விரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 நவம்பர், 2020

கணபதியாரே !

 

..

தும்பிக் கரமுடன் தொந்தி பெருகிய
    தொன்மை நிறைந்திடும் கணபதியாரே!
எம்பிக் குதித்தினும் எண்ணும் பொருளினுள்
    இன்பம் கிடைப்பது விதியெனுமாயே!
நம்பி வருமெனை நல்கும் அறிவினை
    நன்மை பெருகிட அருளிடுவாயே!
தெம்பு துணைவரத் தென்னி மரமெனத்
    திண்மை முழுவதும் வழங்கிடுவாயே!
 
விந்தை உலகிது வெல்ல நினைப்பதை
     விண்ணின் உயர்வென வியந்திருந்தேனே!
எந்தன் மனமதில் என்றும் உறைந்துடன்
     இன்ப மருளிடும் பெருவிறைநீயே!
முந்தி இருத்திட முந்தன் வரந்தர
     முன்னை செயலினைத் தொடங்கிடுவேனே!
சிந்தை செயற்படச் செம்மை முறையுடன்
     சென்று நலமுடன் முடிப்பதுநீயே!
 
அன்னை மனமுடன் அந்தம் வியந்திடும்
    அன்பின் கருவறை உனதுளம்தானே!
மின்னும் மலரினுள் மெல்ல மணத்திடும்
    மென்மைக் குணமென நிறைந்திடுந்தேனே!
சொன்ன கவிதனில் சொக்கும் பொருளினில்
    தொன்மை இறையுனைக் கலப்பதனாலே
நன்மை பலமிகும் நஞ்சு அழிந்திடும்
    நன்றி யுடனுனை வணங்கிடுவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
24.11.2020