செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஊருக்கு உழைப்பவன்!

 


.
காடுமேடு கழனியெல்லாம் சுத்தம் செய்து
    …….காய்க்கின்ற வயலாக மாற்றி வைத்தான்!
தேடுகின்ற பணத்தையெல்லாம் நிலத்தில் கொட்டி
    …….தேர்ந்தெடுத்த விதைநட்டுத் தழைக்கச் செய்தான்!
மாடுகட்டிப் போரடிக்க முடியா தென்றே
    …….லையாளும் யானைகட்டிப் போர டித்தான்!
வீடுவாசல் சேர்த்துநன்றாய் விருந்து வைத்து
    …….விளையாடிச் செழித்திருந்தான் உழவன் அன்று!
.
வேருக்கு நீரோட்டம் பார்க்கும் நல்ல
    …….விவசாயி கையைநம்பி வாழ்ந்தி ருந்தோம்!
ஊருக்கே உழைக்கின்ற வயிறு காய
    …….உணவுக்கே பஞ்சமென்றால் என்ன செய்வான்?
நேருக்கு நேர்நின்றே ஒன்றாய் கூடி
    …….நீதிகேட்டு நிற்கின்றான்! தரகர் என்றே
பேருக்குக் கொடுக்காமல் உழைத்த கூலி
     ….. பெறுவதற்கே இணைந்திடுவோம் நாமும் சேர்ந்தே!
.
பாவலர் அருணா செல்வம்
09.12.2020

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

கற்பின் கனலாய் மாதவி!

 



(கலிவிருத்தம்)
.
இழிவெனும் குலத்தொழிலில்
…….இயைந்துடனே நடக்கவில்லை!
பழிவரும் என்றாலும்
…….பாதகத்தைச் செய்யவில்லை!
அழிவுடனே நின்றாலும்
…….அத்தொழிலை நாடாத
விழிமொழியும் மாதவியின்
…….விதிதனையே நாமறிவோம்!
.
இக்காலம் போலில்லை!
…….இன்றிருந்த நிலையில்லை!
அக்கால வேளையிலே
…….ஆண்களுக்குப் பலபேராம்!
சிக்கான கோவலனின்
…….சிங்கார தேவதையாய்
மிக்காக வந்தவளே
……மென்னிடையாள் மாதவியே!
.
ஒருவனுக்கே ஒருத்தியென்ற
…….உயர்வான பண்பாட்டைத்
திருவெனவே மதித்திருந்தாள்
…….தியாகமுடன் வாழ்ந்திருந்தாள்!
பெருவாழ்வு வாழ்வதற்கு
…….பெருமழகு இருந்திருந்தும்
கருமனத்தைக் கொள்ளாத
…….கற்புடனே வாழ்ந்திருந்தாள்!
.
கற்புக்குக் கனலென்று
…….கண்ணகியும் சீதையையும்
பொற்புடனே புகழ்கின்ற
…….புண்ணியரின் கருவெல்லாம்
நற்பண்பில் உயர்ந்திருக்கும்
…….நலத்தினிலே கண்டதனால்
நற்குணத்தாள் மாதவியும்
…....கற்பினிலே கனலாவாள்!
.
பாவலர் அருணா செல்வம்
06.12.2020

வியாழன், 3 டிசம்பர், 2020

நதிக்கரை நாணல்கள்!


.

ஆற்றின் ஓரம் இதுவென்றே
…..அழகாய்க் காட்டும் அனைவருக்கும்!
காற்றின் இசைக்குத் தலையசைத்தும்
…..கவிதை பாட நமையழைக்கும்!
நாற்றுப் போன்ற செழுமைதான்
…..நாவிற் கினிமை அளிக்காது!
ஈற்றில் நீரோ வற்றிவிட
…..இருந்த சுவடோ தெரியாது!
.
ஓடும் நீரின் அழுக்கெல்லாம்
…..ஓரம் ஒதுக்கி அதையனுப்பும்!
ஆடும் புயலின் காற்றினிலும்
……அசைந்து கொடுத்து நமைமயக்கும்!
நாடும் உயிருக் கிடமளித்து
…..நன்மை செய்தே வாழ்ந்திருக்கும்!
வாடும் காதல் வற்றிவிட
…..வருந்தி தானும் வளமிழக்கும்!
.
நாணல் சேர்ந்த புதர்தனிலே
…..நலமாய் வாழும் பலவுயிர்கள்!
கூனல் கொண்டே இருந்தாலும்
…..குறைவாய் இல்லை குணத்தினிலே!
ஊனம் கொண்ட மனமிருந்தால்
…..உலகில் வாழ்ந்தும் பயனில்லை!
கானல் நீரோ அங்கில்லை
…..காட்சி உண்மை நல்கிடுமே!
.
உதவ வேண்டும் எனநினைத்தால்
…..உடனே ஓடிச் செய்திடலாம்!
பதவி பலவும் இல்லாமல்
…..பண்பாய் எதையும் கொடுத்திடலாம்!
முதலில் செய்யும் உதவிக்கே
…..முழுமை யான பலமிருக்கும்!
எதையும் எதிரே பார்க்காமல்
…..இந்த நாணல் உயர்கிறதே!
.
பாவலர் அருணா செல்வம்
04.12.2020

பேரண்டப் பெருவெளி !

