கவலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மார்ச், 2016

வண்ண மீன்கள்!!



கண்ணைக் கவரும் தொட்டிக்குள்
   கருத்தைக் கவரும் வண்ணமீன்கள்!
பொன்னை நிகர்த்த பளபளப்பு
   பூவில் இருக்கும் நிறக்கலப்பு!
மண்ணை மறந்து நான்பார்த்தேன்
   மருண்ட மீனோ எனைப்பார்க்க
என்னை எழுத தூண்டியதே
   என்னில் இருந்த எண்ணமீன்கள்!

காலம் சுற்றும் வலைதன்னில்
   கவலை கயிறு மனமிறுக்க
ஓலம் இடவோ முடியாமல்
   ஓய்ந்தோ அமரக் கூடாமல்
மூலம் ஏதென்(று) அறியாமல்
   மௌனம் மட்டும் மொழியென்றே
ஞாலம் தன்னில் வாழ்கின்ற
   நங்கை நிலையில் அதைக்கண்டேன்!

அன்பு மொழியில் தேனுற்றி
   ஆசை வார்த்தை பலபேசி
கன்னம் சிவக்கும் பெண்ணிடத்தில்
   காதல் விதையை விதைத்திடுவார்!
இன்பம் எதுவோ அதுமுடிய
   இவளோ இனியேன்? சென்றுவிட
மின்னும் கண்ணீர் தண்ணீரில்
   மீறி தெரியா நிலைக்கண்டேன்!

கள்ளம் கொண்ட காளையரோ
   கவலை யின்றிப் பிறபெண்ணைத்
தெள்ளத் தெளிந்த மொழிபேசி
    தின்று முடிக்கக் காத்திருப்பான்!
உள்ளம் திறந்து கேட்டாலோ
    உனக்கேன் பொறாமை எனக்கேட்பான்!
பள்ளம் தன்னில் விழுந்ததினால்
   பாவம் மீன்போல் பெண்வாழ்வாள்!

கண்கள் போன்ற மீன்களெல்லாம்
   கவிதை களாகத் தெரிகிறது!
பெண்ணின் உள்ளே பலகவிதை
   பின்னப் படாமல் இருக்கிறது!
விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
வண்ண மீன்கள் சிறையிருக்க
   எண்ண மீன்கள் முடிக்கிறது!!


அருணா செல்வம்.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

நட்டநடு இரவினிலே....!!



நட்டநடு இரவினிலே
நற்பாடல் நானெழுதக்
கொட்டகொட்ட விழித்திருந்தேன்
கோணச்சொல் வரவில்லை!

பட்டமர வாழ்வதையும்
பளிங்குபோல் காட்டவரும்!
பட்டுவிரி வாழ்வதையும்
பளபளக்க எழுதவரும்!

எட்டிஎட்டி யோசித்தேன்
எட்டாமல் போனதனால்
எட்டாமல் ஏமார்ந்த
இளநரியின் நிலையானேன்!

கட்டான கவியெழுதக்
கவித்தமிழே எங்குநின்றாய்?
சட்டென்று வந்துவிடேன்
சந்தமுடன் எழுதிவிட!

மொட்டொன்று பூப்பதுபோல்
முகமலர்ந்து சிரிப்பாயே!
மெட்டோடு கவியெழுத
மெதுவாகச் சிரித்துவிடேன்!

பட்டென்று கண்ணிரண்டும்
படபடக்க பார்ப்பாயே!
பாட்டொன்று நானெழுதப்
பார்க்காமல் பார்த்துவிடேன்!

அருணா செல்வம்

20.02.2015

வெள்ளி, 16 ஜனவரி, 2015

தோழிக்காக ஒரு பாட்டு!



தொலைந்து போன ஆண்டுகளில்
    தோற்றுப் போனாள் என்தோழி!
மலைத்துப் போயே அமர்ந்தவளின்
    மதியை எண்ணிச் சிரிக்கின்றேன்!
விளைந்து விட்ட நெற்பயிரை
    வெட்டி னாலே பிறர்க்குதவும்!
வளைந்து போகும் பாதைகளும்
    வழியை நமக்குத் தந்துதவும்!

