மதுரைத் தமிழன் அவர்கள் தொடர் பதிவு எழுதச்
சொல்லி தொடங்கியதில் இருந்து நிறைய பதிவர்கள் தங்களின் மனதில் பட்டதைப் பதிவாக
போட்டு அசத்தி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால்.....
மூன்றாவது கேள்விக்கும் ஒன்பதாவது
கேள்விக்கும் ஒரு சில ஆண்கள் கொடுத்திருக்கும் பதில் இருக்கிறதே..... மதுரைத் தமிழன்,
பகவான் ஜி, பால கணேஷ் ஐயா, ரஹிம் கஸாலி..... இன்னும் ஒரு சிலர் பெயர்களை மறந்து
விட்டேன்.
இவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணியதால்
தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. எங்களுக்காவது
பரவாயில்லை.
பதிவுகளைப் படிக்கும் திருமணமாகாத
இளஞர்கள்... சீனு, ஹாரி, அரசன், அ. பாண்டியன் போன்றோர்கள் உங்களின் பதில்களில்
பயந்து விட மாட்டார்களா....?))) ஏங்க சின்ன பிள்ளைகளை இப்படி
பயமுறுத்துகிறீர்கள்...?
பாவேர்தர் பாரதிதாசனின் “குடும்பவிளக்கில்“
ஒரு முதுமைக் காதல் பாடல்
புதுமலர் அல்ல! காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லாள்
தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக்(கு) இன்பம் நல்கும்?
“இருக்கின்றாள்“ என்ப தொன்றே!
இப்படி அல்லவோ ஒவ்வோர் கணவனும் தன் மனைவியை நினைக்க வேண்டும்.
சரி இதை விடுங்கள்.
ஆண்களுக்குச் சிரிக்கவே
தெரியாதா....? அல்லது வராதா....? கல்யாணத்திலிருந்தே ஏதோ பறிகொடுத்த மாதிரியே முகத்தை
சீரியஸாகவே வைத்துக்கொண்டு இருந்தால் எந்த பொண்ணுக்குத் தான் கோபம் வராது? இதைக் கொஞ்சமாவது
மாற்றிக்கொள்ளுங்கள் ஆண்களே.
சிரிக்க பழகுங்கள். ஆழ்ந்த
சிரிப்பில் கூட ஏதோ ஒரு சிறு வலி இருந்துகொண்டே தான் இருக்கும். இருந்தாலும்
மற்றவர்களுக்காவது சிரிக்க பழகுங்கள்.
என்னடா இது அருணா அட்வைஸ் எல்லாம்
பண்ணுதே என்று எண்ணிவிட வேண்டாம்.
அருணா சொன்னால் மட்டும் சிரிப்பு
வந்து விடுமா என்றும் நினைக்க தோன்றுகிறதா...?
பேசாமல் இந்த ஜோக்கைப் படித்துப்
பாருங்கள். ஜோக் புரிந்தால் உங்களுக்குத் தானாக சிரிப்பு வரும்.
ஒரு தபால் ஆபிஸில் ஒருவர் எதையோ
எழுத நினைத்துத் தன் பேனாவை எடுத்து எழுதிய போது அது சரியாக எழுதவில்லை. முள்
உடைந்து விட்டதா... அல்லது பேனாவில் மை இல்லையா என்பது தெரியாமல் அதை உதறி உதறி
எழுத முயற்சித்துக் கொண்டு இருந்தார்.
அந்த நேரத்தில் ஒருவர் ஏதோ ஒரு பாரத்தில்
கையெழுத்திட பேனா இல்லாததால் இவரிடம் வந்து, “ஐயா... கொஞ்சம் பேனா தர்றீங்களா...?“
என்று கேட்டார்.
ஏற்கனவே எரிச்சலுடன் இருந்தவர் திரும்பி அவரைப் பார்த்து, “ம்ம்ம்.... இப்போ
ஸ்டாக் இல்லை. காலையில வா. கொஞ்சமென்ன... எல்லாத்தையும் நீயே எடுத்துக் கொண்டு போ“
என்றார்.
வந்தவர் எதுவும் விளங்காமல் “ஙே“
என்று விழித்தபடி சென்றார்.
என்ன நண்பர்களே சிரித்தீர்களா....?
சிரிப்பு வரவில்லை என்றால் என் தவறு இல்லை.
சிரியுங்கள். சிரியுங்கள். சிரித்துக்கொண்டே இருங்கள்.
அன்புடன்
அருணா செல்வம்.
இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த நினைத்து எழுதியது இல்லை.
