வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெற்றி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?



    
   வாழ்க்கையை மிகவும் சீரியஸாக நினைத்துச் செயல் பட்ட இளைஞன் ஒருவன், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து மிகவும் நொந்து போன நிலையில் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவைச் சென்று சந்தித்தான்.
    “பெருந்தகையே.... வாழ்க்கையில் தொடர்ந்து நான் தோல்வியையே சந்தித்து வருகிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முயன்றும் வெற்றியை என்னால் காணமுடியவில்லை. மிகவும் மனமொடிந்த நிலையில் தங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தாங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் புகழுக்கும் வெற்றிக்கும் தாங்கள் எப்படி எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.“ என்றான்.
    “தெரிந்து என்ன செய்யப் போகிறாய்,“ என்று கேட்டார் பெர்னார்ட் ஷா.
     “அதையே என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வெற்றி பெறலாம் என நினைக்கிறேன்.“ என்றான் இளைஞன்.
    “நல்ல முயற்சி. செய்துப்பார்.... நீ ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறாய்?“
    “தெரியவில்லை.“
    “தெரிந்து கொள்ளவாவது முயற்றி செய்தாயா?“
    “ஆமாம். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அடுத்தடுத்து முயற்சிப்பேன். தொடர்ந்து தோல்வியே வரும். அதனால் மனமொடிந்து போய்விடுகிறேன். அடுத்து வேறு விஷயங்களை நினைக்கிறேன். செயல்படுகிறேன். அவற்றிலும் தோல்வி தான் வந்தது.“ என்றான் கவலையாக.
    “இளைஞனே.... நானும் உன்னைப் போல இளைஞனாக இருந்தபோது பத்துக் காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது காரியங்களில் தோல்வியைத் தான் தழுவினேன். ஆனால் அதற்காக அந்தத் தோல்வியை நான் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஒன்பது காரியங்களிலும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் ஒரு உண்மை பளிச்சிட்டது. தொண்ணூறு முறை முயன்றால் அந்த ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்ற உண்மை தான் அது.
    அதாவது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.“ என்று விளக்கமளித்தார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
    வெற்றியின் ரகசியத்தை அறிந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

வியாழன், 13 மார்ச், 2014

எதிலும் வெற்றி அடைய வேண்டுமா?




     “இந்த ராத்திரி நேரத்துல எங்க கிளம்புற ராமசாமி....?“ கேட்டபடியே வந்தார் முனைவர் .....
   “வா முனைவா... இந்த வீரப்பான் என்ன செஞ்சான் தெரியுமா....?“
   “என்ன செஞ்சான்?“
    “போன வருஷம் அவசத்துக்கு எங்கிட்ட கடன் வாங்கினான். தோபாரு எழுதி கையெழுத்துக் கூட போட்டுக் குடுத்திருக்கிறான். வருஷம் ஒன்னாச்சேன்னு வேலைக்காரனை அனுப்பி பணம் கேட்டா... நான் ராமசாமிகிட்ட பணமே வாங்கலைன்னு சொல்லி அனுப்பிட்டான். அதான் ஒரு எட்டு நானே போயி கேக்கலாம்ன்னு கௌம்பிறேன்“ என்றார் ராமசாமி.
    “கேட்க வேண்டியது தான். ஆனால் அதுக்கு இந்த ராத்திரி நேரம் வேண்டாம். காலையில போய் கேளு“
    “ராத்திரியா இருந்தா என்னா.... பணம் என்னோடது. எனக்குத் தான் அதோட அருமை தெரியும்.“
    “சரிதாம்பா. நானும் இல்லைன்னு சொல்லலை. ஆனால் இப்போ போனால்... அவனுக்குக் கண்ணு சரியா தெரியாது. ராத்திரி நேரத்துல குடிச்சிட்டு வேற இருப்பான். அவன் போன வருஷம் கஷ்டத்துல நிறைய பேருகிட்ட கடன் வாங்கினான். அதில் உன்னை மறந்து போய் இருப்பான். நியாயமான ஆளு. அதனால நாளைக்கு நேராபோய் அவனைப் பார்த்துப் பேசு.“ என்றார்
   “அப்போ.... காலையில போய் கேட்டால் நல்லதுன்னு சொல்லுறியா...?“
   “நான் சொல்லலைப்பா.... காளமேகப் புலவர் காலம் அறிந்து செயல் பட வேண்டும்ன்னு ஒரு பாட்டில் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.“
    “அப்படியா...? எங்க அந்தப் பாட்டைச் சொல்லு.“ ஆவலாகக் கேட்டார் ராமசாமி.
   “இந்த பாட்டுல என்ன ஒரு விசேசம் என்றால், இது வெறும் ககர வர்க்கம் மட்டுமே அமைச்சிப் பாடி இருக்கிறார்.“
    “ககர வர்க்கமா....? அப்படின்னா...?“
    “ககர வர்க்கம்ன்னா.... க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, என்ற எழுத்துக்கள் தான். இந்த எழுத்துக்களை மட்டுமே பாட்டில் எழுதி இருக்கிறார். மற்ற எந்த எழுத்துக்களும் இல்லை. இதை “வித்தாரச் செய்யுள்“ என்று சொல்கிறார்கள்“
    “அப்படியா...? எங்க அந்த செய்யுளை சொல்லு பார்ப்போம்“
  