கடந்து போன வாழ்க்கையிலே
    கரைந்து போன கண்ணீரோ
கடலில் கலந்த உப்புநீரே!
    கவலை இல்லா மனிதன்யார்?
தடங்கள் இல்லா வெற்றியேது?
    தவற்றைச் சரியாய்க் காட்டிவரும்
கடவுள் இல்லா இடமெங்கே?
    இருந்தால் எனக்கும் காட்டிவிடு!

துறவு பூண்ட மனத்தினிலே
    துன்பம் கூட தூசியன்றோ?
வரவு செலவு பார்த்தாலே
    வாழும் வாழ்க்கை பாரமன்றோ?
இரவு நேர வானத்திலே
    இளைய பிறைதான் சூரியனோ?
உறவு பலமாய் அமைந்திருக்க
    உலகில் எதுவும் அமிர்தமன்றோ!

நேராய் நிமிர்ந்து வளர்ந்திருக்கும்
    நெடிய நீண்ட தென்னைமரம்!
பாராய் தோழி அதன்வேரைப்
    பல்வேர் கோணல் வளைந்திருக்கும்!
வேராய் மனமோ குலைந்தாலும்
   விரும்பி எதையும் எதிர்கொண்டால்
காராய் இருந்த மனம்கூட
    கவிதை போல அழகாகும்!
   

அருணா செல்வம்

புதன், 2 ஜூலை, 2014

சாமி இருக்கா? இல்லையா? (நிகழ்வு)


நட்புறவுகளுக்கு வணக்கம்.

     இது கொஞ்ச வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. இதில் வரும் ஆறு வயது பெண்ணைப் போன வாரம் ஒரு விழாவில் பார்த்ததும் இந்த நிகழ்வு என் ஞாபகத்தில் வந்தது.

முதலில் அன்று நடந்ததைச் சொல்கிறேன்.

    என் கணவரின் நண்பர் மகனுக்குப் பத்து வயது என்றதால் அவர்கள் வீட்டில் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அந்த விழாவிற்கு நான் என் கணவர் என் குழந்தைகள் இருவர், மற்றும் இன்னொரு நண்பர் அவர் மனைவி அவர்களின் இரண்டு குழந்தைகள் மட்டுமே அழைத்திருந்தார்கள். எங்களுடன் பையனின் தாத்தா பாட்டியும் இருந்தார்கள்.
    சனிக்கிழமை இரவு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. ஞாயிறு அங்கேயே தங்கிவிட்டோம்.
    அன்று மதியம் பிறந்தநாள் பையனை அவன் சித்தப்பா ஏதோ பரிசு வாங்கித்தருவதாகச் சொல்லி எங்கேயோ அழைத்துச் சென்று விட்டான்.
    அதன் பிறகு நாங்கள் அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் அந்த டெலிபோன் வந்தது.
   அவர்கள் சென்ற இடத்தில், விபத்து நடந்து விட்டதாகவும் பையனுக்கு பலமாக அடிபட்டு விட்டதாகவும், மூச்சு பேச்சு எதுவும் இல்லையென்றும், உடனடியாக மருத்துவமனைக்கு வர சொல்லி அழுதுக்கொண்டே அவனின் சித்தப்பா சொன்னான்.
    இதைக் கேட்டதும் அவனின் தாய் மது முகத்தில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அவள் அழுவதைக் கண்டதும் ஆண்கள் அனைவரும் எங்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் போன் பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தார்கள்.
   மது அழுதுக்கொண்டே இருந்தாள். அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நாங்களும் கவலையுடன் காத்திருந்தோம். கொஞ்ச நேரத்தில் மது “என் பிள்ளைக்கு ஒன்றும் இல்லை என்ற நல்ல செய்தி வரும் வரையில் நான் சாமி அறையை விட்டு வெளியில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு பூஜை அறையிலேயே அமர்ந்துகொண்டு பிராத்திக்க ஆரம்பித்து விட்டாள்.
  இதைக் கண்டதும் அவளின் மாமியாருக்குக் கோபம். “க்கும்... இவளுக்கு வேற வேலையே இல்லை. எப்பப்பாரு சாமி சாமின்னே இருப்பா. இவ கும்பிடுற அந்த சாமி மட்டும் உண்மையா இருந்திருந்தா எம்பேரனுக்கு இப்படி ஆயிருக்குமா.....? அதெல்லாம் சும்மா.... எழுந்து இங்க வந்து உக்காரு“ என்று கத்திச் சொன்னாள் மாமி.
   அந்த மாமி தீவிர திராவிடம். நண்பர் இந்தப் பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டதால் அவளுடைய சாமி பக்தியை இவரால் மாற்ற முடியவில்லை.
   அவள் மாமியாரின் பேச்சைக் கேட்கவில்லை. இந்த மாமி தொடர்ந்து “சாமியெல்லாம் இல்லை. அதெல்லாம் சும்மா....“ என்று சொன்னபடி இருந்தாள்.

