ஞாயிறு, 28 மே, 2023

இடை அகவல் அடுக்கிசை வண்ணம் !

 




தய்யனா தந்தானந் தய்யனா தந்தானந்
தய்ய தானந் தானந் தனதான (ஒரு கலைக்கு)
.
முள்ளிலே செண்டாகும் !
 
முள்ளிலே செண்டாகும் மொல்லுடே வண்டாடும்
    மௌவ்வம் பூவுந் தேனும் திரளாக
 முல்லைவா சம்போலும் சொல்லிலே பண்பாடும்
    முல்லை யாகும் பாவும் நிதமூறும்!
 
பள்ளிலே உண்டாகும் நல்லதே கண்டாலும்
    பைய்ய மேலும் மாறும் நிலைமேவும்!
 பைய்யிலே திண்டாடும் தொல்லையே கண்டாடும்
    பள்ள மேடுந் தாவும் பலகாலம்!
 
மள்ளனே உன்னீடும் மல்லலோ நன்றாயும்
    வள்ள வேலுந் தோளும் துணையாகும்!
 வைய்யமே கொண்டாடும் செல்வமே என்றாடும்
    வல்ல நோயுந் தீருங் கடலோரம்!
 
கள்வனே என்றாலும் வைய்யமே உன்பாதம்
    கவ்வும் பேருஞ் சீரும் பெரும்வாழ்வு
 கர்வமோ உண்டாகும் முல்லையே செந்தூரின்
    கல்வி யாளும் வீரன் பெயராகும்!
.
பாவலர் அருணா செல்வம்
28.05.2023

 
மொல்லு - இரைச்சல்
மௌவ்வம் - தாமரை மலர்
முல்லை - வெற்றி

செவ்வாய், 23 மே, 2023

நெடில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம் !

 


தந்ததானா தானான தந்த தானா தானான
தந்த தானா தானான தனதான (ஒரு கலைக்கு)
 
அன்பில் ஆழ்வார் வடிவோடு !
.

சிந்தைமேலே தீராமல் வந்த பாவோ தேனான
   செம்மை யோடே தேரேறி நடைபோடும் !
செம்பலாவாய் மாறாத வின்ப மோடு ரீங்காரம்
   தென்றல் போலே காதோரம் இசையாகும் !
 
தந்தையோனே நீங்காமல் என்னை நீயே சேயான
    தன்மை யோடே வாழ்நாளில் அருளேகு !
தங்கமாதாய் நீண்டோங்கு மின்ப வாழ்வே வானோடு
    தங்கும் மீனாய் நீந்தோடி மனமேவும் !
 
கந்தனாலே ஓங்காரம் கண்ட தாலே தீதான
   கந்தை யாகா வாழ்ந்தேற நலமாகும் !
கண்ணினாலே நேர்பார்வை யுன்ற தாலே தீராத
   கங்கை நீராய் ஆவோம்பு னிதமாக !
 
அந்தமானோன் தாராத துன்ப நோயே தீயாக
    அங்கம் மீதே போராடும் நிலையாகும் !
அன்புமீதே தேயாத எண்ண மானோர் மாயாத
    அன்பி லாழ்வார் வேலான வடிவோடு !
.
பாவலர் அருணா செல்வம்
23.05.2023

வெள்ளி, 19 மே, 2023

வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம் ! 73

 


ஒளியளித்துத் தொடர்வாயே !
.
தனத்தன தனத்தத் தனத்தன தனத்தத்
தனத்தனன தத்தத் தனதானா (ஒரு கலைக்கு)
 .
தழைத்திடு முழைப்பைக் கொடுத்திட எனக்குத்
    தனத்திணைய சக்தித் தருவாயே !
  தமிழ்க்கவி இயற்றித் தனிப்பெரு நலத்தைத்
    தகைத்தொளிர முக்திக் கொடுப்பாயே !
 
பிழைத்திட அழைத்துக் கரத்தொடு மனத்தைப்
    பிணைத்திடவொ லிக்கத் தொளிர்வாயே !
  பெருக்கிடு மிழப்பைத் தடுக்கிற விதத்தைப்
    பிறப்புடன மைத்துத் தருவாயே !
 
