சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 செப்டம்பர், 2014

பிரிவு!!

  


   பாவனா, பதினைந்து நாட்களாகப் பெறுக்காத வீட்டைப் பெறுக்கி விட்டு, சாரங்கள் போட்ட துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, காய்ந்து போன பாத்திரங்களைக் கழுவிக்கொண்டு இருந்த போது....
   “அக்கா... இந்த கால் உனக்குத் தான். இந்தா பேசு“ என்று அலறிய போனை நீட்டினாள் அவளின் தங்கை வனிதா.
   “நீயே பேசேண்டி. எனக்கு எவ்வளவோ வேலை இருக்குது.....“ என்றாள் கோபத்துடன் பாவனா.
    “பேச வேண்டிய எல்லார்க்கிட்டேயும் பேசிட்டேன். இது மாமாவோட நம்பர்ன்னு நினைக்கிறேன். நீதான் பேசனும். அப்புறம்.... நான் வந்திருக்கிறதைச் சொல்லாதே. மாமாவுக்கு நான் வந்தது ஒரு சர்பிரைஸா இருக்கட்டும்...“ என்று சொல்லிவிட்டு போனைக் கொடுத்தாள்.
    கையில் வாங்கி “ஹலோ...“ என்று பாவனா சொன்னது தான் தாமதம்.
   “போன் வந்தா உடனே எடுக்க மாட்டியா.....? காலையிலேர்ந்து ரெண்டு மணி நேரமா டிரைப் பண்ணுறேன். வந்ததும் வராததுமா யார்கிட்ட தான் இவ்வளவு நேரமா பேசிக்கினு இருந்த.....?“ சாரங்கன் கத்தி கேட்டது அவளையும் தாண்டி வனிதாவிற்கும் கேட்டது.
   “அது வந்துங்க.... காலையில நாங்க வந்த பஸ் மரத்துல மோதி ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சிங்க. இந்த விசயம் தெரிஞ்சதும் என் அம்மா அண்ணன், சொந்தக் காரங்கன்னு நிறைய பேர் என்னாச்சி ஏதாச்சின்னு போன்பண்ணி நலம் விசாரிச்சாங்க. அதனால தான் எங்கேஜ்ஜா இருந்துச்சி.“ என்றாள்.
   “ஓ.... அப்படியா...? பசங்க நல்லா இருக்காங்களா....?“ கேட்டான்.
   “நாங்க பஸ்சுல நடுவுல உட்காந்துட்டோம். எங்களுக்கு ஒன்னும் ஆகலை. ஆனால் முன்னாடி இருந்தவங்க... டிரைவருக்கெல்லாம் நல்ல அடி. ஆம்புலன்சுல அழைச்சிக்கினு போனாங்க. நிறைய ரத்தம் போயிடுச்சி.... உயிருக்கு.....“
   அவள் சொல்லி முடிக்கவில்லை. “சரி சரி விடு. நான் வேலை முடிச்சிட்டு பிரெண்டோட ஒரு பார்ட்டிக்குப் போறேன். ராத்திரி எட்டு மணிக்கு மேல தான் வருவேன். இதை சொல்ல தான் போன் பண்ணினேன்“ என்றான்.
   “என்னங்க இன்னைக்குமா.....? நான் அம்மாவீட்டுக்குப் போன இந்த பதினைஞ்சி நாளும் தான் பார்ட்டி பார்ட்டின்னீங்க. இன்னைக்கு நாங்க வர்றோம்ன்னு தெரியுமில்லை. பிள்ளைங்களும் உங்களைப் பாக்கனும்ன்னு ஆசையா இருக்காங்க“ என்றாள் பாவனா.
   “என்ன என்னைப் புதுசாவா பாக்க போறாங்க. எல்லாம் நாளைக்கிப் பார்த்துக்கலாம். வச்சிடறேன்“ போனை வைக்கப் போனான். அதற்குள்...
   “இருங்க. இருங்க.“ என்றதும் “என்ன?“ என்று கேட்டான்.
   “கருணாவுக்கு ஸ்கூல் யூனிபார்ம் தைக்கச் சொல்லி டைலரிடம் துணி கொடுத்திருந்தேனே.... வாங்கிட்டீங்களா.....? எங்க வச்சிருக்கிறீங்க....? அவனுக்கு அளவு சரியா இருக்கான்னு போட்டுப் பார்க்கனும்“ என்றாள்.
   “ஓ அதுவா....? சாரி பாவனா. மறந்துட்டேன். நைட் வரும் போது மறக்காம வாங்கிக்கினு வந்திடுறேன். டைலர்க்கு லேட்டா வருவேன்னு போன் பண்ணி சொல்லிடு. பாய்....“ அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் இணைப்பைத் துண்டித்துவிட்டான். பாவனா கவலையுடன் ரிசிவரை அதனிடத்தில் வைத்தாள்.

    இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கள் நுழைந்தவனிடமிருந்து மது வாடை அப்பட்டமாக வீசியது. வந்ததும் “பிள்ளைகள் எங்கே?“ என்று கேட்டான்.
   “நாளைக்கு ஸ்கூல் தொடங்குது இல்லையா? அதுதான் சீக்கிரமா சாப்பாடு கொடுத்துப் படுக்க வச்சிட்டேன்“ என்றவள், அவனின் வெறுங்கையைப் பார்த்துவிட்டு, “எங்கங்க கருணாவோட யூனிபார்ம்?“ கேட்டாள்.
   “ஐயோ..... மறந்துட்டேன் பாவனா. நாளைக்கு மறக்காம வங்கின்னு வர்றேன்“ என்றான் தலையைச் சொரிந்தபடி.
   “நாளைக்கு ஸ்கூல் பஸ்ட் டேங்க. முதல் நாளே பிள்ளை ஏமாற்றமாவா ஸ்கூல் போகனும்.....?“ பொறுக்காமல் கேட்டாள்.
   “என்ன பெரிய ஏமாற்றம்....? ஒரு நாள்ல எதுவும் ஏமாற்றம் வந்திடாது“ என்றான் அலட்சியமாக சாரங்கன்.
   “என்னங்க இப்படி சொல்லுறீங்க. நான் ஊரிலிருந்து ஒவ்வொரு முறை பேசும் போதும் சொல்லிக்கினே தானே இருந்தேன். அப்படியும் எப்படிங்க உங்களுக்கு மறக்கும்? பிள்ளைங்களைப் பத்தி கொஞ்சமாவது அக்கரை காட்டுறீங்களா....?“ என்றாள் சற்றுக் கோபமாக.
   “வந்ததும் தொடங்கிட்டியா....? கொஞ்ச நாளா உன் தொல்லை இல்லாம நிம்மதியா இருந்தேன்.“ தலையில் கைவைத்தபடி சோபாவில் அமர்ந்தான்.
   பாவனா. முட்டிய வேதனையை விழுங்கிவிட்டு,
   “ஏங்க உட்காராதீங்க. நான் டைலர்கிட்ட பேசிட்டேன். ராத்திரி என்னேரமா இருந்தாலும் வாங்கன்னு சொன்னார். போய் கையோட வாங்கிக்கினு வந்திடுங்க“ என்றாள் சற்றுக் கெஞ்சளாக.
   “என்னால இப்போ வெளியில போக முடியாது. நாளைக்கு மறக்காம வாங்கினு வர்றேன்...“ என்றவன் தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்பித்தான்.
   “ஸ்கூட்டரில் போயிட்டு வர்ற பதினஞ்சு நிமிஷம் கூட ஆகாது. நானும் உங்க கூட வர்றேன். வாங்க போய் வாங்கினு வந்திடலாம்...“ என்று சொல்லியபடி தொலைக்காட்சியை நிறுத்தினாள்.
   “சே. நீ இருந்தா இந்த வீட்டுல கொஞ்ச நேரம் டீவிக் கூட நிம்மதியா பார்க்க முடியாது. ஏன்தான் திரும்பி வந்தியோ.... காலையில நடந்த ஆக்ஸிடெண்டுல நீயும் போய் சேர்ந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். என் உசிரை வாங்கவே திரும்பி வந்திருக்கிற“ என்று கத்தினான்.
   அவன் சொன்ன வார்த்தையின் வலியில் மனம் உடைய கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி, “சரி நானே போய் வாங்கிக்கினு வந்திடுறேன்.“ என்று கிளம்பினாள்.
   “போவறதுக்கு முன்னாடி எனக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டு போ“ என்றான்.
   “வனிதா.... மாமாவுக்கு சாப்பாடு போடு. நான் டைலர் வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.....“ என்று சமையலறையை நோக்கிக் குரல் கொடுத்தபடி வெளியில் இறங்கி நடந்தாள் பாவனா.
   அப்போது தான் சமையலறையிலிருந்து வெளிபட்ட வனிதாவைச் பார்த்தான் சாரங்கள். மன நெருடலை உணர்ந்தான்.
   “வா வனிதா. எப்படி இருக்கிற? நீ வர்றதா பாவனா சொல்லவே இல்லையே“ என்றான் சிரிப்பை வரவழித்துக் கொண்டு.
   “அப்படி சொல்லி இருந்தா உங்களோட உண்மையான சுயரூபம் தெரிந்திருக்காதே. உங்களைப் பத்தி என் அக்கா ஊருல எவ்வளவு உயர்வா சொல்லி இருக்கிறா தெரியுமா? காலையில வந்த பஸ் ஆக்ஸிடெண்டாயிடுச்சி என்றதும் ஊருல தெரிஞ்சவங்க ஒருத்தர் விடாம போன் மேல போன் போட்டு என்னாச்சி? எப்படியாச்சி? ஏதாவது அடிபட்டதான்னு துடிச்சி போய் விசாரிச்சாங்க. ஆனால் உண்மையிலேயே துடிக்க வேண்டிய நீங்க, அவளைப் போய் ஆக்ஸிடெண்டுல போய் சேர்ந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ன்னு வாய் கூசாம சொல்லுறீங்களே.... அவளைச் சாக சொல்லுற அளவுக்கு அப்படி என்ன தப்பு செஞ்சிட்டா என் அக்கா?“ கோபத்துடன் கேட்டாள் வனிதா.
   அவளின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாத சாரங்கன், “தோ பாரு வனிதா.... இது எங்களுக்குள்ள நடக்கிற சண்டை. இதுல நீ தலையிடாத“ என்றான்.
   “நான் தலையிட கூடாது தான். ஆனால் இதை மட்டும் சொல்லிடுறேன்.. ஒரு மனைவியால்  கணவனுக்கு நிம்மதி இல்லை என்றால் அந்த பெண் செத்தால் தான் நிம்மதி கிடைக்கும் என்பதில்லை. அவளை விவாகரத்து செய்துவிட்டு கூட நீங்கள் நிம்மதியா இருக்கலாம். அதே சமயம் அவளும் நிம்மதியா இருப்பாள்.“ என்றாள். கோபமாக.
   “ம்.... அப்போ உன் அக்காவுக்கு விவாகரத்து வேண்டும்ன்னு சொல்லுறீயா....?“ என்றான் ஏளனமாக.
   “நான் இப்படி சொல்ல வரலை. அதே சமயம் உங்களுக்கு அது தான் நிம்மதி தரும் என்றால் தாராளமாக செய்யுங்கள். சின்னச் சின்னப் பிரிவுகள் சில நேரங்களில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்தர பிரிவு வலியைத் தான் கொடுக்கும். உங்களுக்கு அவளுடைய உயிர் துச்சமாகத் தெரியலாம். ஆனால் அவளுடைய குழந்தைகளுக்கு அவள் தான் எல்லாம். அதன் பிறகு தான் நீங்கள். ஒரு பெண்ணைத் தன்னுடைய நிம்மதிக்காக வார்த்தையால் தினம்தினம் சுட்டு சாகடிக்கிறதை விட பிரிந்து வாழ்வது எவ்வளவோ மேல்....“ என்று கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வனிதா.
   அவளின் வார்த்தைகளில் உள்ள வலிமை புரிந்து பேசாமல் அமர்ந்து விட்டான் சாரங்கன்.