   அந்த நேரத்தில் விழாவிற்கு வந்திருந்த இன்னொரு தோழியின் மகள் பப்பு அவள் தாயிடம் வந்து, “அம்மா அன்னைக்கி சாமி இருக்குன்னு சொன்ன. இந்த பாட்டி இல்லன்னு சொல்லறா. உண்மையில சாமி இருக்கா இல்லையாம்மா...“ என்று சத்தமாகக் கேட்டாள். அந்தக் குழந்தை அப்படிக் கெட்டதும் தோழிக்கு மிகவும்  தர்மசங்கடமாகப் போய் விட்டது. “எதுவா இருந்தாலும் அப்புறமா சொல்லுறேன். இப்போ போய் விளையாடு“ என்று சற்று கோபமாக சொல்லவும் குழந்தை பயத்துடனே அங்கிருந்து சென்று விட்டாள்.

    கொஞ்ச நேரத்தில் போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது.  நான் போய் எடுப்பதற்குள் பப்பு போனை எடுத்துவிட்டாள். நான் கை நீட்டிக் கேட்பதற்குள் “சாமி இருக்குதா இல்லையான்னு இன்னும் தெரியலை. நீங்க அப்புறமா போன் பண்ணுங்கள்“ என்று சொல்லிலிட்டு போனை அதனிடத்தில் வைத்து விட்டாள்.
   அதற்குள் அங்கே வந்த பப்புவின் அம்மா அவள் கையில் ஒரு கிள்ளுகிள்ளி விட்டு “உன்னை போன் எடுக்கக்கூடாதுன்னு எத்தனை முறை சொல்லுறது. கேட்க மாட்டே. சரி. பேசிட்டு எங்க கிட்டேயாவது கொடுத்திருக்கலாம் இல்ல....“ என்றாள் பல்லைக் கடித்தபடி கோபமாக.
   “போனுல ஒருத்தர், சாமி இருக்கா என்று கேட்டார். நான் சாமி இருக்கா இல்லையான்னு தெரியலை. அப்புறமா போன் பண்ணுங்கள்ன்னு சொன்னதும் போனை வச்சிட்டார். அதனால நானும் வச்சிட்டேன்.“ என்றாள் அழுதபடி.
   “பாரு அருணா.... போன் வந்தா பெரிய மனுஷிமாதிரி இவதான் உடனே போனை எடுக்கிறா. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்திட்டேன். கேட்கல. எங்க வீட்டுல போனைத் துர்க்கி உயரமான எடத்துல வச்சிட்டேன். இருந்தாலும் மேலே ஏறி எடுத்திடுறா. என்ன செய்யிறதுன்னே தெரியலை“ என்றாள் கவலையாக.
    நான், “சரி விடு. ஆனால் இந்த நேரத்தில் யார் அது இந்த மாதிரி கேள்வி கேட்டு போன் பண்ணுவது“ என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மருத்துவமனையிலிருந்து போன் வந்தது.

