Venba லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Venba லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 ஜனவரி, 2022

தாமரை மலர்!

 


மங்கலத் தாமரையின் மையம் தளமிருக்கும்
திங்களொளி காணாத் திருமலர்! - மங்கிடும்
புத்தியைக் கூர்மையாக்கும்! பூசைக் குதவிடும்!
சித்தமருந் தாகும் சிறந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.01.2022

(தாமரை மலரின் நடுவில் “பொகுட்டு“ என்ற தளம் இருக்கும், இது தான் மற்ற நீர்மலருக்கும் தாமரை மலருக்கும் உள்ள வித்தியாசம்)

புதன், 26 ஜனவரி, 2022

குவளை மலர்!

 


கூரிதழ் மங்கும் குவளைமலர் எந்நாளும்
காரிருள் விட்டுவிலக கட்டவிழும்! - நீரின்மேல்
மங்கையரின் கண்ணாய் மணத்துடன் பூத்தாடும்!
செங்கழுநீர் என்றபெயர் சேர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
27.01.2022

செவ்வாய், 25 ஜனவரி, 2022

தும்பைப் பூ!

 


.
விசப்பூச்சி நஞ்சை விரைந்து முறிக்கும்
கசக்கியுண்ண ஓடிடும் காய்ச்சல்! - அசல்வெண்மை!
தும்பையின் சாறு சொறிசிரங்கைப் போக்கிடும்!
செம்மைநல வாழ்விதன் சேர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
26.01.2022 

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கரந்தை மலர்!

 


விளைத்திடும் நன்மை வியந்திட வைக்கும்
களையாய் வளரும் கரந்தை! - கிளைமுழுதும்
பக்குவமாய்ச் சாப்பிட பைத்தியம் போக்கிடும்
முக்கிய மூலிகையில் முத்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.01.2022

வெள்ளி, 21 ஜனவரி, 2022

சண்பகப் பூ ! (பித்திகம்)

 


சண்பகப்பூ வாசம் சளையா துறங்கவைக்கும்!
கண்நோய் தலைநோய் களைப்போக்கும்! - பெண்களின்
உள்ளுறுப்பைச் சீராக்கும்! ஊறிய நீர்குடிக்கக்
கொள்ளைநோய் யோடுங் குலைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
21.01.2022

வியாழன், 20 ஜனவரி, 2022

ஆரம் பூ (சந்தனப் பூ)

 


வாச மரத்தில் மலரும்பூ! அன்புகொண்ட
நேசமுடன் ஆரமாய் நெஞ்சணிந்தார்! - கேசமதில்
சூட்ட முடியாது! சொக்கவைக்கும் வாசமெல்லாம்
கூட்டிவிடும் கட்டையதன் கூற்று!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022

புதன், 19 ஜனவரி, 2022

இலவம்பூ

 


காய்த்துப் பழுக்காமல் காரியமாய் வாழ்ந்துவிடும்
தூய்மை இலவம்பூ சொல்லிவிடும்! - வாய்மை
நிறைந்தமனம் பஞ்சின் நிலைபோல் மிதக்கும்!
குறைந்தும் கொடுக்கும் குணம்!
.
பாவலர் அருணா செல்வம்
19.01.2022

திங்கள், 10 ஜனவரி, 2022

உற்றறிந்து கொள் !

 


மார்கழியில் ஆண்டாள் வரைந்த திருப்பாவை
ஊர்போற்ற பாடுகின்றார் உன்னதமாய்! - வீர்கொண்டு
நற்றமிழில் பாடிடுவேன் நற்கவிகள்! என்னவனே!
உற்றறிந்து கொண்டால் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

மொழியேது ?18

 


மார்கழியில் பாலைநில மக்களாய் பாடுகின்றேன்!
சீர்முல்லை மண்ணில் சிறப்பிருந்தும்! - நேர்மையின்றிச்
சாதியினம் பேசுகின்றார் சார்ந்தவர்கள்! உன்னிடத்தில்
சேதியிதைச் சொல்லமொழி ஏது?
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

நேசமுடன் வாழ்வு !

