மலர் கொண்டு வந்து கொடுத்தக் காபியை
ஒரு வாய் குடித்துவிட்டு மலரை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம். மலர் சினேகிதமாக
புன்னகைத்தபடி அவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
“மலர்.... உங்கிட்ட தனியாகப் பேச
வேண்டும் என்று தான் மஞ்சுவைக் கூட கூட்டிட்டு வரவில்லை.“ என்று பீடிகையுடன்
தொடங்கினான்.
தன் கணவரின் நண்பன். எப்பொழுதும்
மனைவியுடன் வரும் விக்ரம் இந்த முறை தனியாக வந்திருக்கிறானே... என்று யோசனையில்
இருந்த மலர், இவன் இப்படி சொன்னதும், இவருக்கு நம்மிடம் பேச என்ன இருக்கிறது
என்பது போல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“மலர்.... இந்த நவம்பர் வந்தால் என்
தங்கை கௌரிக்கு முப்பது வயசு தொடங்குது. உனக்குத் தெரியுமில்ல....?“ அவன்
கேட்டதும்..... கொஞ்சம் தெளிந்து, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு “ம் தெரியும்“
என்றாள்.
“அவ கிட்ட நீயாவது பேசி பாரேன்“
என்றான் கவலையாக.
“நான் என்னங்க பேசுறது. நீங்கள்
தான் ஒரு முடிவுக்கு வரணும். கௌரி மேல உங்களுக்கு இல்லாத அக்கரையா எனக்கு வந்திட
போகுது....?“
“உண்மைதான் மலர். ஆனால் எங்க
பேச்சை அவ கேட்கலையே.... நீ அவ கிட்ட கொஞ்சம் நெருக்கமா பேசுவே. அதோட பெண் என்றால்
அவளும் மனம் விட்டு பேசுவா இல்லையா...?“
“ஏன்... உங்க மனைவி மஞ்சு
கௌரிகிட்ட நல்லா தானே பேசுவாங்க. பிறகென்ன?“
“பேசுவாங்க தான். ஆனாலும் அண்ணி
நாத்தனார் என்ற டிஸ்டன்ஸ் இருக்கத்தான் செய்யுது. அதனால நீ பேசு. அவளோட
கல்யாணத்தைப் பத்தி அவ எந்த முடிவுக்கு வந்தாலும் நான் ஏத்துகிறேன்ன்னு
சொல்லு.....“
“எந்த முடிவா....
அப்படியென்றால்....?“ புரியாமல் கேட்டாள் மலர்.
“மலர்... உனக்குத் தெரியாதது
எதுவும் இல்லை. எனக்கு படிப்பு முடியறதுக்குள்ள காதல் கல்யாணம் என்று அவசர அவசரமாக
வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதாகி விட்டது. கௌரிக்கு என்னை விட்டா யாரும் இல்லை. வாழ்க்கையில
கொஞ்சம் வசதியா வாழனும்ன்னா பணம் வேணும். அதுக்கு நல்லா படிச்சி பெரிய வேலைக்குப்
போகனும். அதுக்கு முன்னால காதல் கீதல் என்று வந்துவிட்டால் என்னை மாதிரித்தான்
கஷ்டப்படனும் என்று அவளிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
படிப்பை முடிச்சிட்டா. நல்ல வேலை கெடைச்சுது.
நானும் அவ வேலைக்குப் போனதும் வரன் தேட ஆரம்பிச்சேன். எனக்கு இப்போ கல்யாணம்
வேண்டாம். ரெண்டு மூனு வருஷம் சம்பாதிக்கிறேன். அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு
சொன்னா. நானும் சரின்னு விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறா. அஞ்சு வருஷமா
மாசாமாசம் சம்பளத்துல பாதிய கொடுத்திடுறா. நானும் ரெண்டு வருஷம் கழிஞ்சதும் வரன்
தேட ஆரம்பிச்சேன். வரன் தேடித் தேடி எந்த வரனைக் காட்டினாலும் ”வேண்டாம். என்னை இப்படியே விட்டுடுங்க” என்கிறாள். கொஞ்சம் கோபமாகப் பேசினால்.... ”நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க. வீடு
தனியாக எடுத்துக்கொண்டு போய் விடுறே”ன்னு சொல்லுறா.... அவ சம்பளத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறதால தான் நான் அவளைக்
கல்யாணம் செஞ்சி குடுக்க மாட்டேங்கிறேன்னு வெளிப்படையாவே சிலர் பேசுகிறாங்க மலர்.
எனக்கு இதுவே பெரிய கவலையா இருக்குது“ என்றான் கவலையுடன் விக்ரம்.
மலர் கௌரியுடன் சினேகிதமாகப் பேசி
இருந்தாலும் இதுவரையில் அவளின் திருமணத்தைக் குறித்துப் பேசியதில்லை. ஆனால்
அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஓர் ஓரத்தில் இருந்து அரித்துக்
கொண்டே தான் இருந்தது. இப்பொழுது அவளின் அண்ணனே இது குறித்துப் பேச வந்த்தும்
வெளிப்படையாகப் பேச அரம்பித்தாள்.
“மத்தவங்க பேசுறதையெல்லாம் விடுங்க.
ஆமா.... ஏன் கௌரி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றா...? ஏதாவது காதல் கீதல் இருக்குமோ.....?“
சந்தேகத்துடன் கேட்டாள் மலர்.
“எனக்கு தெரிஞ்சி அதெல்லாம் இல்லை.
ஆனால் இப்போ இருக்கிற நிலையில அவ யாரை கை காட்டுறாளோ அவனை கட்டி வைக்கத் தயாரா
இருக்கேன்.“ என்று சொல்லி நிறுத்தியவன், “ப்ச்சி.... ஒரு காலத்துல படிப்பு மட்டும்
தான் முக்கியம். காதல் கீதல் என்று வந்திடாதே என்றேன். அவ வேலைக்கு போக
ஆரம்பிச்சதும்... ஏதாவது நம்ம ஊரு காரன், நம்ம ஜனமா இருந்தா கட்டி வக்கிறேன்னு
ஜடைமாடையா சொன்னேன். ஆனா இப்போ.... எந்த சாதி மதமா இருந்தாலும் பரவாயில்ல, எந்த
நாடு மொழி மாறி இருந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு எறங்கி வந்திட்டேன்.“
என்றான் கவலையாக.
விக்ரமைப் பார்க்கும் பொழுது மலருக்குச்
சற்று கவலையாகத் தான் இருந்தது.
என்ன செய்வது? பிடிவாதத்தைத்
தளர்த்தும் போது தானே தெரிகிறது.... நாம் பிடித்திருந்தது பிடிக்காத ஒன்றை என்று.
“சரி விக்ரம். நான் அவளிடம் பேசிப்
பார்க்கிறேன்“ என்று மலர் சொன்னதும் பெருமூச்சுடன் கிளம்பினான்.
(தொடரும்)
(இன்று நேரமில்லை. நாளைக்குப் பேசி (கதையை) முடித்து விடுகிறேன்.....)