 


..

கார்போன்ற வானத்தைக் கண்ணால் பார்த்தால்
……கவியொன்றை இயற்றிடவே எண்ணம் தோன்றும்!
நீரில்லை! நிலமில்லை! நீலம் மட்டும்
……நிசமென்று நம்பவைத்து மறைக்கும் கண்ணை!
வேரின்றி விளைகின்ற கனிகள் போன்றே
……வெள்ளிநிலா விண்மீன்கள் நன்றாய் மின்னும்!
சீர்கொண்டு எழுதிவிட வந்தால் இங்கே
……பேரண்டப் பெருவெளியும் அடங்கும் மையில்!
 
விண்வெளியில் இருக்கின்ற கோள்கள் எல்லாம்
……விழிதிறந்து பார்த்தாலும் தெரியா(து) உண்மை!
மண்ணிலேயே நின்றுகொண்டு கணிதம் காலம்
……மகத்தான தீர்வுகளும் முன்னோர் அன்றே 
கண்கொண்டு பாராமல் சொல்லிச் சென்றார்!
……கலிகாலம் கொண்டுவந்த கணிணி மாற்றம்
விண்களமாய் ஏவிவிட்ட செயலால் தானே
……விளைகின்ற நிகழ்வுகளை இன்று கண்டோம்!
 
பலகாலம் முன்னாலே படைத்த தோற்றம்
……பழமையாக மாறாமல் புதுமை போன்றே
உலவுகின்ற பெருவெளியின் உண்மை என்ன?
……உலகிருக்கும் மாந்தர்களின் மனத்தின் உள்ளே
கலந்திருந்து ஒளிந்திருக்கும் எண்ணம் கண்டு
……காட்சியாக்கிக் கூறிவிட முடியும் என்றால்
அளவில்லாப் பேரண்ட வெளியில் உள்ள
……அத்தனையும் சொல்லிவிட முடியும் அன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
03.12.2020

செவ்வாய், 24 நவம்பர், 2020

கணபதியாரே !

 

..

தும்பிக் கரமுடன் தொந்தி பெருகிய
    தொன்மை நிறைந்திடும் கணபதியாரே!
எம்பிக் குதித்தினும் எண்ணும் பொருளினுள்
    இன்பம் கிடைப்பது விதியெனுமாயே!
நம்பி வருமெனை நல்கும் அறிவினை
    நன்மை பெருகிட அருளிடுவாயே!
தெம்பு துணைவரத் தென்னி மரமெனத்
    திண்மை முழுவதும் வழங்கிடுவாயே!
 
விந்தை உலகிது வெல்ல நினைப்பதை
     விண்ணின் உயர்வென வியந்திருந்தேனே!
எந்தன் மனமதில் என்றும் உறைந்துடன்
     இன்ப மருளிடும் பெருவிறைநீயே!
முந்தி இருத்திட முந்தன் வரந்தர
     முன்னை செயலினைத் தொடங்கிடுவேனே!
சிந்தை செயற்படச் செம்மை முறையுடன்
     சென்று நலமுடன் முடிப்பதுநீயே!
 
அன்னை மனமுடன் அந்தம் வியந்திடும்
    அன்பின் கருவறை உனதுளம்தானே!
மின்னும் மலரினுள் மெல்ல மணத்திடும்
    மென்மைக் குணமென நிறைந்திடுந்தேனே!
சொன்ன கவிதனில் சொக்கும் பொருளினில்
    தொன்மை இறையுனைக் கலப்பதனாலே
நன்மை பலமிகும் நஞ்சு அழிந்திடும்
    நன்றி யுடனுனை வணங்கிடுவேனே!
.
பாவலர் அருணா செல்வம்
24.11.2020

வெள்ளி, 20 நவம்பர், 2020

இதுவும் கடந்து போகும்!!


