காசா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூலை, 2014

காசா? கல்யாணமா? (முடிவு)



    “கௌரி மேடம் மீட்டிங்குல இருக்கிறாங்க. முடியிற நேரம் தான். நீங்கள் காத்திருப்பதென்றால் அந்த ஹாலில் காத்திருங்கள்“ என்று அந்த அலுவக ஊழியர் சொல்லிவிட்டுச் சென்று அரை மணிநேரம் கடந்த பிறகு தான் கௌரி ஒரு கும்பல் புடைசூழ ஓர் அறையைவிட்டு வெளியில் வந்தாள். வந்தவள் மற்றவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டே இவளைக் கடந்து சென்றாள்.
    மலர் அவளை வியப்புடன் பார்த்தாள். கௌரிக்குப் படிப்பு முடிச்சதும் அவள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தது என்றும் அதே அலுவலகத்தில் மேலும் மேலும் பதவி உயர்வுகள் கிடைத்திருக்கிறது என்றும் விக்ரம் சொல்லி கேட்டிருக்கிறாள். அப்பொழுது அதையெல்லாம் மலர் பெரியதாக எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால் இங்கே பார்க்கும் பொழுது மலருக்குப் பிரமாண்டமாகத் தெரிந்தது.
   அவள் பலபேருக்கு உத்தரவு இடுபவள் போல் தெரிகிறாள். இவள் சொல்வதைத் தலையாட்டிக்கொண்டே குறிப்பு (நோட்ஸ்) எடுத்தபடி மற்றவர்கள் அவள் பின் செல்கிறார்கள்.
   இதையெல்லாம் பார்த்த போது மலர், இவளே பலபேருக்குப் புத்தி சொல்கிற அளவிற்கு இருக்கிறாள். இவகிட்ட நாம என்னவென்று பேசுவது.... பேசாமல் போய்விடலாமா.... என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே.... “ஐ... மலரக்கா. ஐய்யோ. உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சி? எப்படி இருக்கிறீங்க....?“ என்று குழந்தைத் தனமாக கேட்டபடி அவள் எதிரில்வந்து அவளைக் கட்டி முத்தமிட்டாள் கௌரி. 
    மலர் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாள்.
   “நல்லா இருக்கேன் கௌரி. ஒரு வேலையா இங்க வந்தேன். வந்த வேலை முடிஞ்சிடுச்சி. நீ இங்க தானே வேலை செய்யிற? அப்படியே உன்கூடவே வீட்டுக்குப் போயிடலாம்ன்னு தான் உன் ஆபிசுக்கு வந்தேன்“ என்றாள் மலர்.
   கௌரி இதை நம்பாதது அவளின் முகத்தில் தெரிந்தாலும் அதை மறைத்து “அப்படியா? சரி வாங்க போகலாம்“ என்று சொல்லியபடி இறங்கி நடந்தாள். மலரும் அவளைப் பின்தொடர்ந்தாள்.

