Ensir virutham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Ensir virutham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 பிப்ரவரி, 2023

இமைக்குள்ளே நீ!

 


உமையாளை இடம்வைத்த ஈசன் உள்ளம்
   உயர்வுணர்த்தும் பெண்ணினத்தின் மேன்மை சொல்லும் !
எமைக்காக்கும் கடவுளைப்போல் காதல் கொண்டே
   என்னவளை என்கண்ணில் வைத்தேன் நன்றே!
சுமையென்றே வாழ்வினையே நினைத்தேன்! அன்பு
   சுந்தரியுன் காதலினால் வசந்தம் கண்டேன்!
இமைக்குள்ளே நீயிருந்து நடத்து கின்றாய்
   இனியாவும் நலமாகும் என்றன் வாழ்வில்!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2013

திங்கள், 6 டிசம்பர், 2021

உடைந்து போனேன்!

 


சித்திரையில் என்சிந்தை குளிர்ந்திடக் கூவியழைப்பாய்!
     செய்தொழிலில் நீயிருந்தால் செயம் என்பாய்!
இத்தரையில் உனையின்றி இன்பமெது வெனச்சொல்லி
     இறைவனிடம் கையேந்தி யெனைய ழைப்பாய்!
நித்திரையே இல்லாத மேலொருவன் சிறைபிடிக்க
     நினைவின்றி உடல்மறைத்து நேரங் காப்பேன்!
உத்தரவு கிடைத்தவுடன் ஓடிவந்து குளிர்வித்தால்
    ஓடிவிடச் சொல்கின்றாய்! உடைந்து போனேன்!
.
எனக்கான நேரத்தில் வந்துநின்று, எனதன்பை
     இணையில்லா உன்னிடத்தில் இறக்கி வைத்தேன்!
தனக்கான பயன்வேண்டும் என்றிருந்தால் அழைத்தவளைத்
     தங்குதர்கோ ரிடங்கொடுத்துத் தடுக்க வேண்டும்!
உனக்கான காரியத்தைத் தவறவிட்டே அலைகழித்தே
     ஓடிவந்த எனைநீயே ஓடச் சொன்னாய்!
மனக்கணக்குப் போட்டுவைத்து, வந்தவளை வாழவைத்தால்
     மனக்குறையே வந்திடாமல் வாழ்ந்தி ருப்பாய்!
.
குடைதிறந்தும் உடல்நனைக்கும் சாரலுடன் விதைமுளைத்துக்
     கொழிக்கவைத்தே உணவுதரக் கொட்டித் தீர்த்து
மடைவழிய நடைநடந்து மன்னவனைச் சங்கமிப்பேன்!
     வழியெல்லாம் தடையிருக்க மருண்டு நின்றேன்!
விடைதெரிய இடமற்றோர் எனையிகழ்ந்து பேசிவிட
     விதியென்றே கதிகலங்கி வீணாய் யுள்ளேன்!
தடையெல்லாம் போனாலும் நான்தேங்க நிலைசெய்தால்
     தடம்புரளா மழைநீராய்த் தழைப்பேன் தானே!
.
(மழை பேசியது)
பாவலர் அருணா செல்வம்
06.12.2021

.
(ஆறுகாய் + மா + தேமா)



திங்கள், 6 ஜூலை, 2020

சோலையின் ஏக்கம்!



.
மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
    மென்நடையைக் கண்டுவிட்டால் அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்!
    தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்!
    வடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
    மலர்பாதம் தன்மீது படுமா என்றே!!
.
பாவலர் அருணா செல்வம்
(“தயக்கம் ஏனோ அதைச் சொல்ல ?“ என்ற என் நூலிலிருந்து….)