கண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

மீன் விழி!!

எனது முகநுர்ல் கவிதைகள்!

மீன் விழியாள்!




மீனவர்கள்
மீன் பிடிக்க
போகிறார்கள்.
அன்பே.... உன்
கண்களை உடனே
மூடிக்கொள்!

-------------------------------------------------------------------------------------------------- 

கதை சொல்லும் கண்கள்!




கண்ணுக்குள்
மறைத்துள்ள
காவியங்கள்
எத்தனை பெண்ணே?
எனைப் பார்க்கும்
உன் கலை கண்கள்
அத்தனை கதை
சொல்கிறதே!

 -----------------------------------------------------------------------------------------------------------------


விழி மீன்கள்!


வலை வீசி
மீன் பிடிப்பான்
மனிதன்!
இங்கே
இரு மீன்கள்
என்னை
வலை வீசிப் பிடித்த
மாயம் தான் என்ன...!  

 -------------------------------------------------------------------------------------------------------

படபடப்பு!



படபடப்பாய்ப்
பார்க்காதே பெண்ணே...
பட்டாம் பூச்சிகள்
பார்த்து விட்டால்
மயங்கி மதியிழந்து
தன் இனத்தை
மறந்து விடும்!

 ----------------------------------------------------------------------------------------------


வேல் விழியாள்!



விழியில் வேலை
வைத்திருக்கிறாயா?
பார்த்ததும்
நெஞ்சைக் கிழித்துத்
தஞ்சம்

புகுந்து விட்டதே!



அருணா செல்வம்
28.02.2015

வெள்ளி, 10 அக்டோபர், 2014

வண்ண மீன்கள்!!



கண்ணைக் கவரும் தொட்டிக்குள்
   கருத்தைக் கவரும் வண்ணமீன்கள்!
பொன்னை நிகர்த்த பளபளப்பு
   பூவில் இருக்கும் நிறக்கலப்பு!
மண்ணை மறந்து நான்பார்த்தேன்
   மருண்ட மீனோ எனைப்பார்க்க
என்னை எழுத தூண்டியதே
   என்னில் இருந்த எண்ணமீன்கள்!

காலம் சுற்றும் வலைதன்னில்
   கவலை கயிறு மனமிறுக்க
ஓலம் இடவோ முடியாமல்
   ஓய்ந்தோ அமரக் கூடாமல்
மூலம் ஏதென்(று) அறியாமல்
   மௌனம் மட்டும் மொழியென்றே
ஞாலம் தன்னில் வாழ்கின்ற
   நங்கை நிலையில் அதைக்கண்டேன்!

அன்பு மொழியில் தேனுற்றி
   ஆசை வார்த்தை பலபேசி
கன்னம் சிவக்கும் பெண்ணிடத்தில்
   காதல் விதையை விதைத்திடுவார்!
இன்பம் எதுவோ அதுமுடிய
   இவளோ இனியேன்? சென்றுவிட
மின்னும் கண்ணீர் தண்ணீரில்
   மீறி தெரியா நிலைக்கண்டேன்!

கள்ளம் கொண்ட காளையரோ
   கவலை யின்றிப் பிறபெண்ணைத்
தெள்ளத் தெளிந்த மொழிபேசித்
    தின்று முடிக்க காத்திருப்பான்!
உள்ளம் திறந்து கேட்டாலோ
    உனக்கேன் பொறாமை எனக்கேட்பான்!
பள்ளம் தன்னில் விழுந்ததினால்
   பாவம் மீன்போல் பெண்வாழ்வாள்!

கண்கள் போன்ற மீன்களெல்லாம்
   கவிதை களாகத் தெரிகிறது!
பெண்ணின் உள்ளே பலகவிதை
   பின்னப் படாமல் இருக்கிறது!
விண்ணின் அளவு கற்பனைகள்
    வெளியில் கொட்டத் துடிக்கிறது!
வண்ண மீன்கள் சிறையிருக்க
   எண்ண மீன்கள் முடிக்கிறது!!


அருணா செல்வம்.