   காரை ஒரு திறந்தவெளி ரெஸ்டெராண்டில் நிறுத்திவிட்டு ஓர் அமைதியான சூழல் உள்ள இடத்தில் மலரை அமர வைத்துவிட்டு எதிரில் அமர்ந்ததும், “இப்போ சொல்லுங்க அக்கா. என்ன விசயமா என்னைப் பார்க்க இவ்வளவு தொலைவு வந்திருக்கிறீங்க?“ மெல்லிய புன்முறுவலுடன் கௌரி கேட்டாள்.
   மலர் அவளின் புத்திசாலி தனத்தை உணர்ந்து அதற்கு மேல் இவளிடம் பொய் சொல்வது தவறு என்ற எண்ணத்துடன் நேரிடையாக விசயத்திற்கு வந்தாள்.
   “நான் உண்மையைச் சொல்லிடறேன். உன்னோட கல்யாணத்தைப் பற்றி பேச தான் வந்தேன்.“ என்றாள்.
   “விகரம் அண்ணா எங்கிட்ட பேச சொல்லி உங்கள அனுப்பினாரா....?“ கௌரி கேட்டாள்.
   “விக்ரம் அண்ணா இருக்கட்டும். நானே ரொம்ப நாளா கேட்கனும்ன்னு இருந்தேன். நீ ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுற?“
   இவளின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமலிக்க... “உனக்கு வேற யாரையாவது பிடிச்சிருக்கா? இருந்தா சொல்லு. நானே பக்கவமா விக்ரம் கிட்ட சொல்லுறேன்“ என்றாள் மெதுவாக.
   “அப்படியெல்லாம் எதுவும் இல்லைக்கா.“
   “நெஜமா சொல்லு. நீ யாரையும் காதலிக்கல.....?“
   கௌரி வெறுப்பாய் ஒரு புன்னகையை வெளியிட்டாள். “காதலிக்கிற வயசு வந்த போது, மனசைப் படிக்கனும் என்ற லட்சிய சங்கிலியால கட்டி போட்டிக்கினு இருந்தேன். அது ரொம்ப இறுக்கிடுச்சின்னு நினைக்கிறேன். அதனால இப்போ மனசு மறுத்துப் பேச்சின்னு நினைக்கிறேனுக்கா.“ என்றாள் கௌரி.
   சற்று யோசித்த மலர், “வாழ்க்கையில லட்சியம் எல்லாம் இருக்க வேண்டியது தான். அதுக்காக மனசை கட்டுப்படுத்தி வாழுறதும் நல்லது தான். ஆனால் இப்போ உன் லட்சியம் எல்லாம் நிறைவேறிடுச்சே. இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் தானே....“ கேட்டாள்.
   “இல்லக்கா. எனக்கு இப்போ அந்த ஆசையெல்லாம் வரலை.“
   “அப்போ இப்படியே இருந்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா...?“
   “இன்னும் அந்த முடிவுக்கெல்லாம் வரலை. பார்ப்போம்“ பொதுப்படையாகச் சொன்னாள் கௌரி.
   “இனிமேல என்ன பாக்குறது? எனக்கெல்லாம் வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிற வயசு வர்றதுக்கு முன்னாடியே பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணிட்டாங்க. உன் வயசுல என்னோட குழந்தைங்க ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிட்டது தெரியுமா?“
   “தெரியும்க்கா. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அந்த பதினெட்டு வயசுல எதுவுமே தெரியாத பெண்ணை ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நல்லது. எதைப்பற்றியுமே யோசிக்காத வயது அது. இது தான் வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை தொடங்கிடலாம்“ கௌரி சாதாரணமாக சொன்னாள்.