அருணா செல்வம்

09.08.2014

வெள்ளி, 20 ஜூன், 2014

சத்திரத்துச் சாப்பாடு – இரண்டாம் விளக்கம்(2)





நட்பறவுகளுக்கு வணக்கம்.
    காளமேகப் புலவரின் சத்திரத்துச் சாப்பாட்டு என்ற தலைப்பில் எழுதிய பாடலுக்கான இரண்டாம் விளக்கத்தை ஒரு பதிவாக இட்டேன்.
   அது தவறான பதில் என்று ஒருவர் (பெயரில்லாதவர்(?) கருத்துத் தெரிவித்திருந்தார். நானும், நாம் சொன்ன விளக்கம் உண்மையில் தவறானதாக இருந்தால் அதையே மற்றவர்கள் எடுத்துக் கொள்ள நேரிடுமே என்ற காரணத்தால் உடனே அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்.
   பிறகு காளமேகத்தின் தனிபாடல்கள் தொகுதிகளை எடுத்துப் பார்த்தேன். அதிலும் “பாடலின் பொருளை மாற்றி உரைத்தார்“ என்றே இருந்தது. அதனுடன் சேர்ந்தது போல வேறு பாடலும் இல்லை.
   கடைசியில் பெயரில்லாத ஒருவரின் கருத்திற்காக நாம் அதிகமாக சிந்தித்துத் தேட வேண்டிதில்லை என்று முடிவெடுத்து இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

   காளமேகம் ஒரு பாடலுக்கு இரண்டு பொருள் வருமாறு சிலேடையாகப் பல பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் அப்பாடல்கள் ஆழ்ந்து பொருள் கொள்ளவேண்டும். புரிந்து படித்தால் “ஆஹா... அருமை“ என்று எவராளும் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்தச் சத்திரத்துப் பாடலில் இரண்டாவது கருத்துச் சிலேடையாக இல்லாமல் மிகவும் சாதாரணமாகப் பொருள் கொள்வது போல் தான் இருக்கிறது.


பாடல்

கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதி லரிசிவரும் – குத்தி
உலையிலிட வூரடங்கு மோரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.

    இந்தப் பாடலின் முதல் விளக்கம்... ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஓர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும். என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
   இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன் செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடம் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான் அல்லவா?
   அப்போது, கவி காளமேகம், அவனுடைய மனமாற்றத்தைப் புரிந்து கொண்டு,
   ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிற் சென்று மறைகின்ற பொழுதினிலே அரிசி வரும். அந்த அரிசியை இரவெல்லாம் தீட்டி, ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிய நேரத்திலேயே உலையிலே இடுவார்கள். காலையில் விடிவெள்ளி வானத்தில் எழும்பொழுதே இரவலர்களின் அகம் இருக்கும் பையிக்கு அன்னம் இடுவார்கள். என்று பொருளினை மாற்றி உரைத்து அவன் மனம் மகிழுமாறு செய்தார்.
   அதாவது அந்தச் சத்திரத்தில் இரவெல்லாம் உழைத்து விடிகாலையிலேயே உணவு இடுகிறார்கள்.
   இது தான் அந்தப் பாடலின் இரண்டாவது பொருள்.

   இதைவிட அவரின் “பாம்புக்கும் எள்ளுக்கும்“ உள்ள ஒற்றுமை “தென்னைமரத்திற்கும் வேசிக்கும்“ உள்ள ஒற்றுமை போன்ற பாடல்களில் உள்ள கருத்துக்கள் மிகவும் சுவையாக இருக்கும். பின்னாளில் அதையும் எழுதுகிறேன்.

மற்றபடி ஏற்கனவே படித்த, படிக்க வந்து ஏமார்ந்தவர்கள் அனைவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.

நன்றி.
அருணா செல்வம்.


பாடலக்கான வேறு விளக்கம் யாருக்காவது தெரிந்து இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அல்லது அதற்கான வேறு பாடல் இருந்தாலும் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

வெள்ளி, 22 நவம்பர், 2013

அணுகுண்டு ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி!!


