?
.
பாவலர்
அருணா செல்வம்
05.01.2022
மார்கழி
நற்குளிர் வாட்டியும் மேனிசுடும்!
போர்வையாய்
என்னவளைப் போர்த்துவதால்! - நேர்நிமிர்ந்து
பேசாதி ருந்தும்
பெரியவிழி பேசிவிடும்
கூசாமல்
காதலைக் கோர்த்து!
.
பாவலர் அருணா
செல்வம்
09.01.2022
மார்கழியில்
பூக்கும் மலரெல்லாம் வாசமில்லை!
நார்தொடுத்த
மாலையோ நல்லழகே! - பார்க்க
அழகில்லை!
பாசமுடன் ஆளுமென் நெஞ்சைப்
பழகிப்பார்!
கண்டயர்வாய் பண்பு!
.
பாவலர் அருணா
செல்வம்
04.01.2022
மார்கழியில்
செந்நெல் வயல்நிறைந்து மண்பார்க்க
வேர்பெருத்த
செங்கரும்பு வெய்திருக்க - ஏர்பிடித்தோன்
உள்ளம் மகிழ்தல்போல்
உன்முகத்தைக் கண்டுவிட்டால்
துள்ளுதடி
நெஞ்சம் தொடர்ந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
09.01.2022
மார்கழியில்
வந்தாய்! மயக்கத்தைத் தந்துநின்றாய்!
ஓர்வழி இல்லை
உனைமறக்க! - தீர்வும்
தெரியவில்லை!
என்னுள் தெளிவுமில்லை! உன்னுள்
புரியாமல்
போவதெல்லாம் பொய்!
.
பாவலர் அருணா
செல்வம்
20.01.2022
மார்கழியில்
ஆண்டாள் மறைவாக வேண்டினாள்!
நேர்வழியில்
வேண்டுகிறேன் நேரிழையே! - கார்வண்ணன்
ஆழ்வார்
கனவில் அழைத்திட்டான்! வந்துவிடு
வாழ்வோம்
நினைவில் மகிழ்ந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
29.12.2021
மார்கழியில்
ஆற்றோரம் மாங்குயிலின் இன்னிசையில்
நீர்ச்சொட்டும்
ஈரமுடன் நிற்கின்றாய்! - கார்காலம்
காய்ச்சலுடல்
தீண்டிடும்! கட்டிக்கொள் என்னுடலை
நோய்பயந்
தோடிடும் நொந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
29.12.2021
மார்கழிப்
பூக்களை மாலை தொடுத்தெடுத்துச்
சீர்விளங்கும்
சன்னதிக்குச் செல்கின்றாய்! - ஊர்வசியே!
உன்னிறை
நானென்(று) உணரவைப்பார் உன்னிறைவன்!
அன்றெனைத்
தேடுவாய் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
29.12.2021
மார்கழியில்
நோம்பிருக்கும் மங்கையே! என்னிடத்தில்
ஓர்வார்த்தை
பேசா(து) உருகுகிறாய்! - ஊர்சொன்ன
சொற்களால்
உண்டான சூடு தணிந்திடவே
நற்றவத்து
பெண்ணே நவில்!
.
பாவலர் அருணா
செல்வம்
28.12.2021
மார்கழியில்
பாடினால் மங்கலஞ் சேருமாம்
சீர்கொண்டு
பாடுகிறேன் செந்தமிழில்! - கூர்விழியே
பொன்னும்
பொருளும் பொலிந்திடும் ஏற்றமல்ல!
உன்னுயிரைச்
சேர்ந்தால் உயர்வு!
.
பாவலர் அருணா
செல்வம்
20.12.2021
.
மார்கழிப்
பூங்கொடியின் மஞ்சள் நிறமலரே!
வேர்விட
நன்னிலம் வேண்டுமா? - சீர்செய்து
நல்லுரம்
ஏற்றிய நல்லிதயம் இங்குண்டு!
செல்லாமல்
சேர்ந்தால் செழிப்பு!
.
பாவலர் அருணா
செல்வம்
19.12.2021
.
மார்கழியில்
இட்டுவைத்த மாக்கோலப் பூக்களெல்லாம்
யார்பார்க்க
செய்தாயோ என்றறியார்! - ஊர்மக்கள்
உன்முகத்தைப்
பார்க்க, ஒளிந்திருந்து நானறிந்தேன்
உன்னுள்ளே
என்னை உணர்ந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
16.12.2021
.
தேடிய
காதல் திகட்டியதோ என்றழுது
வாடி
வதங்கியதும், வந்துநின்று - பாடினான்!
கூடிக்
குழைவதிலும் ஊடுதல் இன்பமென்றே
மூடி
மறைத்தாள் முகம்!
.
பாவலர்
அருணா செல்வம்
02.03.2021
ஊடலின்றி
அன்புமிகுந்(து) ஊற இருந்தவளைக்
கூடலுடன்
கோமகன் கொஞ்சாமல் - வாடவிட்டுப்
பொன்பொருள்
கொண்டுவரப் போயிருக்கும் வேளையில்
தென்றலே
ஏன்வந்தாய் செப்பு?
.
பாவலர்
அருணா செல்வம்
17.10.2020
எத்தனைப் பாடினும் ஏங்கிடும் நெஞ்சத்தால்
பித்தனைப்போல் உன்னைப் பிடித்திட்டேன்! - முத்தமிழே!
மங்காப் புகழ்படைத்த மாத்தமிழை எந்நாளும்
தங்குமனம் நீயெனக்குத் தா!
.
பாவலர் அருணா செல்வம்
29.08.2020