இத்தாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இத்தாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 செப்டம்பர், 2014

ரோமாபுரி சிற்பங்கள் சில.... (இத்தாலி -6)


  
இது போல் பல கூடங்கள் உள்ளன.

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இத்தாலியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ள சிலைகளின் சில படங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன். கண்டுகளியுங்கள்.

















அருணா செல்வம்

18.09.2014

புதன், 10 செப்டம்பர், 2014

உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள்!! (இத்தாலி- 5)



    6.08.2014 அன்று காலையில் உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயத்தைப் பார்த்து விட்டு வெளிவந்ததும் கைடுகள் நம்மைச் சூழ்ந்து கொண்டார்கள்.
   ரோம் நகரத்தின் முக்கிய பழங்கால ஓவியங்கள் சிலைகள் உள்ள நினைவு இடத்தைப் பார்க்கச் சொன்னார்கள். அதைப்பற்றி விசாரித்தோம். வாட்டிகானின் முக்கியமான “சிஸ்டீன்த் கோபுரம்“ உள்ள இடம் தான் அந்த கண்காட்சியகம் என்றார்கள்.


   உள்ளே போக ஒருவருக்கு 16 யுரோ. ஆனால் இரண்டரை மணிநேரம் வரிசையில் நிற்க வேண்டும் என்றார்கள். வரிசையில் நிற்காமல் உள்ளே செல்ல வேண்டும் என்றால் 33 யுரோ. இந்த டிக்கெட்டைக் கைடுகளே தருவார்களாம். 33 யுரோ அதிகம் என்று நாங்கள் வரிசையில் நடக்கத் துவங்கினோம்.


   அப்பொழுது ஒரு கைடு, “மேடம்..... உள்ளே ஆயிரம் அறைகள் உள்ளன. காலையிலேயே வந்திருந்தாலும் பரவாயில்லை. மணி இப்பவே மதியம் இரண்டாகி விட்டது. இங்கிருந்து உள்ளே போகவே குறைந்தது நாலரை ஐந்தாகிவிடும். பிறகு நேரம் போதாது. நான் வேண்டுமானால் ஒரு டிக்கெட் 30 யுரோவிற்குத் தருகிறேன்“ என்றார்.

1000 அறை கட்டிடத்தின் உட்புறம்

   எனக்கு என்னவோ ஒரு மியுசியத்தைப் பார்க்க ஒருத்தருக்கு 16 யுரோ என்பதே அதிகமாகத் தெரிந்தது. அதிலும் 30 யுரோ மிக அதிகம். “வேண்டாம்“ என்று சொல்லிவிட்டு வரிசையில் நடந்தோம்.
   அந்தக் கைடு சொன்னது போலவே ஐந்து மணிக்குத் தான் மியுசியத்தின் உள்ளே நுழைய முடிந்தது.


   உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ஆயிரம் அறைகளில் மிகப் பழங்கால ஓவியங்கள். கி.பி 73 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரையிலான ஓவியங்கள் காட்சிக்கு ஆண்டவாரியாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது.


   சில அறைகளில் பழங்கால சிலைகள். துணியில் வரையப்பட்ட ஓவியங்கள், பழங்கால கைவினைப் பொருட்கள், முக்கியமாக “த்ரி டி“ ஓவியங்கள்.... கண்கொள்ளா காட்சி!!


   அதில் உலகப் புகழ் பெற்ற “மைக்கேல் ஆன்ஸ்“ ஓவியங்களைப் பற்றி சொல்லவே வார்த்தை இல்லை. உண்மையில் பிரமித்துப் போனேன்.
   காரணம்..... ஓர் அறைக்குள் நுழைந்த போது சுற்றிலும் அழகிய பயங்கால சிலைகள். எவ்வளவு நுணுக்கமாகச் செய்திருக்கிறார்கள் என்ற வியந்து போய் அதிசயமாகப் பார்த்தேன். ஆனால் சற்று உற்று பார்த்த போது தான் தெரிந்தது அது சிலைகள் இல்லை. ஓவியங்கள் என்று. என்னால் நம்பவே முடியவில்லை. அவையெல்லாம் சிலைகள் தான் என்ற குழப்பத்தும் அருகில் சென்று தொட்டுப் பார்த்தேன். சிலைகளுக்குறிய மேடு பள்ளங்கள் இல்லாத வெறும் சுவற்றின் மேல் கை வைத்த உணர்வால் தான் இது சிலை அல்ல. சித்திரங்கள் என்ற உண்மை விளங்கியது.


