ஞாயிறு, 24 ஜூலை, 2016

செங்கழுநீர் அம்மா !





செங்கழுநீர் அம்மா, செழிக்கின்ற வாழ்வினை
எங்களுக்குத் தந்தருள் என்னாளும்! – மங்கையர்
குங்குமத்தின் உள்ளே குடிகொண்ட தேவியே!
பொங்கல் படைப்போம் புகழ்ந்து!

வேப்பிள்ளை ஆடை விரும்பிடும் வித்தகியே!
கூப்பிட வந்தருளும் கோமதியே! – காப்பாய்!
வருத்திடும் அம்மை வடிந்தோடச் செய்யும்
மருந்தைக் கொடுத்ததுன் மாண்பு!

அலைதொடரும் வாழ்வும் அடங்காத் துயரும்
நிலையிலா வேலை நிலத்தில்! – தலைமகள்
உன்முகம் கண்டால் உயர்ந்தோங்கும் வாழ்வு!நல்
பொன்னென மின்னும் பொலிந்து!

தளிர்இலைப் பந்தலிட்டுத் தண்ணீர் தருவார்!
குளிர்மோர் கஞ்சியுடன் கூழும் - அளிப்போர்க்குச்
செங்கேண் அம்மா சிறப்பெலாம் தந்திடுவாள்
அங்கம் குளிர அறிந்து!

ஆடிவரும் தேரில் அமர்ந்து மகிழ்பவள்!
கோடி நலத்துச்செங் கேணியவள்! – தேடியே
ஓடிவந்து காப்பாள்! உளமொன்றித் தாய்பாதம்
கூடிடும் நெஞ்சம் குளிர்ந்து!

(கட்டளை வெண்பா)
கவிஞர் அருணா செல்வம்

22.07.2016

திங்கள், 18 ஜூலை, 2016

தமிழே அருள்வாய் !




ஒருநாள் அறிந்தேன் ! உயிராய் உணர்ந்தேன் !
திருவாய் மொழிந்தாய் ! திடமாய்க் கலந்தேன் !
கருவாய் வளர்ந்தாய் ! கவியாய்ப் பிறந்தாய் !
உருவால் தமிழாள் ! உயர்ந்தேன் வளமாய் !

மனமோர் குரங்காம் ! மதியோ நிலவாம் !
கனமோர் தலைப்பால் கவியாய்ப் புணைந்தேன் !
இனமாய் இருந்தால் எதுதான் கசப்பாம் ?
சினமோ எழுந்தால் சிரம்தான் ! குலைந்தேன் !

உனையே நினைத்தேன் ! உறவாய் மதித்தேன் !
பனைபோல் வளர்ந்தாய் ! பனிபோல் மறைந்தாய் !
எனையே மறந்தேன் ! இனியார் இருப்பார் ?
நினைவே வளர்வாய் ! நிறைவே தருவாய் !

புவியோ பொதுவாய்ப் புறனே புணைந்தால்,
செவியே செயலால் செவிடாய் இருப்பாய் !
தவியாய்த் தவித்தே தனியாய் இருந்தால்
கவிதான் வருமோ ? கனியாய்க் கரும்பாய் ?

அணைபோல் திரண்டே அறிவே வளர்வாய் !
கணைபோல் விரைந்தே கலையே அருள்வாய் !
இணைந்தே இருப்பாய் இனிதாய்த் தமிழே !
துணையாய் இருப்பாய் ! தொடர்வேன் தொழுதே !

(சந்த விருத்தம்) 
கவிஞர் அருணா செல்வம்
14.07.2016