செவ்வாய், 31 ஜனவரி, 2012

இப்படியே இருந்திடலாம் (கவிதை)



அழுது கொண்டே
இருந்திடாலாம்
அன்புச் சொற்கள்
கிடைக்குமெனில்!

விழுந்து கொண்டே
இருந்திடலாம்
விழுந்து மீண்டும்
முளைக்குமெனில்!

தொழுது கொண்டே
இருந்திடலாம்
தூய்மை நெஞ்சில்
நிலைக்குமெனில்!

எழுதிக் கொண்டே
இருந்திடலாம்
இனிய தமிழும்
பிறக்குமெனில்!!

சனி, 21 ஜனவரி, 2012


நாலும் தெரிந்த பித்தன்

ஏனிந்த ஏக்கம்?
நானெடுத்த சென்மத்தில்
நல்லதெல்லாம்
போனதெங்கே?

ஏனிந்தக் கலக்கம்
கலிகாலத்தில்
பொய்யும் புரட்டும்
போக்கத்தத் தன்மையும்
பித்தலாட்டமும்
புதியதாக முளைக்கவில்லையே!

உண்மைக்கு அரிச்சந்திரனையும்
உறுதிக்கு பகத் சிங்கையும்
நேர்மைக்கு நல்லவர்
யாரென்றும் ஏன்
தேடித்தேடி அலைய வேண்டும்?

தேடக்கிடைக்காது
என்று தெரிந்த பின்பும்
தேடுகின்ற நான்
நாலும் தெரிந்த
பித்தனோ!!