சிலையைப் போன்ற ஓவியம்

   நாங்கள் ஒரு இருநூறு அறைகளைத்தான் பார்த்திருப்போம். அதற்குள் மணி எட்டாகி விட்டது. மேலும் ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்கலாம். ஆனால் காலையிலிருந்து அலைந்த களைப்பால் வெளிவந்து விட்டோம்.





2010 ஓவியங்கள் உள்ள அறைகள்

   இன்று ஒரு சில ஓவியங்களை மட்டும் வெளியிட்டுள்ளேன். சில அறைகளில் ஓவியங்களைப் படம் பிடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அடுத்தப் பதிவில் சிலைகளின் படங்களை வெளியிடுகிறேன்.

அன்புடன்
அருணா செல்வம்.

10.09.2014

புதன், 20 ஆகஸ்ட், 2014

“பைசா“ கோவில்!! (COMPO DEI MIRACOLI - இத்தாலி-3)

  
நட்புறவுகளுக்கு வணக்கம்.
    போன பதிவில் “பைசா“ சாய் கோபுரம் வரையில் எழுதியிருந்தேன். இன்று அதன் அருகில் உள்ள கோவிலையும் கல்லறையையும் பார்த்த அனுபவத்தைத் தொடர்கிறேன்.
  நீங்கள் எல்லாம் திட்டுவது மனக்காதில் விழுவதால்.... அதிகமாக வளவளவென்று எழுதாமல் மிகச் சுறுக்கமாக எழுத முயல்கின்றேன்.

    மறுநாள் 05.08.2014 காலை பைசா அருகில் இருந்த ஒரு தோட்டத்திற்குச் சென்றோம். உள்நுழைய ஒருவருக்கு 2.50 யுரோ. அங்கே சென்றால் மிகப்பெரிய பெரிய மரங்கள்... செடி கொடிகளை மட்டும் தான் பார்த்தோம். பூக்கள் எதுவும் இல்லை. நாங்கள் போன நேரம் சீஸன் இல்லையாம். ஒரே ஒரு தாமரை குளம் மட்டும் தான் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அதை மட்டும் ஒரு கிளிக்.

தாமரைக் குளம்


    திரும்பவும் பைசா கோபுரம் அருகில் வந்து கொம்போசன்டோ மொனிமென்டல், பத்திஸ்டர் இரண்டு இடங்களையும் பார்க்க நுழைந்தால்.... அதிக மக்கள் இருப்பதால் கொம்போசன்டோ மொனிமென்டல் மட்டுமே பார்க்க டிக்கெட் கிடைத்தது.
   அதற்கு முன் நேற்று இருந்த டிக்கட்டுடன் மிராக்கொலி (COMPO DEI MIRACOLI) கோவிலுக்குள் நுழைந்தோம்.


COMPO DEI MIRACOLI - கோவில்- கி.பி 1161

 சுற்றுச் சுவர்

கோவில் மேல் சுவர்.

கோவில் உள்

   கோவிலில் பூசை (மேஸ்) நடப்பதில்லையாம். வெறும் பார்வையாளர்கள் வந்து போகும் இடமாக மட்டுமே உள்ளதாம்.

சாம் ரெனியர் (SAM RANIER

   கோவிலைக் கட்டிய சாம் ரெனியர் (SAM RANIER) அவர்களின் உடலைப் பதப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்த உடலைப்பற்றி எழுதிய பலகை முழுவதும் இத்தாலி மொழியிலே இருந்தது. அதனால் அதன் முழு வரலாறும் தெரியவில்லை.


   ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கைடுகள் பக்கம் காதை நீட்டினால்..... பழைய மாதிரி இல்லைங்க இங்கே இருக்கும் கைடுகள். இப்பொழுதெல்லாம் கைடுகள் பார்வையாளர்களைக் கூட்டமாகச் சூழ வைத்துச் சத்தமாக பேசி விளக்குவது இல்லை. அப்படி விளக்கினால் நம் காதகளிலும் விழுந்து.... ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இங்கே இவர்கள் அனைவரிடமும் ஒரு சிறிய மசினுடன் கூடிய எட்போன் கொடுத்து விடுகிறார்கள். கைடு தன்னிடம் உள்ள சிறு மைக்கில் இடத்தைப் பற்றி மிகவும் மெதுவாகவே விளக்குகிறார். பார்வையாளர்கள் எங்கே வேண்டமானாலும் இருந்து கொண்டு அவர் சொல்வதைக் கேட்டு அறிந்துக் கொள்கிறார்கள். அதனால் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இரைச்சல் இல்லாமல் இருக்கிறது.


   ஆனால் நமக்கு எதுவும் காதில் விழாதது கொஞ்சம் கவலை தான்.....(( கவலையடன் கொம்போசன்டோ மொனிமென்டலுக்கு வந்தோம்.
  
