பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல் வாழ்த்து !



அன்பு விளக்கில் அகமிருக்க,
    அனைத்துச் சொந்தம் சேர்ந்திருக்க,
இன்பம் எல்லாம் நிலைத்திருக்க,
    ஏற்றம் கூடி வலுத்திருக்க,
நன்மை மட்டும் சூழ்ந்திருக்க,
    நாளும் எண்ணம் உயர்ந்திருக்க
என்றும் கிடைக்க வழிசெய்வாள்
    இன்று பிறக்கும் தைமகளே !


நட்புறவுகள் அனைவருக்கும் 
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் 
அருணா செல்வம்.

புதன், 14 ஜனவரி, 2015

பொங்கலோ பொங்கல்!



ஓயாது உழைத்த உழவரின் நல்மனம்
தேயாது இருந்திட, தேனான மாமழை
தேவைக்காய்ப் பெய்திட, தேடி விதைத்தது
சேவையெனத் தந்திட, செய்யும் தொழில்கள்
வளத்தைக் கொடுத்திட, வண்ணமிடும் மீன்கள்
குளத்தில் நிறைந்திட, கொண்டவள் கொஞ்சியே
புன்னகைப் பூத்திட, புண்மனம் கொண்டோரின்
வன்பகை ஓடிட, வஞ்சனை இன்றித்
தெளிதமிழ்ப் பேசிட, தெம்புடன் நாமும்
களிப்புடன் ஆடிட, காதலரும் கூடியே
போற்றிடும் பொங்கலாய்ப் பொங்கு!

(பஃறொடை வெண்பா)

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அருணா செல்வம்.
15.01.2015

சனி, 11 ஜனவரி, 2014

இவள் தான் தைமகள்!



நேர்மை யற்ற நெஞ்சங்கள்!
   நீதி யற்ற தலைவர்கள்!
ஓர்மை யற்ற உணர்வுடனே
   உழைத்துத் தேயும் உழவர்கள்!
கூர்மை யற்ற குடிகளையும்
   கொண்டி ருக்கும் நாட்டுக்குள்
சீர்மை யுடனே வருகின்றாள்
   சிரித்த முகமாய்த் தைமகளே!

அரசுப் பணியர் எனும்பேரில்
   அளவில் சிறிய வேலைக்கும்
பரிசு போன்று பெயர்வைத்துப்
   பணத்தைப் பெறுவார் இலஞ்சமென!
சிரசு இருந்தும் முண்டமான
   சிறியோர் செயலைக் கண்டிடவே
முரசு கொட்டி வருகின்றாள்
   முடிவே அறியாத் தைமகளே!

வாங்கி வாழும் மனிதர்கை
   வாரி வழங்கும் எனநினைத்தே
ஏங்கித் தவிக்கும் ஏழைகளின்
   ஏக்கம் தெளிதல் எந்நாளோ!
தேங்கி நில்லாப் பழக்கத்தில்
   தெளிவு இல்லா மக்களிடம்
ஓங்கி ஒளிர்ந்து வருகின்றாள்
   உறக்கம் அறியாத் தைமகளே!

நாட்டில் ஏதும் நடந்தாலும்
   நரகத் துன்பம் அடைந்தாலும்
ஏட்டில் பழமை இருந்தாலும்
   ஏதும் இல்லை என்றாலும்
பாட்டில் புதுமை படைத்தாலும்
   பழமை புதுமை ஆனாலும்
கூட்டிப் பெருக்க வருகின்றாள்
   குறையை அறியாத் தைமகளே!!

அருணா செல்வம்.