.
நிலையாய் இருக்கும் என்றேநாம்
   …..நெடிய வாழ்வை எண்ணுகிறோம்!
வலையைப் போட்டே இழுக்கின்றான்!
  ….. வகையாய் மாட்டி விடுகின்றோம்!
அலையாய் இன்பம் அடித்திருக்க
 …..  அமைதி யான வாழ்க்கையினைக்
கலைத்துப் போட்ட கோலத்தைக்
 …..   கண்டு நானும் துடித்திட்டேன்
.
காதல் கொண்ட வாழ்வினிலே
 …..  கணவன் என்றும் தெய்வம்தான்!
சேதம் இல்லா வாழ்வினிலே
 …..  சேர்ந்த துன்பம் என்சொல்வேன்?
சாதல் என்றும் பழையதுதான் !
…..   சகித்துப் போகச் சொன்னாலும்
பூத மனமோ மறக்காத
…..   பொல்லா நிலைதான் என்சொல்வேன்?
.
அந்த செய்தி நானென்றும்
…..   அறியா மலேயே இருந்திருந்தால்
சொந்தம் கண்ட அனாதைபோல்
 …..  சுடரும் முகமாய் இருந்திருப்பேன்!
வந்த செய்தி இதயத்தை
…..   வலிக்கச் செய்து விட்டதினால்
சிந்தை முழுதும் அவள்நினைவாய்
…..   சின்னத் தனமாய் அழுகின்றேன்!
.
என்ன சொல்வேன் ஆறுதலாய்?
  ….. எதைதான் சொன்னால் ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
…..   இதயம் ஏந்தி சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
…..   துணிவாய் முன்னோர் சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
…..   இதுவும் கடந்து போகுமென்றே!
.
பாவலர் அருணா செல்வம்
20.11.2020

செவ்வாய், 17 நவம்பர், 2020

ஊழியி னொளியாய் வருவாயே!



தானன தனனா தானன தனனா
தானன தனனா தனதானா !  (அரையடிக்கு)
 .
மாரியி னருளே! மாமணி நிழலே!
….மார்கழி எழிலே யதனோடே
..மாதவ முனியே சீரிய உயர்வே
……..மாந்தரின் நினைவாய் நிறைந்தோனே!
.
வீரிய முதிர்வாய் வாடிய உயிரோ
…….வேதனை படுதே பெருநோயால்!
..வீதலி லழுதோர் வீரிடுங் குரலோ
……..வேசடை வலியோ கடல்போலே!
.
ஊரினி லுழல்வோர் வேறுயிர் மறந்தே
…….ஓதிய பொருளாய் யுறைவோனே
..ஊடுறு வினையோ ஓடிய ழியவே
……ஊழியி னொளியாய் வருவாயே!
.
சேரிட முணர்ந்தே சேனையை யறிந்தே
…….சேவடி யுனதே பணிந்தோமே!
..சீயெனும் பிணியோ மாயென மறைந்தே
…….சீவனு யரவே அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
18.11.2020

 
வேசடை – துக்கம் கவலை
வீதல் – சாதல், கெடுதல்

தீபாவளி பாசம்

 

  அமுதன் ரகுவின் வீட்டில் நுழைந்த போது அவனின் மகள் புவனா, புது கவுன் போட்டுக்கொண்டு தெரு வாசலிலேயே நின்று கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

   “அவளிடம் இவன் புவனா.... இந்த கவுன் திபாவளிக்கு எடுத்ததா...?“ என்று அன்பாகக் கேட்டான்.

   அவள் இவனை முறைத்துவிட்டு, “இல்ல. இந்த கவுன் எனக்கு எடுத்ததுஎன்றாள்.

   உள்ளே போகும் போதே இப்படியா... என்ற யோசனையுடன் நுழைந்தவனை ரகு பெரியதாக வரவேற்காமல் வாடா...என்று மட்டும் சொன்னது இவனுக்கு மேலும் என்னவோ போல் ஆகிவிட்டது.

   என்ன செய்வது?  உதவி என்று கேட்க போகும் இடத்தில் மரியாதையை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா....? மனத்தைத் திடமாக்கிக் கொண்டான்.

   “என்னடா ரகு! இன்னைக்கு மழை வரும்ன்னு ரேடியோவில சொன்னாங்க. நீ கேட்டியா...?“

   “நான் கேக்கலைடா. அவங்களாத்தான் சொன்னாங்க.முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொன்னான் ரகு. அமுதன் ஐயோஎன்று தலையைப் பிடித்துக்கொண்டான்.

   “என்னண்ணா... தலைவலியா...? அவர்கிட்ட பேசினாலே தலை வலிக்கும் தான். தலைவலி மருந்து வேணுமா...?“ பாசத்துடன் கேட்டபடி வந்தாள் ரகுவின் மனைவி.

   “வேண்டாம்மா. கொஞ்சம் சூட காப்பி இருந்தா கொடுஎன்றான்.

   “க்கும். ரெண்டும் ஒன்னு தான். எதை சாப்பிட்டால் என்ன?“ ரகு முணுமுணுத்தது அவள் காதிலும் விழுந்தது.