(படித்ததில் சிந்திக்க வைத்தது)

    உலகில் முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
   அதன் உருவாக்கப் பணிகளைப் பார்த்துவிட்டு வந்த டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர் (Dr. Robert Oppenheimer) அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி முன்னால் அணுகுண்டு பற்றிய விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
   அவர் கூறியதை அங்கு கூடியிருந்த அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
   அப்பொழுது ஒருவர் எழுந்து, “இவ்வளவு ஆபத்தான அணுகுண்டிலிருந்து தப்பிக்க ஏதேனும் பாதுகாப்புக் கருவி இருக்கிறாதா?“ என்று கேட்டார்.
   “இருக்கிறது“ என்றார் டாக்டர் ராபர்ட்.
   “என்ன அது?“
   “அது தான் சமாதானம்!“ என்று கூறிவிட்டு புன்னகைத்தாராம் டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர்.


வியாழன், 14 நவம்பர், 2013

இது சரியா? – பதில்சொல்லுங்கள்!



   போன சனிக்கிழமை அன்று என் தோழி என் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் ஓர் இளம் மருத்துவர். ரொம்ப நாட்கள் கழித்து அவளைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
   இரவெல்லாம் தூங்காமல் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது தான் இந்தத் தகவலை என்னிடம் சொல்லி, இந்தக் கேள்வியையும் கேட்டாள்.
   அவள் சொன்னது....
   அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் 92 வயதான ஒருவர் அட்மிட் ஆகி இருந்தார். அந்த மனிதர் நன்றாக பேசுகிறார். நன்றாக சாப்பிடுகிறார். நன்றாக தூங்கி எழுகிறார். ஆனால், அவருக்குக் கொஞ்ச நாட்களாகச் சிறுநீர் கழிப்பதில் தான் பிரட்சனை ஏற்பட்டுள்ளது.
   அதை ஆராய்ந்து பார்த்ததில் அவரின் சிறுநீர் குழாயில் கல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இது தெரிந்ததால், அவர் அறுவை சிகிட்சை செய்து கொள்வதற்காக அன்று மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்.
   அவருக்கு மறு நாள் அறுவைசிகிட்சை நடைபெற இருந்ததால் முதல்நாள் என் தோழியின் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்.
   அன்று, “சிரி“ நாட்டிலிருந்து வந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் என் தோழிக்கு உதவியாளராக இருந்திருக்கிறார்.
   என் தோழி, நாளை அறுவைசிகிட்சை நடைபெற இருக்கும் அந்த நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகளைச் சரிபார்த்து எழுதிக் கொடுத்து அக்கரையுடன் கவனித்தும் கொண்டாள்.
   இதைக் கண்ட “சிரி“ நாட்டு டாக்டர் “இதெல்லாம் இவருக்குத் தேவைதானா...?“ என்று சொல்லி சற்று நக்கலாக சிரித்திருக்கிறார்.
   அவள், அவரிடம் அங்கே எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்று காரணம் கேட்டாள்.
   அதற்கு அவர், “அந்த நோயாளிக்கு 92 வயதாகிவிட்டது. அவரை அப்படியே சாக விடுவது தான் நல்லது. இனிமேல் வாழ்ந்து என்ன செய்யப் போகிறார்?“ என்று கேட்டிருக்கிறார்.
   மருத்துவராக இருந்துக்கொண்டு இப்படி பேசுகிறாரே என்று என் தோழி சற்று கோபப்பட்டாலும் மனத்தை அடக்கிக்கொண்டு “நோயிக்காக சிகிட்சைப் பெற வந்தவரை அப்படியே விடுவது தவறில்லையா... உங்கள் நாட்டில் இப்படித்தான் டாக்டர்கள் நடந்து கொள்வார்களா...?“ என்று கேட்டிருக்கிறாள்.
   அதற்கு அவர், “எங்கள் நாட்டில், என் வாழ்நாளில் இவ்வளவு வயதான ஒருவரை நான் பார்த்ததே இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. எங்கள் நாட்டில் அறுபதிலிருந்து எழுபதுவரை அவர்களாகவே நடந்து சிகிட்சைக்கு வரும் பச்சத்தில் டிரிட்மண்ட் கொடுப்போம். பொதுவாக எழுபது வயதிற்கு மேல் உடல் உபாதைகள் வந்தால் யாரும் மருத்துவ மனைக்கு வருவதில்லை. அவர்களின் குடும்பத்தாரும் அழைத்து வர மாட்டார்கள். வயதானவர்களுக்கு வரும் பிரட்சனைகள் தான் என்று பெரிதுபடுத்த மாட்டார்கள். அப்படியே விட்டுவிடுவார்கள்.
   ஆனால் இங்கே... இந்த வயதானவருக்கு இப்படியொரு சிகிட்சை. ஆச்சர்யமாக இருக்கிறது. நன்கு யோசித்துப் பார்த்தால் தேவை அற்றது. அவருக்கு உபயோகப்படும் மருந்து மாத்திரை மற்றும் நேரத்தை சிறுவயதானவர்களுக்கு உபயோகித்தால் அவர்களுக்கும் நாட்டிற்கும் உபயோகப்படும்“ என்றாராம் கோபமாக.
   அவர் சொன்னதில் உண்மை இருந்தாலும் அதை என் தோழியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
   அதை அவள் என்னிடம் சொன்னாள். நான் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
   இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். அந்த “சிரி“ நாட்டு மருத்துவர் சொன்னது சரியா...?

குழப்பத்துடன்

அருணா செல்வம்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

கருணை!!



