வெள்ளி, 25 நவம்பர், 2022

திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“!

 



.
     திரையிசைப் பாடலில் “நேரொன்றாசியத் தளை“ யின் இலக்கணத்தில் வந்த அழகிய பாடல் இந்தப் பாடல்.
    நேரொன்றாசியத் தளை என்பது நேர் முன் நேர் வருவதாகும். ஆனால் இப்பாடலில் வெகு சில இடங்களில் நிரை அசை அருகி வந்திருந்தாலும் பாடலின் இசையில் எந்தக் குறையும் தெரியவில்லை.
.
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள (கண்ணன்)
.
தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்ன கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக் கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன (கண்ணன்)
.
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சைச் சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம் (கண்ணன்)
.
பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன்
படம் வெண்ணிற ஆடை (1965)

செவ்வாய், 15 நவம்பர், 2022

பெண்ணின் உள்மனப் பேறு !

 


(கலிவிருத்தம்)

.
அன்பாய் பேசிய அன்றைய நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சினுள் இருந்தே இனித்திருக்கும்!
துன்பப் பொழுது தோழியர்ச் சூழ்ந்துவர
நின்று போயிடும் நெகிழ்ந்த கனவலைகள்!
.
சொல்லச் சொக்கிடும் சுவையாய்க் கவிகளையும்
மெல்லப் பேசிடும் மென்மொழி இனிமையையும்
நல்ல நேரமும் நிறைந்து கிடைத்தாலும்
மல்லுக் கட்டிடும் மனத்தைக் குழப்பிவிடும்!
.
கற்றோர் காட்டிய காலமெ னும்நிகழ்வோ
உற்றுக் கடக்கும் ஊழ்வினை என்றரிந்து
பற்று வைத்தலே படைப்பின் நிறைவென்றே
முற்றும் அன்பினால் முயன்று நெகிழ்ந்துவிடும்!
.
பெண்ணின் உள்மனப் பேற்றினைக் கண்டவளின்
கண்கள் நோக்கிடக் கவிகள் பிறந்துவிடும்!
வண்ணங் கூட்டிடும் வடிவில் கலந்துவிட்டால்
எண்ணந் தீட்டிடும் இதயம் இனிதுறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2022