(தொடரும்)
பதிவு மிகவும் நீண்டு இருப்பதால் அடுத்த பதிவில் மீதியைச் சொல்கிறேன்.

அருணா செல்வம்.

02.07.2014

வெள்ளி, 27 ஜூன், 2014

ஏன் இந்த ஆண்களெல்லாம் இப்படி இருக்கிறார்கள்?



    மதுரைத் தமிழன் அவர்கள் தொடர் பதிவு எழுதச் சொல்லி தொடங்கியதில் இருந்து நிறைய பதிவர்கள் தங்களின் மனதில் பட்டதைப் பதிவாக போட்டு அசத்தி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்தது தான்.

   ஆனால்.....
   மூன்றாவது கேள்விக்கும் ஒன்பதாவது கேள்விக்கும் ஒரு சில ஆண்கள் கொடுத்திருக்கும் பதில் இருக்கிறதே..... மதுரைத் தமிழன், பகவான் ஜி, பால கணேஷ் ஐயா, ரஹிம் கஸாலி..... இன்னும் ஒரு சிலர் பெயர்களை மறந்து விட்டேன்.
   இவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணியதால் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. எங்களுக்காவது பரவாயில்லை.
   பதிவுகளைப் படிக்கும் திருமணமாகாத இளஞர்கள்... சீனு, ஹாரி, அரசன், அ. பாண்டியன் போன்றோர்கள் உங்களின் பதில்களில் பயந்து விட மாட்டார்களா....?))) ஏங்க சின்ன பிள்ளைகளை இப்படி பயமுறுத்துகிறீர்கள்...?

   பாவேர்தர் பாரதிதாசனின் “குடும்பவிளக்கில்“ ஒரு முதுமைக் காதல் பாடல்

புதுமலர் அல்ல! காய்ந்த
   புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லாள்
   தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
   வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக்(கு) இன்பம் நல்கும்?
   “இருக்கின்றாள்“ என்ப தொன்றே!

இப்படி அல்லவோ ஒவ்வோர் கணவனும் தன் மனைவியை நினைக்க வேண்டும்.

சரி இதை விடுங்கள்.

   ஆண்களுக்குச் சிரிக்கவே தெரியாதா....? அல்லது வராதா....? கல்யாணத்திலிருந்தே ஏதோ பறிகொடுத்த மாதிரியே முகத்தை சீரியஸாகவே வைத்துக்கொண்டு இருந்தால் எந்த பொண்ணுக்குத் தான் கோபம் வராது? இதைக் கொஞ்சமாவது மாற்றிக்கொள்ளுங்கள் ஆண்களே.
   சிரிக்க பழகுங்கள். ஆழ்ந்த சிரிப்பில் கூட ஏதோ ஒரு சிறு வலி இருந்துகொண்டே தான் இருக்கும். இருந்தாலும் மற்றவர்களுக்காவது சிரிக்க பழகுங்கள்.
   என்னடா இது அருணா அட்வைஸ் எல்லாம் பண்ணுதே என்று எண்ணிவிட வேண்டாம்.
   அருணா சொன்னால் மட்டும் சிரிப்பு வந்து விடுமா என்றும் நினைக்க தோன்றுகிறதா...?
   பேசாமல் இந்த ஜோக்கைப் படித்துப் பாருங்கள். ஜோக் புரிந்தால் உங்களுக்குத் தானாக சிரிப்பு வரும்.
   ஒரு தபால் ஆபிஸில் ஒருவர் எதையோ எழுத நினைத்துத் தன் பேனாவை எடுத்து எழுதிய போது அது சரியாக எழுதவில்லை. முள் உடைந்து விட்டதா... அல்லது பேனாவில் மை இல்லையா என்பது தெரியாமல் அதை உதறி உதறி எழுத முயற்சித்துக் கொண்டு இருந்தார்.
   அந்த நேரத்தில் ஒருவர் ஏதோ ஒரு பாரத்தில் கையெழுத்திட பேனா இல்லாததால் இவரிடம் வந்து, “ஐயா... கொஞ்சம் பேனா தர்றீங்களா...?“ என்று கேட்டார்.
   ஏற்கனவே எரிச்சலுடன் இருந்தவர் திரும்பி அவரைப் பார்த்து, “ம்ம்ம்.... இப்போ ஸ்டாக் இல்லை. காலையில வா. கொஞ்சமென்ன... எல்லாத்தையும் நீயே எடுத்துக் கொண்டு போ“ என்றார்.
   வந்தவர் எதுவும் விளங்காமல் “ஙே“ என்று விழித்தபடி சென்றார்.

