அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடல்அழகி!
சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
நேரம் கடந்தும் வரவில்லை!
பொன்னை நிகர்த்த சூரியனோ
புதைந்து போனான் கடல்நடுவில்!
முன்னே தெரிந்த கடல்வானம்
முகத்தில் கருமை பூசியது!
அன்பாய்க் காக்கச் சொன்னவளை
அன்றோ இன்னும் காணவில்லை!
என்னே அவளின் அலட்சியமோ
என்னை என்ன நினைத்துவிட்டாள்!?
தனியா கோபம் மூண்டுவிட
தாபம் நெஞ்சைத் தாக்கிவிட
இனியும் எனக்கு பொறுமையின்றி
எழுந்து போக கிளம்பிவிட்டேன்!
பனிபோல் எதிரில் ஓர்உருவம்!
பார்வை குறுக்கி பார்த்தாலோ
தனிமை கோடுமை போக்கிவிட
தனியே அவள்தான் வருகின்றாள்!
அவளைப் பார்த்த மறுநொடியே
அடங்கா கோபம் ஓடியதேன்?!
கவலை போக்கும் மருந்தாக
காய்ந்த மனத்தில் நீராக
குவளைக் கண்ணைக் கண்டவுடன்
கோடி இன்பம் கூடியதேன்?
இவளை நினைத்துக் காத்தெல்லாம்
இன்னும் அன்பைக் கூட்டியதோ!!
அருணா செல்வம்.
28.10.2013
(இந்தக் கவிதை,
“மா – மா - காய்
மா – மா – காய்“
என்ற இலக்கணத்தில் அமைந்த அறுசீர் விருத்தம்)
