வெள்ளி, 29 மார்ச், 2013

இன்பம் இதுதான்!!





நாடுவிட்டு நாடுவந்த பின்பும் கூட
    நம்மொழியின் மேல்பற்றே உள்ள தையா!
கூடுவிட்டுக் கூடுபாயும் மாயம் போலக்
    குடிகொண்ட நாட்டுமொழி வந்த தையா!
வீடுவிட்டு வெளிசென்றால் விருப்ப மின்றி
    வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா!
கோடுபோட்டு வாழ்ந்தாலும் கொள்கை தன்னைக்
    கூறுபோட்டு விற்கவேண்டி உள்ள தையா!

மேசைநிறைய புத்தகங்கள் இருந்த போதும்
    மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!
வீசைஎன்ன விலையென்று கேட்டுக் காசை
    வீசுவதால் உண்மையன்பு கிடைத்தி டாது!
ஓசையுடன் பாட்டெழுதிப் படைத்திட் டாலும்
    உள்ளிருக்கும் வாசகங்கள் புரிந்தி டாது!
காசைத்தே டும்உலகில் வாழ்ந்த போதும்
    கவிதைமொழி தமிழருக்குக் கசந்தி டாது!

தென்னவரின் தேமதுரத் தமிழின் ஓசை
    தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே
அன்னமிடும் அம்மாகைப் பக்கு வத்தை
    ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே
விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை!
    வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்
மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து
    எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!

நம்மொழியின் மேல்பற்று நன்றே கொண்டு
    நாட்டமுடன் வந்துநாமும் பேசு கின்றோம்!
எம்மொழிக்கே இணையாக மொழியும் உண்டோ?
    இருந்திருந்தால் மனமங்குச் சென்று தங்கும்!
செம்மொழியாய்த் தேமதுரத் தமிழின் ஓசை
    செழிப்பாகக் கேட்டிடவே காத்து நிற்போம்!
எம்முறையும் எம்தமிழின் இனிமை கேட்டால்
    இன்பமிதே! வேறில்லை என்றே சொல்வோம்!

அருணா செல்வம்.

புதன், 27 மார்ச், 2013

கைகளில் காட்சிகள்!! (படங்கள் மட்டும்)






































இவை அனைத்தும் நான் இணையத்தில் பார்த்து இரசித்தவைகள்.
உங்களின் பார்வைக்கும் கொண்டு வந்தேன். 
  
அருணா செல்வம்.

செவ்வாய், 26 மார்ச், 2013

தூது போவாய் அன்னமே..!! (கவிதைக் கதை)



வளம்கொழித்த இளம்மங்கை! நிலவின் வண்ணம்!
     வதனமுகம் கொண்டயிவள் எண்ணம் என்ன?
களம்கொழித்த நாட்டைவிட்டு நம்மை நாடி
     கயல்துள்ளும் குளக்கதைக்கு வந்த தேனோ?
இளம்மனது கொண்டஅந்த வெள்ளை அன்னம்
     “ஏனிந்த  இன்முகத்தில் வாட்டம் என்றே
விளக்கிவிடு! உன்துயரம் போக்க நானும்
     விழைக்கின்றேன் அழகுபெண்ணே!“ என்ற(து) அன்னம்!

உண்மைநிறம் கொண்டநல்ல வெள்ளை அன்னம்
     உதவிக்கு வருதென்றே அறிந்த நங்கை
“கண்சிறைக்குள் நுழைந்துவிட்ட காதல் கள்வன்
     கற்பென்ற திண்மைதன்னை அழித்து விட்டான்!
பெண்நிலையென் மாற்றத்தைக் கண்ட பெற்றோர்
     பேசுகின்றார் மணமுடிக்க வேற்றான் தன்னை!
பண்பற்று போனதில்லை என்தன் உள்ளம்
     பாவைஉயிர் போவதற்குள் போய்சொல்“ என்றாள்.

வஞ்சிசொன்ன காதலினைக் கேட்ட அன்னம்,
     வலிகொடுத்த வேதனையை தன்னில் ஏற்று
“நெஞ்சிநிறை கொண்டதுந்தன் நேர்மை காதல்!
     நெடுந்தூரம் என்றாலும் போவேன் தூதாய்!
அஞ்சிநீயே அழிந்திடாதே! உண்மை காதல்
     அகிலமுள்ள வரையினிலே நிலைத்தி ருக்கும்!
கொஞ்சகாலம் பொறுத்திருப்பாய்! கோதை உன்னை
    குழைந்தழைப்பான் என்றுசொல்லி போன(து) அன்னம்!!

அருணா செல்வம்.
26.03.2013

நட்புறவுகளுக்கு வணக்கம்.
     நண்பர் நாகராஜ் ஜி கொடுத்தப் படத்திற்கு என் சிறுமூளைக்கு எட்டிய வரையில் கவிதையில் கதைபோல் எழுதியுள்ளேன். படத்தைக் கொடுத்து அவரவர்களின் விருப்பம் போல் எழுதிக் கொள்ளச் சொன்ன நாகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி. இதுபோல அவருக்கு ஒரு சிந்தனை வந்ததால் தான் என் போன்றோர்கள் கொஞ்சமாவது இப்படி யோசித்து எழுத முடிகிறது. அவரின் இந்த வித்தாசமான பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி நாகராஜ் ஜி.

நட்புடன்
அருணா செல்வம்.