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.

    “இது தான் பாடல். என்ன பொருள் வியங்கியதா...?“
    “என்ன.... பொருள் விளங்கியதாவா....? ஏன் கேக்க மாட்டே.... ஏதோ காக்கா காக்கான்னு சொல்லிட்டு பொருளைக் கேட்டால்... நான் எங்க போவேன்? அதை நீ தான் சொல்லனும். சொல்லு“ என்றார் சற்று கடுப்புடன் ராமசாமி.

    முனைவர் சொல்லத் துவங்கினார். “அதாவது
காக்கைக்கு ஆகா கூகை – காக்கைக்கு கூகை இரவில் வெல்லுதல் ஆகாது. (கூகை என்றால் ஆந்தை)
கூகைக்கு ஆகா காக்கை – கூகைக்குக் காக்கை பகலில் வெல்லுதல் ஆகாது.

கோக்கு கூக் காக்கைக்கு – அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்றும் கைக்கும். (கோ என்றால் அரசன்)

கொக்கொக்க – கொக்கைப் போல (அதாவது சரியான சமயம் வரும் வரை காத்திருத்தல்)
கைக்கைக்கு – பகையை எதிர்த்து
காக்கைக்கு – காப்பாற்றுவதற்கு
கைக்கைக்கா கா – (கைக்கு ஐக்கு ஆகா) காலமற்றதாயின் தலைவனுக்கும் இயலாதாகிப் போகும்.

   “என்ன ராமசாமி... இப்போ பொருள் புரிந்த்தா...?“
   “திரும்ப பொருளை மட்டும் சொல்லு“
   “காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. அதனால் காக்கை இரவிலும் ஆந்தை பகலிலும் வெல்ல முடியாது. (அதுபோல) அரசன் தன் நாட்டை பகையிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் கொக்கைப் போல சரியான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
   பகையை எதிர்த்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு ஏற்ற காலம் இல்லை என்றால் அரசனுக்கு வெற்றி என்பது இல்லை என்றாகிவிடும். இது தான் அந்த பாடலின் விளக்கம். இப்போ விளக்கம் புரிஞ்சுதா?“ முனைவர் கேட்டார்.
   “நீ விளக்கம் சொன்னதும் புரிஞ்சுது. ஆனா... இது எல்லாருக்கும் புரியுமா...? புடிக்குமா...?“ ராமசாமி சந்தேகமாகக் கேட்டார்.
   “அதை அவங்களே சொல்லட்டும். நான் கிளம்புறேன்“ கிளம்பினார்.


அருணா செல்வம்.