இறைவனவன் எங்குள்ளான் என்று தேடி
   இவ்வுலகில் கோவிலெல்லாம் சுற்றிப் போவார்!
மறைபொருளைக் கற்றவரும் அவனைத் தேடி
   மனமிறுக்கி உடல்வருத்தித் தவங்கள் செய்வார்!
குறைமனத்தைக் கொண்டவரும் வெளியில் பண்பாய்க்
   கும்பிட்டு வெளிவேசம் காட்டி நிற்பார்!
நிறைவான நெஞ்சுள்ளே நிறைந்தி ருக்கும்
   நிலையான தெய்வத்தை அறிதல் என்றோ?!

யாரிடத்தில் உள்ளதென்று தேட வேண்டாம்!
   எம்மதத்தில் உள்ளதென்றும் அறிய வேண்டாம்!
ஓரிடத்தில் ஓர்மனமாய் அமர்ந்து நன்றாய்
   உள்ளுணர்வின் நோக்கமதைப் புரட்டிப் பார்க்கப்
பேரிடராய்ச் சுயநலமே நிறைந்தி ருக்கும்!
   பிடுங்கியதை உடனெடுத்து வீசி விட்டால்
காரிடத்தின் மறைந்திருக்கும் மழையைப் போல
   காலமுடன் உதவுகின்ற எண்ணம் ஓங்கும்!

அருமையெனும் குணமெல்லாம் அகத்தில் மூழ்க
   அன்பென்னும் அழகெல்லாம் முகத்தில் மின்ன
பெருமையெனும் செயலெல்லாம் நிலத்தில் செய்ய
   பேறென்னும் பெருவருளை இறப்பில் நோக்க
ஒருமையெனும் இறைஉணர்வைத் தன்னுள் ஏற்றி
   உலகமெனும் உயிர்க்கெல்லாம் ஒளியைக் காட்டி
கருமையென்னும் கீழ்குணத்தை நெஞ்சில் நீக்கக்
   கருணையெனும் இறைமுகம்தான் தெரியும் அங்கே!
  
அருணா செல்வம்
08.11.2013

(இந்தப் பாடல்
காய் – காய் – மா – தேமா
   காய் – காய் – மா – தேமா... என்ற இலக்கணத்தில் அமைந்த எண்சீர் விருத்தம்)

புதன், 6 நவம்பர், 2013

அனைத்தும் உங்கள் கைவண்ணம்!! (சிரிக்க-சிந்திக்க)



    பாப்லோ பிக்காசோ (Pablo Picasso/ 1881 – 1973) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியர். ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
   உலகப் போரில் ஹிட்லர் செய்த படுகொலைகளையும் அட்டூழியங்களையும் வெறியாட்டங்களையும் அப்படியே தத்ரூபமாக வரைந்து ஓர் ஓவியக் கண்காட்சியில் வைத்தார் பாப்லோ பிக்காசோ.
   அந்த ஓவியங்கள் மக்களால் பெரிய அளவில் பேசப்பட்டன.
   ஹிட்லருக்கு அந்த விஷயம் தெரிய வந்தது. உடனே ஓவியக் கண்காட்சிக்குச் சென்று பார்த்தார். அவரது கண்கள் சிவந்தன. குட்டி மீசை துடிக்க பற்களை நற...நறவென்று கடித்தார். பிக்காசோவை அழைத்து வரச்செய்தார்.
   “யோவ் ஓவியரே... என்ன தைரியம் உனக்கு. இதெல்லாம் நீ செய்தது தானே?“ என்று ஓவியங்களைக் காட்டி கர்ஜனைக் குரலில் கேட்டார் ஹிட்லர்.
   அதற்கு பிக்காசோ, “இல்லை பிரபு! இவையெல்லாம் நீங்கள் செய்தவைதாம். அனைத்தும் உங்கள் கைவண்ணம் தான்!“ என்றார்.
   இதைக் கேட்டதும் ஹிட்லர் எதுவும் பதில் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

வியாழன், 31 அக்டோபர், 2013

தீமைகள் விலகும் நாள்!!


தொன்றுதொட்டு கொண்டாடுகிறோம்
தோய்வில்லாமல் தீபாவளியை!
என்றுவிட்டு யோசிப்போம்
எதனால் வந்தது இதுவென்று?

இறந்தவனுக்குத் திருநாள்
இருப்பவர் கொண்டாடுகிறார்!
பிறந்தவர் இறப்பது உலக நியதி
இருப்பினும் கொண்டாடுதல் என்ன நீதி?

அடுத்தவர்க்கு உதவாவிடினும்
கெடுக்காமல் இருப்பது மேலாம்!
கொடுப்பவர் மனத்தைக் குடைந்து
கெடுத்தே உயர்வது கீழாம்!

அதிகாரம் கிடைதாலோ
ஆணவம் வருதல் சரியோ?!
விதியென்று மக்கள்வாழ்ந்தும்
வீழ்த்துதல் என்ன முறையோ?

அசுரக்கொடுமை அன்றுமட்டுமா?
அரசுக்கொள்கை இன்று மட்டுமா?
அன்றோ இருந்தான் ஓர்அசுரன்!
இன்றோ இல்லை ஓர்தலைவன்!

ஒருநாள் அசுரன் அழிந்ததனால்
திருநாள் தீபாவளி வந்திடுதாம்!
வருநாள் எல்லாம் விழித்திருந்தால்
வசந்தம் வாழ்வில் வந்திடுமா?

திருப்பிப் போட்டு பார்க்க வேண்டாம்!
திருத்திக் கொள்ள வேண்டும் இன்று
தீமைகள் விலகும் நாளெல்லாம்
தீபாவளி திருநாள் என்று!

