புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 டிசம்பர், 2019

தூது போ வண்ணமலரே !



.
அல்லி குளத்தில்
நீராடுகிறாள் என்
நெஞ்சிற்கினியாள்!
ஆம்பலும் அவள் முகத்தைக்
காண நாணும்!
கயல்களும் அவள் கண்ணழகில்
மயக்கம் கொள்ளும்!

நீரைவிட்டு வெளிவரும்
நிலா போன்ற அவளின்
உருவைக் காண அன்னங்கள்
ஒற்றைக்காலில் தவமிருக்கும்!

அவளின் மேனியைத்
தொட்டிடும்
குளத்து நீருக்கும் குளிரெடுக்கும்!

அவள் முகத்தைக் கண்ட
வண்டுகள் பூந்தாதின்
மதுவருந்த வட்டமிடும்!

இயற்கை அவளைத்
தொட்டே தழுவினாலும்
சிணுங்காத சின்னவள்
என்பார்வை பட்டதும்
நாணங்கொள்வாள்!

வண்ணமலரே….
நானும் உங்களைப் போலவே
அவளிடம் மயங்கி இருப்பதைத்
தூதாக போய் சொல்லிவிடு!
உன்னிடத்தில் நான்
கொடுத்த முத்தத்தை
உனைத் தூக்கி அவள் முகரும் போது
நீ கொடுத்து,
என் நினைவைக் காட்டிவிடு!
.
பாவலர் அருணா செல்வம்
07.12.2019

புதன், 30 அக்டோபர், 2019

புல்வெளியில் பூஞ்சிலை!



.
கயலெடுத்து வைத்தானோ
  காரிகையின் கண்ணென்றே!
அயலிருக்கும் மூக்கென்ன
  ஆழ்ந்தெடுத்த சிப்பிதானோ!

கார்கூந்தல் வண்ணத்தைக்
   கண்ணனவன் தந்தானோ!
நேர்வகிட்டுக் கோலமதை
   நெடுநேரம் அளந்தானோ!

தேன்மொழியும் வாயழகைத்
  தெளிதமிழால் செய்தானோ!
கூன்பிறையைக் காதாக்கிக்
  கழுத்தருகில் வைத்தானோ!

வெண்ணிலவைப் பொடியாக்கிப்
  பெண்வாயில் புதைத்தானோ!
பண்ணொலியைக் குரலாக்கிப்
  பைந்தமிழைக் கலந்தானோ!

கல்லெடுத்துச் செய்தானோ
  கட்டழகின் மேனியினை!
வில்லெடுத்து வரைந்தானோ
  வேல்விழியாள் புருவமதை!

என்னவென்று பாடிடுவேன்
  எடுத்தெழுத வார்த்தையில்லை!
பொன்னழகே! என்னவளே!
  புல்வெளியில் பூஞ்சிலையே!
.
பாவலர் அருணா செல்வம்
30.10.2019

செவ்வாய், 29 அக்டோபர், 2019

முட்டுக்கட்டை!




ஊரே கூடிச் சேர்ந்திழுக்க
   ஓடும் அழகாய் ஊர்வலமாய்!
ஈரேழ் உலகத் தலைவியவள்
   இன்பம் பொங்க அமர்ந்திருப்பாள்!
பாரே பக்திப் பரவசமாய்ப்
   பார்த்தும் பணிந்தும் வணங்கிடவே
தேரே நகரும் அழகுடனே
   தேனாய் நன்மை செய்திடவே!

இழுத்த இழுப்புக்(கு) அதுவோடும்!
   என்றே இருந்தால் என்னாகும்?
தொழுத உயிர்க்கும் தொடர்பவர்க்கும்
   தொல்லைக் கண்டே துவண்டிடுமே!
நழுவி யோடா திருந்திடவும்
   நடக்கும் செயலை நிறுத்திடவும்  
பொழுதில் வைப்பார் காலின்கீழ்
   பொதிக்கும் முட்டுக் கட்டையாகும்!