 


மார்கழியில் பெண்கள்திரு மாலிடம் வேண்டுவது
நீர்நிறைந்த ஞாலத்தில் நேர்மையுடன் - சேர்ந்திருக்க
ஆசையுடை நெஞ்சமொன்று ஆர்வமுடன் மாலையிடும்
நேசமுடை வாழ்வை நினைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கூசாமல் பேசும்!

 


மார்கழி நற்குளிர் வாட்டியும் மேனிசுடும்!
போர்வையாய் என்னவளைப் போர்த்துவதால்! - நேர்நிமிர்ந்து
பேசாதி ருந்தும் பெரியவிழி பேசிவிடும்
கூசாமல் காதலைக் கோர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

பழகிப்பார்!

 


மார்கழியில் பூக்கும் மலரெல்லாம் வாசமில்லை!
நார்தொடுத்த மாலையோ நல்லழகே! - பார்க்க
அழகில்லை! பாசமுடன் ஆளுமென் நெஞ்சைப்
பழகிப்பார்! கண்டயர்வாய் பண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2022

துள்ளும் நெஞ்சம்!

 


மார்கழியில் செந்நெல் வயல்நிறைந்து மண்பார்க்க
வேர்பெருத்த செங்கரும்பு வெய்திருக்க  - ஏர்பிடித்தோன்
உள்ளம் மகிழ்தல்போல் உன்முகத்தைக் கண்டுவிட்டால்
துள்ளுதடி நெஞ்சம் தொடர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

திங்கள், 3 ஜனவரி, 2022

என்னவென்று சொல்வேன் ? 12

 

 


மார்கழியில் பூசணைப்பூ மஞ்சளாய்ப் பூத்ததைச்
சேர்க்கின்றாய் பசுஞ்சாண சீரழகில்!  - ஈர்க்கிறதே!
என்மனக் கோலமெல்லாம் உன்வாசல் கோலத்தில்
என்னவென்று சொல்வேன் எடுத்து!
.
பாவலர் அருணா செல்வம்
03.01.2022

பொய் !

 


மார்கழியில் வந்தாய்! மயக்கத்தைத் தந்துநின்றாய்!
ஓர்வழி இல்லை உனைமறக்க! - தீர்வும்
தெரியவில்லை! என்னுள் தெளிவுமில்லை! உன்னுள்
புரியாமல் போவதெல்லாம் பொய்!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022

என் கவியுள் ஆடு!

 


மார்கழியின் பின்னிரவு! மஞ்சத்தில் உன்னினைவு!
கூர்பிறை உன்புருவக் கோடிட! -  ஆர்வமொழி
பாட எனையழைக்கப் பாடுகின்றேன்! கோதையே
ஆட…வா என்கவியுள் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2022

புதன், 29 டிசம்பர், 2021

வந்துவிடு வாழ்வோம் ! 9

 



மார்கழியில் ஆண்டாள் மறைவாக வேண்டினாள்!
நேர்வழியில் வேண்டுகிறேன் நேரிழையே!  - கார்வண்ணன்
ஆழ்வார் கனவில் அழைத்திட்டான்! வந்துவிடு
வாழ்வோம் நினைவில் மகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

நோய் பயந்தோடும் ! 8

 


மார்கழியில் ஆற்றோரம் மாங்குயிலின் இன்னிசையில்
நீர்ச்சொட்டும் ஈரமுடன் நிற்கின்றாய்!  - கார்காலம்
காய்ச்சலுடல் தீண்டிடும்! கட்டிக்கொள் என்னுடலை
நோய்பயந் தோடிடும் நொந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

உன்இறை நான்!

 


மார்கழிப் பூக்களை மாலை தொடுத்தெடுத்துச்
சீர்விளங்கும் சன்னதிக்குச் செல்கின்றாய்! - ஊர்வசியே!
உன்னிறை நானென்(று) உணரவைப்பார் உன்னிறைவன்!
அன்றெனைத் தேடுவாய் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

திங்கள், 27 டிசம்பர், 2021

பெண்ணே நவில்!

 



மார்கழியில் நோம்பிருக்கும் மங்கையே! என்னிடத்தில்
ஓர்வார்த்தை பேசா(து) உருகுகிறாய்!  - ஊர்சொன்ன
சொற்களால் உண்டான சூடு தணிந்திடவே
நற்றவத்து பெண்ணே நவில்!
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2021