   “என்ன சொல்ல வர்ற நீ? புரியலை. எங்களை மாதிரி நீங்களும் எதுவும் தெரியாமல் வாழ்க்கையைத் தொடங்கிடக் கூடாதுன்னு தான் பெண்களைப் படிக்க வைக்கறாங்க. அவ காலுல அவ நிக்கனும்ன்னு நெனச்சி தான் வேலைக்கி அனுப்புறாங்க. இப்போ படிச்சதால உனக்கு நல்ல தெளிவு வந்திருக்கும். வாழ்க்கை என்றால் என்னன்னு புரிஞ்சிருக்கும். இவனைத்தான் நீ கட்டிக்கனும்ன்னு யாரும் உன்னை கட்டாயப் படுத்த முடியாது. உனக்கு பிடிச்சி நீயே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் பண்ணிக்கிற பக்கவம் வந்திருக்கு இல்லையா?“ சற்று கோபமாகவே கேட்டாள் மலர்.
    கௌரி ஒரு பெருமூச்சு விட்டாள். “பக்குவம். அது வந்ததால தான் நமக்குச் சரியானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாற வைக்கிறது. எல்லாமே நமக்கு மேட்சாகனும்ன்னு நினைக்க வைக்கிறது. படிச்சிட்டு வேலைக்குப் போய் வெளியுலகத்தைப் பார்க்கிறதால யோக்கியன் யார் என்று மனசு அலசிப்பார்க்க நினைக்கிறது.“ என்றாள் வெறுப்பாய்.
   மலர் யோசித்தாள். கௌரி சர்வர் கொண்டு வந்து வைத்தக் காபியைக் குடித்து முடித்தாள். மலர் காபியைக் கலக்கிக் கொண்டே பேசாமல் இருந்தாள்.
   “அக்கா.... உண்மையான காதல் என்று வர்ற வயசுல என்னையும் சிலபேர் காதலிப்பதாக சொன்னார்கள். காதலில் விழுந்தால் நாம் படிக்கனும், சம்பாதிக்கனும் என்ற லட்சியம் எல்லாம் போயிடும் என்ற பயத்தாலே அதெல்லாம் கூடாது என்ற மனக்கட்டுபாடோட இருந்தேன். இப்போ அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி பிள்ளைகளோட இருக்கிறார்கள். என்னை உயிரக்குயிராய் காதலிப்பதாக சொன்னவன் கூட இன்னைக்கு தன் குழந்தையை ஸ்கூலுல சேர்க்க லைனுல நிக்கிறான். என்னைவிட நன்றாக படித்தவர்கள் கூட காதல், கல்யாணம் என்ற ஒரு வட்டத்துக்குள் விழுந்து அதில் கஷ்டப்படுவதையும் சுகமாகத் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பது வேறு விசயம். ஆனால் எனக்கு அந்த வட்டத்துக்குள் விழ ஆசை இல்லை மலரக்கா“ என்றாள் கௌரி.
   மலர், இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
    கௌரியே தொடர்ந்தாள். “இவ்வளவு காலத்துல ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்க்கா. வாழ்க்கையில பணம் என்ற ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமா வாழலாம்“ என்றாள் கௌரி.
   நல்ல பாயிண்ட் கிடைத்தது என்ற நினைப்பில் மலர் நிமிர்ந்து உட்கார்ந்து “அதுக்காக காசையே கட்டிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா? உடம்பு என்று ஒன்று இருக்கிறது. அதில் உணர்வு என்ற ஒன்று இருக்கிறதே.... அதை நீ யோசிக்கிறதில்லையா...?“ கேட்டாள்.
   “வெறும் உடல் சுகத்திற்காக மனம் ஒட்டாமல் வாழனும்மின்னு எனக்கு ஆசையில்லையக்கா.“ என்றாள் சட்டென்று கௌரி.
   “சரி கௌரி. இந்த வயதைவிடு. பிற்காலத்தில் உனக்கு என்று ஒருவர் வேண்டாமா....? இப்படியே வாழ்ந்தால் கடைசியில் தனிமரமாகத்தான் இருக்கனும்“ கொஞ்சம் கோபமாகச் சொன்னாள் மலர்.
   கௌரி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சொன்னாள். “கல்யாணம் பண்ணி பல பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எடுத்தவர்கள் கூட இன்னைக்கி முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறார்கள். இந்தப் பேச்சை இதோட விடுங்க அக்கா“ என்று சொல்லியபடி எழுந்து விட்டாள்.