முட்டுக் கட்டை எடுத்தாலே
   முறையாய்ச் செல்ல முடிந்தாலும் ,
தட்டுத் தவறும் நேரத்தில்
   கட்டிப் போட்டு விடுவதற்கே
முட்டுக் கட்டைப் போட்டிடுவார்!
   முந்திச் செல்ல் மட்டுமின்றிக்
கட்டுக் கொப்பாய்ச் செல்வதற்கும்
   முட்டுக் கட்டைத் தேவையன்றோ! 

ஒருவர் செய்யும் செயலுக்கோ
   உந்தும் திறனே உயர்த்திவிடும்!
கருத்தில் தொண்டாய்ச் சேர்ந்தோர்க்கோ
   கருத்தும் பலவும் நின்றாடும்!
ஒருசொல் முட்டுக் கட்டையாக
   ஒடுக்க வந்து நின்றாலும்
பொருத்தே அதனின் இடம்நகர்த்த
   பொதுமை தேரோ நகர்ந்திடுமே!
.
பாவலர் அருணா செல்வம்
28.10.2019

புதன், 19 ஜூன், 2019

கூடா உவமை!



உவமை அணி!
ஒரு பொருளுக்கு ஒப்பாகாத அல்லது கூடாத ஒன்றை அப்பொருளுக்கு உவமையாகக் கூறுவது கூடா உவமை“ எனப்படும்.

உ.ம்
மலர்ச்சொரியும் சூடும், வளர்தழலின் இன்பும்,
உலர்நிலத்தில் வாழும் உழவும், – நலமாய்
நடந்ததுபோல் உள்ளது நாதாநீ யின்றிக்
கடந்துவிட்ட காலப் பொழுது!

பொருள்அன்பனே! நீ என்னுடன் இல்லாமல், கடந்து போன காலங்கள், மலரில் உள்ள சூடும், வளர்ந்து எரியும் நெருப்பின் இன்பமும், ஈரமின்றி உலர்ந்து காய்ந்து போன நிலத்தில் செய்யும் பயிர்த்தொழிலும் நலமுடன் நடந்தது போல் உள்ளது. இது தலைவனிடத்தில் தலைவி சொல்லிய கூற்று.
    மலரானது சூட்டினைத் தராது, செந்தழலானது இன்பத்தைத் தராது, காய்ந்த நிலத்தில் பயிர் விளையாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது போல் உள்ளது என்று கூறியதால் இது கூடா உவமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
19.06.2019

வெள்ளி, 7 ஜூன், 2019

உயர்ச்சி வேற்றுமை அணி! – குறிப்பு



வேற்றுமை அணி!

     பாடலில் இரண்டு பொருளுக்கு உள்ள ஒப்புமைகளைக் கூறிப் பின்பு அதனில் ஒன்றுக்கு மட்டும் அதன் உயர்வைக் குறிப்பால் கூறுவது உயர்ச்சி வேற்றுமைஆகும்.

. ம்
எண்ணில் அடங்காத எண்ணங்கள் ஓடிடும்
விண்ணில் தவழும் வியன்மேகம்! – கண்காண
காற்றடிக்க மேகம் கலைந்தோடும்! எண்ணங்கள்
ஈற்றுவரை வாழும் இணைந்து!
.
பொருள் எண்ணில் அடக்க முடியாத அளவு எண்ணங்கள் (கற்பனைகள்) ஓடிடும். வானத்தில் அழகிய மேகமும் எண்ணில் அடங்காத அளவு ஓடிடும். எனினும், கண்கள் மேகத்தைக் கண்டுகொண்டு இருக்கும் பொழுதே காற்று வீசுவதினால் கலைந்து ஓடும், ஆனால் எண்ணத்தில் தோன்றியவைகள் வாழும் வரையில் நம் மனத்துடன் இணைந்தே வரும்.
    பாடலில் உள்ள இரண்டு பொருள்கள் ஒன்று மனத்தில் தோன்றும் எண்ணங்கள். மற்றொன்று வானில் தோன்றும் மேகம். முதல் இரண்டு அடிகளில் இரண்டிற்கும் உள்ள ஒப்புமையைக் கூறிப், பின்பு எண்ணத்தை மட்டும் குறிப்பால் உயர்த்திக் கூறியுள்ளதால் இது உயர்ச்சி வேற்றுமைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.06.2019

சனி, 27 ஏப்ரல், 2019

உயர்ந்த மனம்!



