1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஒளிருங் கணபதி பெருமானே! (குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் - 61)


 

 

.
தனனந் தனனன தனனந் தனனன
தனனந் தனனன தனதானா  (ஒரு கலைக்கு)
 
.
உலகின் முதலென உணரும் வகையினி
    னொளிருங் கணபதி பெருமானே!
  உதவும் வகையொடு கதறும் மனதினி
    லொளிரும் நலமதை யருள்வாயே!
 
பலரின் கருமொழி நிறையும் மனமது
    பதியும் பொதியொடு சுமையாமே !
  படியுங் கழிவினை மறையும் வழியது
    பரமன் தொடர்கிற இடந்தானே!
 
நிலவும் பழவினை நினைவும் விலகிட
    நெடிதுன் விழிதனி லறிந்தாலே
  நியமந் தருகிற வழியுந் தொடரிட
    நிறையும் வரமது வரும்தாமே !
 
மலருங் கனிகளு மிணையுஞ் சுவையொடு
    மணமும் நிறைகிற நெகிழ்வோடே
  வளருங் கவியொடு பணியுந் தலையொடு
    மனதும் வழிபட மகிழ்வாயே!
.

தோழ தோழியர் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி
வாழ்த்துகள்.

.
என்றும் அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
18.09.2023



செவ்வாய், 25 ஜனவரி, 2022

தும்பைப் பூ!

 


.
விசப்பூச்சி நஞ்சை விரைந்து முறிக்கும்
கசக்கியுண்ண ஓடிடும் காய்ச்சல்! - அசல்வெண்மை!
தும்பையின் சாறு சொறிசிரங்கைப் போக்கிடும்!
செம்மைநல வாழ்விதன் சேர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
26.01.2022 

செவ்வாய், 15 ஜனவரி, 2019

தொகை உருவகம் - 1





    பாடலில் “ஆகிய“ என்னும் மாட்டேற்றுச் சொல் தொகுத்து வருவது “தொகை உருவகம்“ ஆகும். மாட்டேற்றுச் சொல் என்பது பொருளில் உவமையை ஏற்றும் சொல் ஆகும்.
கண்வண்டு – இது கண்ணாகிய வண்டு என விரியாமல் ஆகிய என்ற சொல் மறைந்து வந்துள்ளது. இதில் கண் என்பது பொருள். வண்டு என்பது உவமை. பொருளில் உவமையாகிய வண்டை ஏற்றிச் சொல்லும் போது கண்ணாகிய வண்டு என்று விரிந்து வரும். அப்படி விரிந்து வராமல் தொகுத்து வருவது “தொகை உருவகம்“ ஆகும்.

உ. ம்
கண்கயல், கூந்தல் கருமேகம், கால்வாழைத்
தண்டு, கரம்செண்டு தாங்கிடும் – பெண்ணவளின்
மேனிச் சிலையென மேம்படுமென் வாழ்நெஞ்சம்
தேனின் சுவைத்தளும்பும் தேர்ந்து!

பொருள் – கண்ணாகிய கயலும், கூந்தலாகிய கருமேகமும், காலாகிய வாழைத்தண்டும், கரமாகிய பூச்செண்டும். தாங்கிக் கொண்டிருக்கும் பெண்ணவளின் உடல் செதுக்கி வைத்த சிலையென, உயர்வுகளை உடையவளுடன் வாழும் என் நெஞ்சம் தேர்ந்த தேனின் சுவையால் தளும்பிக் கொண்டிருக்கும்.

   பாடலில் கண்கயல், கூந்தல் கருமேகம், கால் வாழைத்தண்டு, கரம் செண்டு, மேனிச்சிலை… என்ற இடங்களில் “ஆகிய“ என்ற சொல் மறைந்து வந்துள்ளதால் இது “தொகை உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
15.01.2019