------------------------------------------------------
    மலர் யோசித்தாள். இவள் சொல்வதும் உண்மை தான். அதற்காக இவளை இப்படியே விட்டுவிடவும் கூடாதே.
   என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்.....?

நட்புறவுகளே.... உங்கள் முன் இந்தக் கேள்வியை வைக்கிறேன்.

“என்ன சொல்லி இவள் மனத்தை மாற்றலாம்....?“

   இந்தக் கதையைச் சிறுகதையாக எடுத்துக்கொள்ளாமல் உண்மைக் கதையாக எடுத்துக் கொண்டு பதில் கூறுங்கள்.
      
நட்புடன்
அருணா செல்வம்.

22.07.2014

ஞாயிறு, 20 ஜூலை, 2014

காசா? கல்யாணமா?



   
  மலர் கொண்டு வந்து கொடுத்தக் காபியை ஒரு வாய் குடித்துவிட்டு மலரை நிமிர்ந்து பார்த்தான் விக்ரம். மலர் சினேகிதமாக புன்னகைத்தபடி அவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
   “மலர்.... உங்கிட்ட தனியாகப் பேச வேண்டும் என்று தான் மஞ்சுவைக் கூட கூட்டிட்டு வரவில்லை.“ என்று பீடிகையுடன் தொடங்கினான்.
    தன் கணவரின் நண்பன். எப்பொழுதும் மனைவியுடன் வரும் விக்ரம் இந்த முறை தனியாக வந்திருக்கிறானே... என்று யோசனையில் இருந்த மலர், இவன் இப்படி சொன்னதும், இவருக்கு நம்மிடம் பேச என்ன இருக்கிறது என்பது போல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
    “மலர்.... இந்த நவம்பர் வந்தால் என் தங்கை கௌரிக்கு முப்பது வயசு தொடங்குது. உனக்குத் தெரியுமில்ல....?“ அவன் கேட்டதும்..... கொஞ்சம் தெளிந்து, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு “ம் தெரியும்“ என்றாள்.
   “அவ கிட்ட நீயாவது பேசி பாரேன்“ என்றான் கவலையாக.
   “நான் என்னங்க பேசுறது. நீங்கள் தான் ஒரு முடிவுக்கு வரணும். கௌரி மேல உங்களுக்கு இல்லாத அக்கரையா எனக்கு வந்திட போகுது....?“
    “உண்மைதான் மலர். ஆனால் எங்க பேச்சை அவ கேட்கலையே.... நீ அவ கிட்ட கொஞ்சம் நெருக்கமா பேசுவே. அதோட பெண் என்றால் அவளும் மனம் விட்டு பேசுவா இல்லையா...?“
    “ஏன்... உங்க மனைவி மஞ்சு கௌரிகிட்ட நல்லா தானே பேசுவாங்க. பிறகென்ன?“
    “பேசுவாங்க தான். ஆனாலும் அண்ணி நாத்தனார் என்ற டிஸ்டன்ஸ் இருக்கத்தான் செய்யுது. அதனால நீ பேசு. அவளோட கல்யாணத்தைப் பத்தி அவ எந்த முடிவுக்கு வந்தாலும் நான் ஏத்துகிறேன்ன்னு சொல்லு.....“
    “எந்த முடிவா.... அப்படியென்றால்....?“ புரியாமல் கேட்டாள் மலர்.
    “மலர்... உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை. எனக்கு படிப்பு முடியறதுக்குள்ள காதல் கல்யாணம் என்று அவசர அவசரமாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதாகி விட்டது. கௌரிக்கு என்னை விட்டா யாரும் இல்லை. வாழ்க்கையில கொஞ்சம் வசதியா வாழனும்ன்னா பணம் வேணும். அதுக்கு நல்லா படிச்சி பெரிய வேலைக்குப் போகனும். அதுக்கு முன்னால காதல் கீதல் என்று வந்துவிட்டால் என்னை மாதிரித்தான் கஷ்டப்படனும் என்று அவளிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
   படிப்பை முடிச்சிட்டா. நல்ல வேலை கெடைச்சுது. நானும் அவ வேலைக்குப் போனதும் வரன் தேட ஆரம்பிச்சேன். எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். ரெண்டு மூனு வருஷம் சம்பாதிக்கிறேன். அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா. நானும் சரின்னு விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறா. அஞ்சு வருஷமா மாசாமாசம் சம்பளத்துல பாதிய கொடுத்திடுறா. நானும் ரெண்டு வருஷம் கழிஞ்சதும் வரன் தேட ஆரம்பிச்சேன். வரன் தேடித் தேடி எந்த வரனைக் காட்டினாலும் வேண்டாம். என்னை இப்படியே விட்டுடுங்க என்கிறாள். கொஞ்சம் கோபமாகப் பேசினால்.... நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க. வீடு தனியாக எடுத்துக்கொண்டு போய் விடுறேன்னு சொல்லுறா.... அவ சம்பளத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறதால தான் நான் அவளைக் கல்யாணம் செஞ்சி குடுக்க மாட்டேங்கிறேன்னு வெளிப்படையாவே சிலர் பேசுகிறாங்க மலர். எனக்கு இதுவே பெரிய கவலையா இருக்குது“ என்றான் கவலையுடன் விக்ரம்.
   மலர் கௌரியுடன் சினேகிதமாகப் பேசி இருந்தாலும் இதுவரையில் அவளின் திருமணத்தைக் குறித்துப் பேசியதில்லை. ஆனால் அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் ஓர் ஓரத்தில் இருந்து அரித்துக் கொண்டே தான் இருந்தது. இப்பொழுது அவளின் அண்ணனே இது குறித்துப் பேச வந்த்தும் வெளிப்படையாகப் பேச அரம்பித்தாள்.
   “மத்தவங்க பேசுறதையெல்லாம் விடுங்க. ஆமா.... ஏன் கௌரி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றா...? ஏதாவது காதல் கீதல் இருக்குமோ.....?“ சந்தேகத்துடன் கேட்டாள் மலர்.
   “எனக்கு தெரிஞ்சி அதெல்லாம் இல்லை. ஆனால் இப்போ இருக்கிற நிலையில அவ யாரை கை காட்டுறாளோ அவனை கட்டி வைக்கத் தயாரா இருக்கேன்.“ என்று சொல்லி நிறுத்தியவன், “ப்ச்சி.... ஒரு காலத்துல படிப்பு மட்டும் தான் முக்கியம். காதல் கீதல் என்று வந்திடாதே என்றேன். அவ வேலைக்கு போக ஆரம்பிச்சதும்... ஏதாவது நம்ம ஊரு காரன், நம்ம ஜனமா இருந்தா கட்டி வக்கிறேன்னு ஜடைமாடையா சொன்னேன். ஆனா இப்போ.... எந்த சாதி மதமா இருந்தாலும் பரவாயில்ல, எந்த நாடு மொழி மாறி இருந்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு எறங்கி வந்திட்டேன்.“ என்றான் கவலையாக.
   விக்ரமைப் பார்க்கும் பொழுது மலருக்குச் சற்று கவலையாகத் தான் இருந்தது.
   என்ன செய்வது? பிடிவாதத்தைத் தளர்த்தும் போது தானே தெரிகிறது.... நாம் பிடித்திருந்தது பிடிக்காத ஒன்றை என்று.
   “சரி விக்ரம். நான் அவளிடம் பேசிப் பார்க்கிறேன்“ என்று மலர் சொன்னதும் பெருமூச்சுடன் கிளம்பினான்.

(தொடரும்)


(இன்று நேரமில்லை. நாளைக்குப் பேசி (கதையை) முடித்து விடுகிறேன்.....)