ஏழையின் மகன்!
ராக்ஃபெல்லர் என்பவர் அமெரிக்கக்
கோடீஸ்வரரர்களில் ஒருவர்.
அவர் ஒரு சமயம் ஃபிரான்ஸ்
நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற அவர்,
ஹோட்டல் நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்பு, “வசதிகள் குறைவாக
இருந்தாலும் பரவாயில்லை, மலிவான வாடகைக்கு ஒரு அறை வேண்டும்“ என்று கேட்டார்.
ஹோட்டல் நிர்வாகி வியந்து, “ஐயா...
தாங்கள் எங்கள் ஹோட்டலுக்கு வருகை புரிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் பெயரைச் சொல்லி தங்கள மகன் அடிக்கடி இங்கு
வந்து தங்குவார். அவர் எப்பொழுதும் அதிக வசதிகள் நிறைந்த அதிக வாடகையுள்ள ஆடம்பர
அறையையே கேட்டு வாங்கித் தங்குவார். ஆனால் உலக மகா கோடீஸ்வரரான தாங்கள் மலிவு
வாடகையில் அறையைக் கேட்கிறீர்களே. இது எனக்கு வியப்பாக உள்ளது.“ என்றார்.
அதற்கு ராக்ஃபெல்லர்
புன்சிரித்தார்.
“இதில் வியக்க ஒன்றும் இல்லை. அவனது
தந்தையாகிய நான் கோடீஸ்வரன். அதனால் அவன் ஆடம்பர வாழ்க்கை வாழுகிறான். ஆனால் நானோ
ஓர் ஏழையின் மகன். ஏழையின் மகனான நான் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும்?“
என்றார் ராக்ஃபெல்லர்.
அவரது
தன்னடக்கத்தைக் கேட்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் ஹோட்டர் நிர்வாகி.
அதிக மூளை யாருக்கு?
அறிஞர் ஆல்ஸ்டன் மிகவும் குள்ளமாக
இருப்பார்.
ஒருநாள் ஒரு வழக்கறிஞர் அவரைப்
பார்த்து, “உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம் போலிருக்கிறதே!“ என்று
கிண்டலாகப் பேசினார்.
அதைக் கேட்ட ஆல்ம்ஸ்டன், “நீங்கள்
அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட, உங்கள் கோட் பாக்கெட்டில் அதிக
மூளை இருக்கும்!“ என்றார் ஆல்ஸ்டன் சிரித்தபடி.
வழக்கறிஞர் திடுக்கிட்டு உடனே அந்த
இடத்தை விட்டு அகன்றார்.
படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.
