KALI VIRUTHAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KALI VIRUTHAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 ஜூலை, 2022

கடவுள் வணக்கம்! (கலிவிருத்தம் 1)

 



(கலிவிருத்தம் 1)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
உலகம் பாடிடும் ஓமெனும் நாதமும்
புலரும் காலையின் பூவதன் வாசமும்
உனது நல்லருள் உற்றிடும் நன்மையில்
எனது பண்ணிலும் இன்பினை நல்கவே!
.
(கலிவிருத்தம் 2)
(விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்)
.
கற்றவர் கூடிடும் காலம் மின்னிடும்!
பற்றினை விட்டவர் பாதை பண்பிடம்!
பெற்றவர் கூறிடும் பெருமை ஏற்றிடும்!
உற்றிடும் அன்பினில் உயிரைச் சேர்த்திடு!

.
(கலிவிருத்தம் 3)
(குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்)
.
மானின் துள்ளலாய் மாதவள் ஓடவும்
மீனின் மேனியாய் மெல்லிடை ஆடவும்
தேனின் இன்புடன் செவ்விதழ் பேசவும்
வானின் தூரலாய் வஞ்சியோ பாடினாள்!

.
பாவலர் அருணா செல்வம்
04.07.2022

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கற்பின் கனலாய் மாதவி!

 



(கலிவிருத்தம்)
.
இழிவெனும் குலத்தொழிலில்
…….இயைந்துடனே நடக்கவில்லை!
பழிவரும் என்றாலும்
…….பாதகத்தைச் செய்யவில்லை!
அழிவுடனே நின்றாலும்
…….அத்தொழிலை நாடாத
விழிமொழியும் மாதவியின்
…….விதிதனையே நாமறிவோம்!
.
இக்காலம் போலில்லை!
…….இன்றிருந்த நிலையில்லை!
அக்கால வேளையிலே
…….ஆண்களுக்குப் பலபேராம்!
சிக்கான கோவலனின்
…….சிங்கார தேவதையாய்
மிக்காக வந்தவளே
……மென்னிடையாள் மாதவியே!
.
ஒருவனுக்கே ஒருத்தியென்ற
…….உயர்வான பண்பாட்டைத்
திருவெனவே மதித்திருந்தாள்
…….தியாகமுடன் வாழ்ந்திருந்தாள்!
பெருவாழ்வு வாழ்வதற்கு
…….பெருமழகு இருந்திருந்தும்
கருமனத்தைக் கொள்ளாத
…….கற்புடனே வாழ்ந்திருந்தாள்!
.
கற்புக்குக் கனலென்று
…….கண்ணகியும் சீதையையும்
பொற்புடனே புகழ்கின்ற
…….புண்ணியரின் கருவெல்லாம்
நற்பண்பில் உயர்ந்திருக்கும்
…….நலத்தினிலே கண்டதனால்
நற்குணத்தாள் மாதவியும்
…....கற்பினிலே கனலாவாள்!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2020