ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஒளிருங் கணபதி பெருமானே!


 

 

.
தனனந் தனனன தனனந் தனனன
தனனந் தனனன தனதானா  (ஒரு கலைக்கு)
 
.
உலகின் முதலென உணரும் வகையினி
    னொளிருங் கணபதி பெருமானே!
  உதவும் வகையொடு கதறும் மனதினி
    லொளிரும் நலமதை யருள்வாயே!
 
பலரின் கருமொழி நிறையும் மனமது
    பதியும் பொதியொடு சுமையாமே !
  படியுங் கழிவினை மறையும் வழியது
    பரமன் தொடர்கிற இடந்தானே!
 
நிலவும் பழவினை நினைவும் விலகிட
    நெடிதுன் விழிதனி லறிந்தாலே
  நியமந் தருகிற வழியுந் தொடரிட
    நிறையும் வரமது வரும்தாமே !
 
மலருங் கனிகளு மிணையுஞ் சுவையொடு
    மணமும் நிறைகிற நெகிழ்வோடே
  வளருங் கவியொடு பணியுந் தலையொடு
    மனதும் வழிபட மகிழ்வாயே!
.

தோழ தோழியர் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி
வாழ்த்துகள்.

.
என்றும் அன்புடன்
பாவலர் அருணா செல்வம்
18.09.2023



செவ்வாய், 20 ஜூன், 2023

மெலி அகவல் ஏந்திசை வண்ணம் !



 
எண்ணமென்ற கண் !
.
தன்ன தந்த தன்ன தந்த
தன்ன தந்த தந்தானா! (ஒரு கலைக்கு)
.
அன்னை யென்று முன்னை யொன்றி
   அன்மை யன்றி நின்றேனே!
அன்ன மென்ற வெண்மை கண்டு
    மண்ண லென்ற றிந்தேனே !
 
இன்ன லென்று யின்மை யென்று
    மெண்ணி நின்ற யர்ந்தேனே!
எண்ண மென்ற கண்ணி ருந்து
    மிங்ங னம்ப யந்தேனே !
 
மன்ன னுன்றன் மின்னி டும்பொன்
    மண்ணி னின்ற செவ்வேலால்
வன்மை யின்ப யம்மி ரண்டு
    வன்ந கர்ந்து டன்வாழ்வேன் !
 
என்ன வென்று கண்ணி ளொன்று
   மெண்ணி யுன்ப தங்காண்பேன் !
எண்ண மென்ற உன்னு யர்ந்த
   இம்மை யின்ப முண்பேனோ !
.
பாவலர் அருணா செல்வம்
20.06.2023

 
அன்மை - தீமை
அண்ணல் - கடவுள்

நெஞ்சினில் நிறைந்தவள்! பெண் குழந்தைக்கான பாடல்!

வெள்ளி, 16 ஜூன், 2023

வலி ஒழுகல் ஏந்திசை வண்ணம் !

 


 தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன தனதானா  (ஒரு கலைக்கு)
 
விதி கொடுத்திடும் அடி!
.
விதிகொ டுத்திடு மடிவ லிக்கிற
      வினைந டத்திடு மியல்தானே!
 விலைய ளிக்கிற செயல்மு டிக்கிற
     விசைய முக்கிட வருவாயே!
 
நிதிஎ தற்கென உயர்ம னத்தினை
     நிறைப டுத்தியு மருள்வாயே!
 நினைவ தைக்கிற பசிய டக்கிய
    நிலைய ளித்திடு பெருமானே !
 
சதிய டிக்கிற வினைய கற்றிடு
     சபைய மர்த்திட உயர்வேனே!
  சவலை யுற்றது கவலை பட்டது
     சரவ ணப்புக ழிகழ்வாலே!
 
மதிய ளிக்கிற புதிய கற்பனை
     மனத ளிக்கிற நிழல்தானே!
  மனம யக்கிய துயர்வி ளக்கிய
     மனைய றத்தினை உணர்வேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
16.06.2023

செவ்வாய், 13 ஜூன், 2023

நெடில் அகவல் ஏந்திசை வண்ணம்

 

 

பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
தான தான தாந்த தான தான தாந்த
தான தான தாந்த தனதானா!    (ஒரு கலைக்கு)
.
தேவி வாயி லூர்ந்து தேவ கீதஞ் சேர்ந்த
    தேனி லூறுந் தீஞ்சு வையின்பாகோ!
  தேகம் வாட நேர்ந்த தீமை யான வீம்பு
    தேயும் போதும் நீந்தும் மதிபோலோ!
 
ஆவி யோடு சேர்ந்த ஆசை மோக மேந்தி
    ஆடி யாடி நீந்தும் மனமேனோ?
  ஆவ லாக லேங்கி ஆகம் நாடி ஓய்ந்த
    ஆய மேது தேர்ந்து மறிவேனோ!
 
பாவி யாக வீழ்ந்தும் வேதை யாக வாழ்ந்தும்
    பாசந் தேடி வேண்டி யழுதாலே
  பாலை மாறும் தேர்ந்த பாலுந் தேனும் மீந்தும்
    பால மாகும் பாங்கை யருள்வாயே!
 
பாவி லோதும் பாங்கு வாழும் போது சேர்ந்தும்
    பாச மோடு நீண்டு மருள்வாயே !
  பாதை மாலை யேந்தும் பூவின் வாசந் தீண்டும்

    பாடி யாடி ஓய்ந்தும் மகிழ்வேனே!
.
பாவலர் அருணா செல்வம்
13.06.2023
 
ஆகம் – உடல்,
ஆயம் - இன்பம்
வேதை - துன்பம்