அருணா செல்வம்.

31.10.2013

புதன், 30 அக்டோபர், 2013

தீபாவளி பாசம்!! (நகையும் சுவையும்)


   அமுதன் ரகுவின் வீட்டில் நுழைந்த போது அவனின் மகள் புவனா, புது கவுன் போட்டுக்கொண்டு தெரு வாசலிலேயே நின்று கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
   “அவளிடம் இவன் “புவனா.... இந்த கவுன் திபாவளிக்கு எடுத்ததா...?“ அன்பாக கேட்டான்.
   அவள் இவனை முறைத்துவிட்டு, “இல்ல. இந்த கவுன் எனக்கு எடுத்தது“ என்றாள்.
   உள்ளே போகும் போதே இப்படியா... என்ற யோசனையுடன் நுழைந்தவனை ரகு பெரியதாக வரவேற்காமல் “வாடா...“ என்று மட்டும் சொன்னது இவனுக்கு மேலும் என்னவோ போல் ஆகிவிட்டது.
   என்ன செய்வது? உதவி என்று கேட்கப் போகும் இடத்தில் மரியாதையை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா....? மனத்தை திடமாக்கிக் கொண்டான்.
   “என்னடா ரகு! இன்னைக்கு மழை வரும்ன்னு ரேடியோவில சொன்னாங்க. நீ கேட்டியா...?“
   “நான் கேக்கலைடா. அவங்களாத்தான் சொன்னாங்க.“ முகத்தை “உம்“மென்று வைத்துக்கொண்டு சொன்னான் ரகு. அமுதன் “ஐயோ“ என்று தலையைப் பிடித்துக்கொண்டான்.
   “என்னண்ணா... தலைவலியா...? அவர்கிட்ட பேசினாலே தலை வலிக்கும் தான். தலைவலி மருந்து வேணுமா...?“ பாசத்துடன் கேட்டபடி வந்தாள் ரகுவின் மனைவி.
   “வேண்டாம்மா. கொஞ்சம் சூட காப்பி இருந்தா கொடு“ என்றான்.
   “க்கும். ரெண்டும் ஒன்னு தான். எதை சாப்பிட்டால் என்ன?“ ரகு முணுமுணுத்தது அவள் காதிலும் விழுந்தது.
   “இதோ பாருங்க... ரெண்டு நாளா சண்டை போட்டது போதும். இன்னைக்கு நல்ல நாளும் அதுவுமா எங்கிட்ட சண்டைக்கு வர்றாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வந்திடும்... ஆமா...“
   “உனக்கு நல்ல கோபம் கூட வருமா...? போ... போயி அந்த கஷாயத்தைப் போட்டு இவனுக்குக் கொடு.“ என்றான் ரகு எரிச்சலுடன்.
   அவள் முறைத்துவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள்.
   ரகு அமுதன் கொண்டு வந்த பலகாரப்பையைத் திறந்து அதிலிருந்த அதிரசத்தை எடுத்துச் சாப்பிட்டான். “அதிரசம் சூப்பர்டா. வீட்டுல செஞ்சிதா?“
   “ஆமாம். ஆமா... நீங்க எதுவும் பலகாரம் செய்யலையா...?“ இவன் கேட்கும் பொழுதே.... காபியைக் கொண்டு வந்தவள், “ஆமா... நாளும் கெழமையுமா உங்க பிரெண்ட் நாளு பலகாரம் செய்யவிடுறாரா?“ மூக்கைச் சிந்தாத குறையதாக இழுத்தாள்.
   “ஏன்டா... என்ன ஆச்சி? ஏன்ம்மா புது டிரெஸ் வாங்கலையா...?“
   “நான் எனக்கு ஒரு புடவை வாங்கினேன்“
   “நீ என்னடா வாங்கினே...?“
   “நான் கடன் வாங்கினேன்டா.“
   “ஐயோ... என்னச்சி உனக்கு?“ அவன் பேசாமல் இருக்கவும் இவன், அவனின் மனைவியிடம் “என்னதான்மா ஆச்சி?“ கேட்டான்.
   “அது ஒன்னும் இல்லையண்ணா. இந்த வருடம் அவருடைய தங்கைக்கு தலைதீபாவளி இல்லையா...? அவுங்க அம்மா பணம் கேட்டு போன் பண்ணினாங்க. இவரும் இந்த வருஷம் நாம தீபாவளியை சிக்கனமா கொண்டாடிடலாம்ன்னு சொல்லிட்டு எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இருந்த பணத்தை ஊருக்கு அனுப்பிட்டாரு. கேட்டதுக்குத் தான் இவ்வளவு கோபம்.“ என்றாள்.
   “உங்கிட்ட சொல்லி இருந்தா நீ பணத்தை அனுப்பவா விட்டிருப்பே? எனக்கு அது வேணும் இது வேணும்ன்னு பணத்தைக் காலி பண்ணி இருக்க மாட்டே...“ கோபத்துடன் ரகு சொன்னான்.
   “ஆமா... அப்படியே நீங்க வாங்கி கொடுத்திட்டாலும்.... இப்ப கூட பாருங்ண்ணா. என் அண்ணன் தீபாவளிக்கு புவனாவிற்கு கவுன் வாங்க சொல்லி பணம் கொடுத்தது. அதுல சிக்கனமா எனக்கு ஒரு புடவையும் அவளுக்கு ஒரு கவுனும் எடுத்தேன். எங்களுக்குன்னு இவரு என்ன பெரிசா செய்திட்டாரு? நமக்கு பொண்டாட்டி குழந்தைன்னு இருக்கிற எண்ணமே கொஞ்சம் கூட இவருகிட்ட இல்லண்ணா...“ குரல் தழுதழுத்தது.
   “சரி விடும்மா. இதையெல்லாம பெரிசா நினைச்சி கண் கலங்கிட்டு. ஏதோ நம்ம வசதிக்கு நம் தங்கைக்கு நம்மால முடிஞ்சதை செய்தோமே... என்ற திருப்தியாவது அவனுக்கு இருக்கட்டும். ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியில கிளம்பி போயிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்“ சொல்லிவிட்டு கிளம்பினான்.
   வாசல் வரையில் வந்த ரகு அமுதனின் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாயைச் செறுகினான்.
   “ஏதுடா இது?“
   “எனக்குத் தெரியும்டா. உன் தங்கைக்கும் இந்த வருடம் தலை தீபாவளி என்று. நான் கடன்வாங்கும் பொழுதே உனக்கும் சேர்த்து தான்டா வாங்கினேன். என் பொண்டாட்டிக்கு அவ அண்ணன் கொடுத்தான். நம்ம தங்கச்சிக்கு நாம தானே கொடுக்கனும். இதுவே தீபாவளி கொண்டாடின திருப்தியை நமக்கு கொடுத்திடும்டா... ம்.. கிளம்பு“
   அமுதன் நன்றி சொல்லமுடியாத நிலையில் ரகுவைப் பார்த்துவிட்டு நடந்தான்.