   “இதோ பாருங்க... ரெண்டு நாளா சண்டை போட்டது போதும். இன்னைக்கு நல்ல நாளும் அதுவுமா எங்கிட்ட சண்டைக்கு வர்றாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வந்திடும்... ஆமா...

   “உனக்கு நல்ல கோபம் கூட வருமா...? போ... போயி அந்த கஷாயத்தைப் போட்டு இவனுக்குக் கொடு.என்றான் ரகு எரிச்சலுடன்.

   அவள் முறைத்துவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள்.

   ரகு அமுதன் கொண்டு வந்த பலகாரப்பையைத் திறந்து அதிலிருந்த அதிரசத்தை எடுத்துச் சாப்பிட்டான். அதிரசம் சூப்பர்டா. வீட்டுல செஞ்சிதா?“

   “ஆமாம். ஆமா... நீங்க எதுவும் பலகாரம் செய்யலையா...?“ இவன் கேட்கும் பொழுதே.... காபியைக் கொண்டு வந்தவள், “ஆமா... நாளும் கெழமையுமா உங்க பிரெண்ட் நாளு பலகாரம் செய்யவிடுறாரா?“ மூக்கைச் சிந்தாத குறையதாக இழுத்தாள்.

   “ஏன்டா... என்ன ஆச்சி? ஏன்ம்மா புது டிரெஸ் வாங்கலையா...?“

   “நான் எனக்கு ஒரு புடவை வாங்கினேன்

   “நீ என்னடா வாங்கினே...?“

   “நான் கடன் வாங்கினேன்டா.

   “ஐயோ... என்னச்சி உனக்கு?“ அவன் பேசாமல் இருக்கவும் இவன், அவனின் மனைவியிடம் என்னதான்மா ஆச்சி?“ கேட்டான்.

   “அது ஒன்னும் இல்லையண்ணா. இந்த வருடம் அவருடைய தங்கைக்கு தலைதீபாவளி இல்லையா...? அவுங்க அம்மா பணம் கேட்டு போன் பண்ணினாங்க. இவரும் இந்த வருஷம் நாம தீபாவளியை சிக்கனமா கொண்டாடிடலாம்ன்னு சொல்லிட்டு எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இருந்த பணத்தை ஊருக்கு அனுப்பிட்டாரு. கேட்டதுக்குத் தான் இவ்வளவு கோபம்.என்றாள்.

   “உங்கிட்ட சொல்லி இருந்தா நீ பணத்தை அனுப்பவா விட்டிருப்பே? எனக்கு அது வேணும் இது வேணும்ன்னு பணத்தைக் காலி பண்ணி இருக்க மாட்டே...கோபத்துடன் ரகு சொன்னான்.

   “ஆமா... அப்படியே நீங்க வாங்கி கொடுத்திட்டாலும்.... இப்ப கூட பாருங்ண்ணா. என் அண்ணன் தீபாவளிக்கு புவனாவிற்கு கவுன் வாங்க சொல்லி பணம் கொடுத்தது. அதுல சிக்கனமா எனக்கு ஒரு புடவையும் அவளுக்கு ஒரு கவுனும் எடுத்தேன். எங்களுக்குன்னு இவரு என்ன பெரிசா செய்திட்டாரு? நமக்கும் பொண்டாட்டி குழந்தைன்னு இருக்கிற எண்ணமே கொஞ்சம் கூட இவருகிட்ட இல்லண்ணா...குரல் தழுதழுத்தது.

   “சரி விடும்மா. இதையெல்லாம பெரிசா நினைச்சி கண் கலங்கிட்டு. ஏதோ நம்ம வசதிக்கு நம் தங்கைக்கு நம்மால முடிஞ்சதை செய்தோமே... என்ற திருப்தியாவது அவனுக்கு இருக்கட்டும். ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியில கிளம்பி போயிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

   வாசல் வரையில் வந்த ரகு அமுதனின் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாயைச் செறுகினான்.

   “ஏதுடா இது?“

   “எனக்குத் தெரியும்டா. உன் தங்கைக்கும் இந்த வருடம் தலை தீபாவளி என்று. நான் கடன்வாங்கும் பொழுதே உனக்கும் சேர்த்து தான்டா வாங்கினேன். என் பொண்டாட்டிக்கு அவ அண்ணன் கொடுத்தான். நம்ம தங்கச்சிக்கு நாம தானே கொடுக்கனும். இதுவே தீபாவளி கொண்டாடின திருப்தியை நமக்கு கொடுத்திடும்டா... ம்.. கிளம்பு

   அமுதன் நன்றி சொல்லமுடியாத நிலையில் ரகுவைப் பார்த்துவிட்டு நடந்தான்.

 .

அருணா செல்வம்