உயர்ந்த மனம்!
.
மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருக்கும் வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்.
.
பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 15 நவம்பர், 2016

காத்திருத்தால் அன்பு கூடும்!!



அலைகள் உரசும் கடலருகில்
  அமைதி யற்று அமர்ந்திருந்தேன்!
கலைகள் பேசும் கண்ணழகி!
  கவிதை பாடும் சொல்லழகி!
சிலைகள் தோற்கும் உடலழகி!
  சிந்தை முழுதும் பண்பழகி!
நிலையாய் மனத்தில் நின்றவளோ
  நேரம் கடந்தும் வரவில்லை!

பொன்னை நிகர்த்த சூரியனோ
  புதைந்து போனான் கடல்நடுவில்!
முன்னே தெரிந்த கடல்வானம்
  முகத்தில் கருமை பூசியது!
அன்பாய்க் காக்கச் சொன்னவளை
  அந்தோ ! இன்னும் காணவில்லை!
என்னே அவளின் அலட்சியமோ
  என்னை என்ன நினைத்துவிட்டாள்?

தணியாக் கோபம் மூண்டுவிட
  தாபம் நெஞ்சைத் தாக்கிவிட
இனியும் எனக்குப் பொறுமையின்றி
  எழுந்து போகக் கிளம்பிவிட்டேன்!
பனிபோல் எதிரில் ஓர்உருவம்!
  பார்வை குறுக்கிப் பார்த்தாலோ
தனிமைக் கொடுமை துயர்போக்க
  தனியே அவள்தான் வருகின்றாள்!

அவளைப் பார்த்த மறுநொடியே
  அடங்கா கோபம் ஓடியதேன்?
கவலை போக்கும் மருந்தாகக்
  காய்ந்த மனத்தில் நீராகக்
குவளைக் கண்ணைக் கண்டவுடன்
  கோடி இன்பம் கூடியதேன்?
இவளை நினைத்துக் காத்ததெல்லாம்
  இன்பம் மேலும் கூட்டிடவோ!!


பாவலர் அருணா செல்வம்

செவ்வாய், 25 அக்டோபர், 2016

அவளழகு !!





மெல்லிடை இல்லையென்னும் ! மெல்லிதழ் ஆமென்னும் !
சொல்லிடை வைப்பாள் சுவையுள்ளம் ! – நல்லதையே
நாளும் நினைத்திடும் நங்கை ! அவள்சிரிப்பால்
நீளும்என் ஆயுள் நிறைந்து !
  
செல்லச் சிரிப்பும், சிணுங்கும் மொழியழகும்
வெல்லச் சுவையையும் விஞ்சுமந்தப் – பொல்லாத
பார்வைக் கணையென்னைப் பாடாய்ப் படுத்திடினும்
சோர்வை அகற்றும் சுடர்ந்து !
  
தண்ணீர்க் குடமெடுத்துத் தாமரை வந்துநின்றால்
விண்ணில் இருந்துவந்த வெண்ணிலா – மண்ணில்
இறங்கியதோ என்றே இமைக்காது பார்ப்பார் !
உறங்காது கண்கள் உணர்ந்து !

மைவரைந்த கண்கள் மதுவூட்டும் ! மங்கையவள்
கைவரையும் ! என்நினைவால் கால்வரையும் ! – தைவரும்நாள்
பார்த்துத் தவமிருக்கும் ! பாவைமனம் எண்ணத்தைக்
கோர்த்திடும் நெஞ்சில் குவித்து !

மாங்கொழுந்து மேனி ! மனமயக்கும் செந்நிறம் !
வாங்கிவந்த வாழ்வின் வரமழகு ! – தேங்கி
ஒளிந்திருக்கும் சங்கின் ஒளிப்போல மேனி
பளிங்கையும் விஞ்சும் பழித்து !

பால்போன்ற பற்கள் ! பளிங்கை உடைத்திடுத்து
நூல்பிடித்த நல்வரிசை ! நோயற்ற – ஆல்விழுதோ !
சிப்பி கொடுக்காத செம்மையான முத்துதானோ !
ஒப்பேதும் இல்லா ஒழுங்கு !

