சிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 நவம்பர், 2021

கைக்குழந்தை! (வளையற் சிந்து)

 



.
குழந்தைமொழி உதிர்த்துவிடும்
கொஞ்சலெல்லாம் பண்ணே! - திருக்
குறளிலுள்ள கண்ணே! - வளங்
கொழித்திருக்கும் மண்ணே!  - அந்தக்
குமரனெழில் பொலிவுகண்டு
குளிர்ந்திடுவாய் பெண்ணே!
.
வழவழப்பாய்ப் பளிங்களவில்
வழுக்கிவிடும் கன்னம்! - உயர்
மதனமெனும் முன்னம்! - தாச்
மகாலென்னும் சின்னம்! - அதை
மறக்கவைத்து முதலிடத்தில்
மனத்தினுள்ளே மின்னும்!
.
சிவந்தவுடன் அழுதமுகம்
சிதறியவிண் மீனே! - இருள்
திரண்டிருக்கும் கானே! - மனச்
சிரிப்படங்கும் தானே! - குரல்
தெளிதமிழின் ஒளிந்திருக்கும்
சிறப்பழகின் தேனே!
.
தவம்புரிவோர் விழியழகாய்த்
தணிந்திருக்கும் தூக்கம்! - எதைத்
தகர்த்துவிடும் தாக்கம்! - நாளை
தரணியாளும் நோக்கம்! - அந்தத்
தரிசனத்தைப் பெறுவதற்கே
தாவிவரும் ஏக்கம்!
.
விழிமலர்கள் விரிந்தவுடன்
விரும்பியுனைத் தூக்கும்! - உறும்
வினைபசியை நீக்கும்! - உடல்
விளைந்திடவே பார்க்கும்! - தாய்
விரும்பியுனை அணைப்பதனால்
விதியதுவாய்த் தோற்கும்!
.
வழிந்திருக்கும் தேங்குடமாய்
வாயமுதம் ஊறும்! - சிறு
மலரெனவே நாறும்! - பெரும்
மழலைமொழி கூறும்! - அது
மறைபொருளாய்க் கேட்பவரின்
மனத்தினிலே ஏறும்!
.
பாவலர் அருணா செல்வம்
10.11.2021

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

தேவியின் மனவழகு!

 


(சிந்துப்பா).

அன்புடன் பார்த்து நின்றாள்அதில்
ஆசையைக் கோர்த்தி ருந்தாள்!
பொன்னுடல் வேர்த்தி ருந்தாள்அதில்
போதையைச் சேர்த்தி ருந்தாள்!
 
சிலைபோல் சிரித்து நின்றாள்தமிழால்
சிந்தையை உறைய வைத்தாள்!
கலைபோல் செழித்து நின்றாள்அமிழ்தாய்
கற்பனை சுரக்க வைத்தாள்!
 
மலரோ அவளி தழ்தான்மிஞ்சும்
மதுவோ ததும்பி டுந்தேன்!
நிலவோ அவள் முகந்தான்நெஞ்சின்
நிலையோ அவளி டந்தான்!
 
சேலையில் பூத்தி ருந்தாள்எந்தன்
சிந்தையை ஈர்த்து விட்டாள்!
காளைநான் காத்தி ருந்தேன்வந்து
கவலையைப் போக்கி டுவாள்!
 
தேவியின் மன வழகுவீரத்
தீந்தமிழ் மொழி யழகு!
கூவிடும் மன முழவுசேரக்
கொட்டிடும் கவிப் பொழிவு!
.
பாவலர் அருணா செல்வம்
28.08.2020

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழ்ப்பெண்!




இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

(சிந்து)
அருணா செல்வம் 
09.02.2016

திங்கள், 24 மார்ச், 2014

இசைப்பாட்டு! (பாடிப் பாருங்கள்)




சிந்து பாடுவேனோ?


            (எடுப்பு)

சிந்து பாடு வேனோ உடல்
சிலிர்க்கப் பாடு வேனோ                      (சிந்து)

            (தொடுப்பு)

சந்தம் நிறைகிற சதிராடும் தமிழால்
சாதனை புரிகிற செழித்திடும் மொழியால்      (சிந்து)

            (முடிப்பு)

அமைதியாய் அமர்ந்திடும் பாவலர் நெஞ்சில்
அரவரம் புரிந்திடும் காதலர் நெஞ்சில்
குரல்வளம் கொடுத்திடும் பாடகர் நெஞ்சில்
கொஞ்சிடக் குளிர்ந்திடும் என்னவர் நெஞ்சில்   (சிந்து)


அருணா செல்வம்
24.03.2014