   என்ன நண்பர்களே சிரித்தீர்களா....? சிரிப்பு வரவில்லை என்றால் என் தவறு இல்லை.

சிரியுங்கள். சிரியுங்கள். சிரித்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.


இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த நினைத்து எழுதியது இல்லை.

வியாழன், 10 ஏப்ரல், 2014

இது யாருடைய தவறு? (அனுபவம்)






 இரண்டு மாதங்களுக்கு முன் என் தோழி, இந்தியாவிலிருந்து வந்திருந்த தன் அம்மாவை டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாள். அவரை சோதித்த டாக்டர், இரத்தப் பரிசோதனை தாளைப் பார்த்து விட்டு அவருக்கு கொழுப்பும், சர்க்கரையும் குறைவான தைராய்டும் இருப்பதாகச் சொல்லி மருந்து எழுதி தந்தும் இருக்கிறார்.
    அந்த அம்மா நம் ஊரிலேயே கொழுப்பிற்கும் தைராய்டுக்கும் மருந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறார். இங்கேயும் அதே மருந்தைத் தான் டாக்டர் மூன்று மாதத்திற்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதனால் அந்த அம்மா தொடர்ந்து அந்த மருந்துகளைச் சாப்பிட்டும் இருக்கிறார். இதன் நடுவில் கொழுப்பைக் குறைக்க உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி என்று ஏதேதோ செய்தும் இருக்கிறார்.
   இப்படியே இருக்க...
   போன மாதம் ஒரு நாள் என்தோழி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “அருணா... அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை. டாக்டரிடம் அப்பாய்மெண்ட் வாங்கிவிட்டேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு வேலை. நான் வேலைக்குப் போயே ஆகவேண்டும். அதனால நீ அவங்களை அழைத்துக்கொண்டு போக முடியுமா...?“ என்று கேட்டாள்.
  நானும் சரியென்று சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் சென்றேன். அந்த அம்மாவிற்குப் பிரென்சு மொழி தெரியாததால் நானே அவர்களுக்கு என்ன என்ன செய்கிறது என்று கேட்டு அதை டாக்டரிடம் சொன்னேன்.
   அவர்கள், “இதயம் அடிக்கடி படப்படப்பாக இருக்கிறது. வாயிற்றுப் போக்கு இருக்கிறது, உடம்பெல்லாம் வலிக்கிறது“ என்று சொன்னதை நான் டாக்டரிடம் சொன்னேன்.
   டாக்டர் அவரைப் பரிசோதித்து விட்டு உடம்பு வலிக்கும் வயிற்று போக்கைக் கட்டுப்படுத்தவும் மாத்திரைகளை எழுதித் தந்தார். அதனுடன் இரத்தப் பரிசோதனைக் கான சீட்டையும் தந்து, தான் ஒரு மாதகால விடுமுறையில் செல்ல இருப்பதால் அவசியம் இரண்டு நாளில் இரத்தப் பரிசோனை ரிசல்ட்டுடன் வந்து தன்னைப் பார்க்கும் படி சொன்னார்.
   நானும் மருந்தை வாங்கிக் கொடுத்துவிட்டு விசயத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
   மூன்று நாள் கழித்து தோழி மீண்டும் அழைத்தாள். “இரத்தப் பரிசோதனையின் தாள் சற்றுத் தாமதமாகக் கிடைத்துவிட்டதால் அந்த டாக்டரைப் பார்க்க முடியவில்லை. அதனால் வேறு ஒரு டாக்டரிடம் அப்பாய்மெண்ட் வாங்கி விட்டேன். ஆனால் அதற்கும் என்னால் போக முடியாது. அதனால் நீ தான் போகவேண்டும்“  என்று என்னிடம்  கெ(கொ)ஞ்சினாள்.
   திரும்பவும் நானே அந்த அம்மாவை வேறு ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர், அம்மாவைப் பரிசோதித்து விட்டு, “தைராய்டுக்கு மாத்திரை எடுக்கிறீர்களா...?“ என்று கேட்டார். நான் அந்த அம்மாவிடம் கேட்டேன். அந்த அம்மாவும் தான் பல வருடங்களாக தைராய்டுக்கு மாத்திரை எடுப்பதாகவும், அந்த மாத்திரை இன்னும் இருப்பதாகவும் சொன்னதை டாக்டரிடம் சொன்னேன். “தொடர்ந்து தைராய்டு மருந்தை எடுங்கள். நல்ல சத்தான உணவாகச் சாப்பிடுங்கள்“ என்று சொல்லி வைட்டமின் டி, டானிக், மாத்திரை என்று எழுதிக் கொடுத்தார்.
    மருந்தை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு டாக்டர் சொன்னதையும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