கொம்போசன்டோ மொனிமென்டல் (COMPOSANTO MONUMENTALE)

நுழைவு

   இதனுள் நுழைய ஒருவருக்கு 5.00 யுரோ. இது கிருஸ்த்தவ பாதிரிமார்களின் கல்லறை. இது எத்தனை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மிக மிக பழமை வாய்ந்தது என்று மட்டும் சொல்லப்படுகிறது. ஆனால் இத்தாலியின் போருக்குப் பிறகு 1944 ல் இதைப் புதுப்பித்து இருக்கிறார்கள். இன்றளவும் வேலை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

பாதிரிமார்களின் கல்லறை. 

கடைசி கல்லறை

                       பாதிரிமார் எலும்பு

பாரிதிமார்களின் எலும்புகள்

உள் பக்கம்

   போர் முடிந்த பிறகு கிடைத்த பாரிதிமார்களின் எலும்புகளைப் பாது காத்து வைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. கல்லறையின் கீழ் எழுதி இருக்கும் ஆண்டுகள் பழைய ரோமன் எழுத்துக்களில் எழுதப்பட்டு உள்ளன.

   நாங்கள் முதல் பாதி நாளைப் பைசாவில் கழித்துவிட்டு ரோமில் இருக்கும் வாட்டிகானுக்குப் பயணமானோம். இங்கிருந்து மூன்று மணிநேர இரயில் பயணம். கிட்டத்தட்ட அறுநூறு மிலோ மீட்டர். ஒருவருக்கு 26 யுரோ. ரோம் நகரம் வந்து ஓட்டலில் சேர இரவு ஒன்பது ஆகிவிட்டது.
   அடுத்தப் பதிவில் ரோம் நகர வட்டிகான் நகரத்தில் உள்ள உலகின் முதல் பெரிய கிருஸ்துவ ஆலயத்தைப் பற்றி எழுதுகிறேன்.
   
அருணா செல்வம்
20.08.2014

   

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

“பைசா“ நகரத்துச் சாய் கோபுரம்!! ( இத்தாலி - 2)

பைசா சாய் கோபுரம்

   எட்டு உலக அதிசயங்களில் “பைசா“ நகரத்துச் சாய்ந்த கோபுரமும் ஒன்று என்று நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்பதை நான் அங்கே சென்ற பிறகு தான் அறிந்து காண்டேன்.

    பைசா நகரத்துக் கோபுரம் மற்றும் அதன் அருகிலேயே உள்ள “கொம்போ டை மிராக்கொலி“ (COMPO DEI MIRACOLI) என்ற கோவில், அதற்கும் முன் பகுதியில் “பப்திஸ்த்ர் தி பீஸ்“ (BAPTISTERE DE PISE) என்ற கோபுரமும் ஒன்று சேர்த்து வடிவமைக்கப் பட்டே கட்டப்பட்டது.

    மூன்று இடங்கள்

   இந்த மூன்று இடங்களுமே வெறும் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுள்ளது. இளம் பச்சை கலந்த மார்பல் கல். இதனால் இரவில் கூட விளக்கு வெளிச்சம் இல்லை என்றாலும் வெண்மையாகப் பிரகாசிக்கிறது.

   இதில் கோவிலைத் தவிர மீதி இரண்டு இடங்களும் வெறும் அழகுக்காக மட்டுமே கட்டப்பட்டது என்றாலும் அந்த காலத்தில் கலிலேயோ தன் ஆராய்ச்சிகளை இந்த கோபுர உச்சிகளில் இருந்து தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.

   பைசா நகரத்துக் கோபுரம் 1174-ல் பனானோ பிசானோ என்பவரால் கட்டத் துவங்கப்பட்டு 1350 ல் தொமாஸோ பிசானோ என்பவரால் முடிக்கப் பட்டது.  இதன் உயரம் 58.36 மீட்டர். உட்புற சுற்றளவு 4.38 மீட்டர். வெளிப்புறம் 5.22 மீட்டர். இதன் எடை 14.453 டன்.

கீழ் பாகம்
   
   இந்த கோபுரம் ஏழு அடுக்குகள் கொண்டுள்ளதாக உள்ளது. அந்த ஏழு அடுக்குகளும் ஏழு இசைக் குறிப்புகளைக் காட்டுவதாற்காகச் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறதாம். (Assunta, Crocefisso, San Ranieri, Pasquareccia, Dal Pozzo, Terza, Vespruccio இவை ஏழும் இசைக்குறிப்புகள்) கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல 293 படிகட்டுகள் உள்ளன.