அருணா செல்வம்

30.10.2013

செவ்வாய், 29 அக்டோபர், 2013

கீழ் சாதி இரத்தம்!! (குட்டிக்கதை)


    வீட்டின் தெரு வாசலிலேயே நின்றிருந்த அஞ்சலையையும் அவள் அருகில் நின்றிருந்த சுகந்தியையும் அலட்சியமாகப் பார்த்த பொன்னம்பலம், “என்ன அஞ்சலை?“ என்று கேட்டார்.
   “இந்த மாச கடன் பணத்த கொண்டாந்திருக்கிறேங்க...“ தயங்கித் தயங்கிச் சொன்னாள் அஞ்சலை.
   “நா கொஞ்சம் வேலையா இருக்கேன். உள்ளே அம்மாகிட்ட குடுத்துடு.“
   “சரிங்க ஐயா“ என்று சொன்னவள் வீட்டைச் சுற்றிக்கொண்டு கொல்லை புறத்திற்குச் சென்றாள். “அத்தை... ஏன் நேரா வீட்டுக்குள்ள போகாம இப்படி சுத்திக்கினு போறீங்க?“ என்று கேட்ட சுகந்தியைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு, “இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பேன்னு தான் என் கூட வரவேண்டாம்ன்னு சொன்னேன். பேசாம வாயை மூடிகிட்டு இரு.“ என்றாள் அழுத்தமாக.
   “நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன்?“
   “நீ தப்பா கேக்கலை சுகந்தி. நாம பொறந்த இடம் அவ்வளவு தரம் கொறஞ்சதா இருக்கு. அவுக மேல் சாதிக்கராங்க. நாம கீழ்சாதி. அவங்க வீட்டுக்குள்ள நாம போவக்கூடாதாம். தீட்டுன்னு சொல்லுவாங்க.“
   இவளிடம் சொல்லிவிட்டு கொள்ளைப்புறத்து வாசலை நோக்கி “அம்மா... அம்மா... நா அஞ்சலை வந்திருக்கேன்..“ குரல் கொடுத்தாள்.
   கொஞ்ச நேரத்தில் “என்ன அஞ்சலை,“ என்று கேட்டபடி அந்த அம்மாள் கையில் சொம்பு தண்ணீருடன் வெளியில் வந்தாள்.
   “இந்த மாச வட்டி பணமும் கொஞ்சம் அசலும் சேத்து கொண்டாந்திருக்கேன்மா. இந்தாங்க.“ சொல்லியபடி பணத்தைத் தரையில் வைத்தாள்.
   அந்த அம்மாள் பணத்தைச் சுற்றி கொஞ்சமாக தண்ணீர் தெளித்து விட்டு எடுத்து எண்ணி முந்தானையில் முடிந்து கொண்டாள்.
   “தண்ணீ தெளிச்சிட்டா தீட்டு போயிடுமா...?“ என்று சற்றுக் கோபத்துடன் கேட்ட சுகந்தியை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்துவிட்டு, “யாருடி இவ?“ கேட்டாள் முகம் சுளித்தபடி.
   “என் அண்ணன் பொண்ணும்மா. டவுனுல படிச்சிட்டு இப்போ ஒரு ஆஸ்பத்திரியில வேலை செய்யிறா. அவ சம்பாதிச்ச பணம்தாம்மா இது.“ பவ்வியமாக சொன்னாள் அஞ்சலை.
   “ம்ம்ம்... நாலு காசு சம்பாதிக்கிற திமிரு அவளுக்கு. அஞ்சலை... பெரியவங்க கிட்ட எப்படி பேசனும்ன்னு சொல்லி வை.“ என்று கோபமாக சொல்லிவிட்டு வீட்டினுள் நுழையத் திரும்பியவளைக், “கொஞ்சம் இருங்கம்மா“ என்ற சுகந்தியின் வார்த்தை அவளை அங்கேயே நிற்க வைத்தது.
   “நாங்க கொடுத்த பணத்தைக் கூட தண்ணீ தெளிச்சிட்டு தொடுறீங்களே... அன்னைக்கு ஆக்ஸிடன்ட் ஆன உங்க புருஷனைக் காப்பாத்த ஒரு டாக்டர் காலில் விழுந்தீங்களே... அந்த டாக்டர் எங்க சாதிக்காரர் தான். அதிகமா ரத்தம் போயிடுச்சின்னு ஒருத்தர் உங்க புருஷனுக்கு ரத்தம் கொடுத்தாரே அவரும் எங்க சாதிக்காரர் தான். இப்போ வீட்டுக்குள்ளேயே தீட்டை வச்சிக்கினு இருக்கிறீங்களே... எப்படி தண்ணீ தெளிச்சி சுத்தம் பண்ணுறீங்க?“
   இதைக்கேட்ட அந்த அம்மாள் சிலையாக நின்றாள்.
   “சுகந்தி... இப்படியெல்லாம் பேசக்கூடாது.... வா போகலாம்“ கையைப்பிடித்து இழுத்தவளை உதறிவிட்டு சுகந்தி பொறுமையாகச் சொன்னாள். “அத்தை... நான் அவங்களை அவமானப்படுத்த வேண்டும்ன்னு சொல்லலை. கீழ்சாதிக் கரனுக்கும் ரத்தம் இருக்கு. அதுவும் சிகப்பாதான் இருக்கு. அதிலேயும் துடிப்பு இருக்குன்னு இவங்க தெரிஞ்சிக்க வேண்டும்ன்னு தான் சொன்னேன். அவங்க மனசை முதலில் சுத்தம் பண்ணிக்கட்டும். வாங்க  அத்தை. போகலாம்...“ என்று சொல்லிச் சென்றவளைப் பின்தொடர்ந்தாள் அஞ்சலை.