    ஆனால் அடிக்கடி போன் செய்து விசாரித்தேன். தோழியின் அம்மா எப்பொழுதுமே உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கிறார்கள் என்ற பதில் வரும். கவலையாக இருக்கும். இருந்தாலும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நாளாக சரியாகிவிடும் என்று தோழிக்கு ஆறுதல் சொன்னேன்.

    ஒரு மாதம் கழித்து என் தொழி, நேற்று அவர்களின் டாக்டர் ஊரிலிருந்து வந்ததும் தன் அம்மாவை அழைத்துச் சென்று காட்டிவிட்டு வந்ததும் எனக்குப் போன் செய்தாள். எடுத்ததும்... “அருணா... போன மாதம் டாக்டரிடம் அம்மாவை அழைச்சிக்கினு போனியே... அப்போ இரத்த டெஸ்ட் தாளை டாக்டரிடம் காட்டினியா...?“ என்று கேட்டாள்.
   “ஓ... காட்டினேனே.... அவங்க கூட தைராய்டு இருப்பதாகவும் அதற்கு மருந்து தொடர்ந்து சாப்பிடவும் சொன்னார்கள்“ என்றேன்.
   “அவங்களே மருந்து எழுதித் தரலையா...?“
   “இல்லை. அம்மா தைராய்டு மாத்திரை வீட்டில் நிறைய இருக்கிறது என்றார்கள்“ என்றேன்.
   “அறிவிருக்கா....? அவங்க சொன்னா நீ கேட்டு எழுதி வாங்கறது இல்லையா...? அதனால இப்போ எவ்வளவு பிரட்சனைப் பார்“ என்றாள் கோபமாக.
   எனக்கோ ஒன்றும் புரியவில்லை. நடந்ததை ஒரு முறை அசைபோட்டுப் பார்த்தேன். என் மீது தவறு எதுவும் இருந்தது போல் எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் அவளின் அம்மா. அவர்கள் எனக்கும் அம்மா மாதிரி தான். அவர்களின் உடல் விசயத்தில் என்ன அலட்சியமாக நடந்துகொண்டேன் என்பது புரியாததால், “ஏன்... இப்போ என்னவாச்சி?“ என்று பயத்துடனே கேட்டேன்.
    என் குரலில் இருந்த பயத்தை அறிந்த அவள் தன் குரலைச் சற்று மென்மையாக்கி, “நீ மட்டும் என்ன செய்வ? தைராய்டு பத்தி உனக்கு என்ன தெரிந்திருக்கும்...? உன்னோட தப்பில்லை. என்னோட தப்பு தான். இருந்தாலும் நீ டாக்டரிடம் தைராய்டு மாத்திரையைக் கேட்டு எழுதி வாங்கி வந்திருக்கலாம்“ என்றாள்.
   திரும்பத் திரும்ப இதே பல்லவியா...? எனக்கு எரிச்சலாகியது. “ஏன் இப்போ என்னாச்சி? சொல்லித் தொலையேன்“ என்றேன் சற்று கோபமாக.
   அவள் சொன்னாள்...