செவ்வரளிப் பூவிதழோ? செங்கமலம் வண்ணமோ?
கொவ்வை கனிநிறமோ? கோதையவள் – செவ்விதழை
எவ்வண்ணம் கொண்டு எழுதுவேன்? நானெழுதும்
இவ்வண்ணம் கூட இகழ்வு!

சாந்தம்தான் உள்ளதோ  சார்ந்திடா ஞானிபோல்!
காந்தம்தான் உள்ளதோ கண்களில்? – நீந்தியோடும்
மீன்வடிவோ ! மாவிலையோ ! மென்னழகு மான்விழியே!
தேன்குடிக்கும் வண்டுதான் தேர்வு !

சிற்பி செதுக்கிதான் செய்தானா மூக்கழகை !
கற்சிலையும் நாணிக் கவிழ்ந்துவிடும் ! – பொற்பதமே
பச்சைக் கிளியுமுனைப் பார்த்து மயங்கிடும்
இச்சைமனம் ஏங்கிடுதே இங்கு !
  
பாலாடைக் கன்னங்கள் ! பஞ்சின் மிருதெனத்
தாலாட்டும் நெஞ்சில் தவழ்ந்தது ! – சேலாட்டம்
காட்டிடும் கண்ணருகில் காமன் வரைந்தநல்
தோட்டமென ஈர்க்கும் தொடர்ந்து !

பாவலர் அருணா செல்வம்

25.10.2016

புதன், 19 அக்டோபர், 2016

விட்டு விலகுமா கண்ணா ?





கொட்டிக் கிடக்குது கனிகள் – அதை
எட்டிப் பார்க்குது விழிகள் – உயிர்
தட்டிப் பிடிக்குது எளிதாய் – என்னைக்
கட்டிப் போடுது முடிவாய் ! – உன்

சுட்டுவிழி எனைத் தாக்க – என்
பட்டுவுடல் மெல்ல வேர்க்க – தேன்
சிட்டென மனம் பறக்க – நான்
தட்டுத்தடு மாறு கின்றேன் ! – அந்த

நட்டுநடு மென்னிரவில் – மின்னும்
வட்டநில வினைப்போல – கை
தொட்டு வரைந்து விட்ட – நெற்றிப்
பொட்டு இழுக்குது கண்ணே ! – இடும்

மெட்டுதனைக் கேட்டே – விழி
மொட்டென ஆனது தானாய் – நீ
கட்டினப் பாட்டைக் கேட்ட - மனம்
விட்டு விலகுமா கண்ணா ?

பாவலர் அருணா செல்வம் 
19.10.2016

வியாழன், 15 செப்டம்பர், 2016

தமிழ்ப்பெண்!



இதழ்தனில் உள்ளதும் இன்தேன் சுவையதும்
    எண்ணிட ஏங்கிடுதே ! – உன்
பதம்தனைக் கண்டதும் பல்பொருள் பெற்றதும்
    பாடிடத் தோன்றிடுதே !

கற்பும் களவும் கலந்திட்ட கண்ணியம்முற்
    காலத்தில் சொன்னவளே ! – கல்வி
கற்றோர் கவிஞர்கள் அற்றோர் மனத்திலும்
    காதலைத் தந்தவளே!

இலக்கண யாப்பும் இலக்கிய காப்பியம்
    ஏற்றமே உன்பெருமை ! – மன
கலக்கங்கள் யாவையும் கற்றிடப் போக்கும்
    கருணையே உன்அருமை !

ஏட்டினில் காணும் எழுத்தினில் தோன்றும்
    எளியவள் நீஅன்றோ ! – அதைக்
கூட்டிப் படிக்கக் குறைகள் தெளிந்திடக்
    கூடிடும் இன்பமன்றோ !

உயிருடன் மெய்யும் உறவுடன் சேர
    உயிர்மெய் எழுத்தானாய் ! – நல்
பயிர்தரும் பாண்பாய்ப் பசுதரும் பாலாய்ப்
   பலருக்கு உயிரானாய் !

கவிஞர் அருணா செல்வம்
04.02.2016