அருணா செல்வம்.
29.10.2013
   

   

வியாழன், 24 அக்டோபர், 2013

தீபாவளி வேண்டும்!!



மேல் மட்ட மக்கள்!!

வருடம் முழுதும் செய்த பாவத்தை
ஒருநாள் வந்திடும் கங்கையில்
குளித்துக் கழுவிவிட்டு,
சூரியோதயம் காணாத கண்களால்
சூரிய நாராயணுக்காகப் படைத்துப்
பணம் இருக்கும் பகட்டைப்
பலகாரத்தில் காண்பித்து,
வயிறார உண்ண முடியாமல்
வந்திருக்கும் நோயிக்குப் பயந்து,
பிச்சையிட வேண்டுமானாலும்
பிறரைக் கூட்டிக் காண்பித்துப்,
பகவானைக் கண்டிட
பகட்டு நகையுடையுடன்
மிடுக்காய்ச் சென்றிடுவார்...
மிகையானவருக்குத் தீபாவளி!!

நடுத்தர மக்கள்!!

கௌரவம் பார்த்துக்
குடும்பம் நடத்திக்
கரன்சியைக் கடவுளாக்கிக்
காய்ந்த வயிற்றைத் தடவி
பக்கத்து வீட்டுக்காரனை விட
பகட்டாகக் காட்டிக்கொண்டு,
வருடத்தில் ஒருமுறை
வந்திடும் போனஸ் பணத்திற்கு
ஓராயிரம் பொருள் வாங்க
கற்பனை செய்து கொண்டு,
ஒன்றும் வாங்க முடியாத
விலைவாசி உயர்வைக் கண்டு,
ஆசையாக காத்திருக்கும்
பிள்ளைக்குக் கூட கொடுக்காமல்
அடுத்த வீட்டு பலகாரத்தைப்
பெருமையுடன் இன்னொரு வீட்டுக்குக்
கொடுத்தனுப்பி விட்டு,
“யார் கொளுத்தினாலும்
பட்டாசு கரியாகும்“ தானென்று
உயர்வான தத்துவத்துடன்
அடுத்தவர் வெடியைக் காண்பித்தே
ஆறுதல் அடைந்து,
அடுத்த தீபாவளியைச்
சிறப்பாகக் கொண்டாடலாம் என்ற
சிந்தனையுடன் போகும் தீபாவளி!!

கீழ் மட்ட மக்கள்!!

வருடத்தில் ஒருநாளாவது
புத்தாடை அணிந்து,
புதுப்படம் பார்த்துவிட
கையிருப்பைக் கரைத்து,
மேலும் கடன்வாங்கி
காய்ச்சியதைக் குடித்துவிட்டு,
கறிமீன் ருசிபார்த்து
“நரகாசுரனா...? யார் அவன்?
அவனை அழிக்க
அவதாரம் எதற்கு?
என்னெதிரில் வரச்சொல் அவனை
ரெண்டுல ஒன்னு பாக்குறேன்...“ என்றும்,
“இன்னா தைரியம் இருந்தா
மக்கள கொடும படுத்தினான்....
.......! ஏய்... நரகாசுரா...
என் எதுருல வாடா...“
கட்டியிருந்த புது வேட்டி
கழண்டு விழுவதையும்
இலட்சியப் படுத்தாமல்.....

இவனுக்காகவே
“தீபாவளி“ என்று ஒருநாள்
திருநாளாய் வரவே வேண்டும்!!

அருணா செல்வம்
07.11.2010


(“தீபாவளி திருநாள் அவசியம் தானா?“ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு, பதிலாக நான் எழுதிய புதுக்கவிதை இது. நன்றி)