   தன் அம்மாவிற்கு பல வருடங்களாக கொலஸ்டிரால், தைராய்டு குறைவாக இருப்பதால் அதை அதிகப் படுத்தும் மாத்திரையையும் சாப்பிட்டு வருகிறார்கள்.
   பிரான்சுக்கு வந்த துவக்கத்தில் டாக்டர் அதே மருந்துக்களையே எழுதித் தந்தார். கூடவே உணவு கட்டுப்பாடு நடைபயிற்சி என்று மூன்று மாதம் முழு மூச்சாய் செய்து இருக்கிறார்கள். அதனால் கொழுப்பும் குறைந்து விட்டது. கூடவே தைராய்டும் சாதாரண நிலையை விட மிக அதிகமாகி விட்டிருக்கிறது.
   மிக அதிமாகி விட்ட தைராய்டுக்கு மேலும் மேலும் தொடர்ந்து அதை அதிகப்படுத்தும் மாத்திரையையே சாப்பிட்டு இருக்கிறார்கள்.  இதனால் இதயத் துடிப்பு அதிகமாகவும், வயிற்று போக்கு, எடைக்குறைவு, எலும்பும் தசையும் சுறுங்கியதால் உடல்வலி என்று பல துன்பங்கள் வந்திருக்கிறது.
   இதற்கு நடுவில் நான் அவர்களை இரத்தப் பரிசோதனை தாளுடன் அழைத்துச் சென்ற போது டாக்டர் தைராய்டுக்கு மாத்திரைச சாப்பிடுவதைப் பற்றி கேட்டார். ஆனால் அது அதிக தைராய்டுக்கான மருந்தா? குறைவான தைராய்டுக்கான மருந்தா? என்று நாங்கள் அறியவில்லை. தைராய்டு என்பது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்.
     மருந்து தொடர்ந்து சாப்பிடுகிறார் என்றதும் அவரும் தைராய்டு அதிகமாக உள்ளதற்குத் தான் சாப்பிடுகிறார் என்று விட்டுவிட்டார். அதை அறியாமல் அந்த அம்மாவும் தொடர்ந்து அதே மருந்தைச் சாப்பிட்டு விட்டு மேலும் மேலும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
  
    நான் டாக்டரிடம் தைராய்டுக்கான மாத்திரையைக் கேட்டிருக்க வேண்டும். அல்லது அந்த அம்மாள் சாப்பிட்ட மருந்தையாவது அல்லது டாக்டர் ரசிதையாவது கொண்டு சென்றிருக்க வேண்டும். அல்லது... அம்மாவின் இரத்தப் பரிசோதனை தாளையாவது ஒரு முறை சரியாகப் பார்த்திருக்க வேண்டும். இதையெல்லாம் நினைத்தபோது நான் செய்தது தான் தவறு என்பது புரிந்தது.
   அந்த அம்மாவிடம் உடனே மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் அது தன்னடைய தவறு என்றார்கள். தோழியோ அது தன்னுடைய தவறு என்றாள்.
   உண்மையில் இது யார் தவறு? சொல்லுங்கள் நட்புறவுகளே.

அருணா செல்வம்
10.04.2014