ஏழு அடுக்கு
   
   இந்த மூன்று கோபுரங்களில் பைசா கோபுரம் மட்டும் வருடத்திற்கு 1.2 மில்லி மீட்டர் சாய்கிறது. இதுவரையில் 2.36 மீட்டர் சாய்ந்து விட்டது. இதற்கான காரணத்தைச் சரிவர அறியவில்லை என்றாலும் மண் அரிப்பாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
   1993 ம் ஆண்டு அதிக அளவு சாய்வு ஏற்பட்டதால் 11 ஆண்டுகள் கடுமையாக உழைத்துக் கோபுரத்தை 38 செண்டிமீட்டர் அளவு நேராக்கினார்களாம்.
   பைசா கோபுரம் மட்டும் வருடா வருடம் 1.2 மில்லி மீட்டர் சாய்ந்துக் கொண்டே வருவதால் தான் இதை உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தார்களாம்.

   பைசா கோபுரத்திற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு 18 யுரோ. இந்த டிக்கெட்டில் பைசா கோபுரத்தையும் “மிராக்கொலி“ கோவிலையும் மட்டும் பார்க்கலாம். “பத்திஸ்த்தர்“ கோபுரத்திற்கும் அதன் இடப்புறம் இருக்கும் “கம்போசன்டோ மொனிமெண்ட்டால் (COMPOSANTO MONUMENTALE )என்ற இடத்திற்கும் தனியாக 10 யுரோ. அதிக பார்வையாளர்கள் இருப்பதால் இதில் ஏதாவது ஒன்றை தான் வாங்க வேண்டும்.
   எங்களுக்குப் பைசா கோபுரத்திற்குள் செல்ல டிக்கட் கிடைத்தது பெரு மகிழ்ச்சி.
   முன்பு சில வருடங்களாக கோபுரத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லையாம். கடந்த மூன்று வருடங்களாகத் தான் அனுமதிக்கிறார்களாம். கோபுரத்திற்குள் செல்ல ஒரு முறைக்கு வெறும் இருபது பேர்களையே அனுமதிக்கிறார்கள். இந்த இருபது பேர்களும் சுற்றிப் பார்த்து விட்டு இறங்கியதும் அடுத்த இருபது பேர்களை அனுப்புகிறார்கள்.
   முக்கியமாக கையில் கேமராவைத் தவிர மற்ற எந்தப் பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. கைப்பைகளை வைக்க பாதுகாப்பான இடங்கள் உள்ளன.

உள் பாகம்

   மிகவும் நீண்ட வரிசையில் நின்று நானும் உள் நுழைந்தேன். அதன் உள் வட்டமான ஓர் இடம். அங்கிருந்து மேல் நோக்கிப் பார்த்தால்.... ஒன்றுமே பெரியதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு மூடிய கிணற்றுக்குள் நின்று கொண்டு இருப்பது போல் தான் இருந்தது.
   அங்கிருந்த பாது காவலர் “படிகட்டுகளில் பார்த்து ஏறுங்கள். வழுக்கும். முடிந்தவரையில் சீக்கிரமாக இறங்கிவிடுங்கள்“ என்று முதலில் இத்தாலி மொழியிலும் பின்பு ஆங்கிலத்திலும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

   உட்புற படிகள்

   மற்றவர்கள் இறங்கி முடித்ததும் நாங்கள் ஏறினோம். 293 படிகட்டுகள். சாதாரண படிகட்டிலேயே இரண்டு மாடி ஏறுவதற்கு எனக்கு மூச்சு வாங்கும். இதுவோ மேலே ஏற ஏற மிக மிக சாய்வாகச் செல்கிறது. அது மட்டுமல்லாமல் எத்தனை கோடி பேர் ஏறினார்களோ.... சில இடங்களில் மார்பல் படிகட்டுகளின் உள்பாகங்கள் தேய்ந்து மிகவும் வழுவழுப்பாக இருந்தது. சற்று ஏமார்ந்தால் நம்மை ஏமாற்றி விடும்.

மேலிருந்து எடுத்தப் படம்.

    எப்படியாவது உலக அதிசயத்தை பார்த்து விட வேண்டும் என்று விடா முயற்சியுடன் ஏறினேன். மேலே முழுவதும் ஏறியப்பிறகு தான் அந்த கோபுரம் எவ்வளவு சாய்வாக உள்ளது என்பதை நன்கு உணர முடிந்தது. மேலிருந்து பார்த்த போது மற்ற இரண்டு இடங்களும் அழகாகத் தெரிந்தது.

  
   என் பலநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட திருப்தியுடன் கீழிறங்கினேன்.

   மற்ற இரண்டு இடங்களுடன் கொம்போசன்டோ மொனிமென்டல் இடத்தையும் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

நட்புடன்

அருணா செல்வம்.