கிழக்கினி லுதித்துக் கருத்தொடு மறைத்துக்
    கிளர்ச்சியொடொ ளித்துச் சுழல்வோனே !
  கெடுப்பதை மயக்கிச் சுடர்த்துய ரொளிப்புக்
    கிடைத்துதவி பெற்றுத் திகழ்வேனே !
 
குழைத்திடு மணைப்பைக் குணத்தொடு மதித்துக்
    கொடுத்துயர வுற்றுத் துணையோடே
  குலைத்திடு மனத்தைத் தடுத்துயர் வழிக்குக்
    குவித்தொளிய ளித்துக் தொடர்வாயே !
.
பாவலர் அருணா செல்வம்
20.05.2023

வியாழன், 18 மே, 2023

நெடில் வல்லிசை அடுக்கிசை வண்ணம் !

 


 
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
தாத்தத்தத் தன       தனதான     (ஒரு கலைக்கு)
 . 
மாற்றத்தைத் தர வழிகூறு !
 .
ஏட்டுச் சட்டமு மாக்கத் திட்டமு
   மேக்கத்தைத் தரு மலையாக !
  ஏட்டைச் சுட்டிய வாக்குச் சித்தமு
   மேற்றுக்கட் டிய வடிவாக !
 
கூட்டைக் கட்டிய காட்டுச் சிட்டது
   கூட்டிற்கொற் றிய குழுவாக !
  கூத்துக் கட்டிய நாட்டுக் குற்றது
   கூட்டத்தைப் பழி எனவாக !
 
மாட்டுக் கொட்டிலும் ஆட்டுத் தட்டிலை
   வாய்த்துப்பட் டவ னுயர்வாக !
  வாக்குச் சுத்தமு மூக்கத் தற்றது
   மாற்றத்தைத் தர வழிகூறு !
 
பாட்டுக் கற்றது கூட்டுச் சொற்களெ
   பார்த்துக்கட் டிய சரமோடு
  பார்த்துத் தட்டிய சேர்த்துச் சுட்டிய
   பாட்டிற்குற் றுனை இசையாகு !
.
பாவலர் அருணா செல்வம்
19.05.2023

செவ்வாய், 16 மே, 2023

குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம் !

 



மகிழ்வில் உழல்வாயே !
.
தனனதன தனதந்த தனனதன தன தந்த
தனன தனன தனந்த தனதானா (ஒரு கலைக்கு)

 
பெருமலையி லுரைகின்ற அழகுரு வளர நின்ற
     பிரண வமரு ளிணைந்த ஒலிநாதா!
  பெருமுயர்வு தொடர்கின்ற வழிவகை நிறைய வந்து
     பிணைய வெனது மகிழ்வி லுழல்வாயே!
 
இருகரமு முனையெண்ணி இணைகிற பொழுது முந்து
     இமையி னருகி லொளிந்த கதிர்வேலா!
  இளமையொடு வளமென்று மியைகிற நிறைவு மின்ன
     இயலு மிசையு மறிந்த வரம்தாயே!
 
திருவுருவ அழகெண்ண ஒளிமிகு பழநி குன்று
     தெரியு முயர்வு நிறைந்து நெடுநாளாய்!
  தெளிவுடைய பதிலொன்ற திருவடி நிழலில் நின்று
     தினமு னதருள் விருந்தை அடைவேனே!
 
முருகனுனை மனமெண்ண முதிர்நிலை அறிவு வந்து
     முயலு றுவினை முடிந்த மகிழ்வாழ்வே!
  முழுமனதை இசைமின்ன அமுதெனுந் தமிழ்பொ ழிந்து
     முதுமை வரையு னையெண்ணி மகிழ்வேனே!
.
பாவலர் அருணா செல்வம்
15.05.2023

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

குரு வணக்கம்!

 


கல்யாண போகத்தைக், கற்றோரின் நல்லுறவைச்,
சொல்ஞான சீர்மை சுகத்துடன் – பொல்லாத்
தடுப்புகளைப் போக்கித், தழைத்தோங்கும் வாழ்வைக்
கொடுத்திடுவார் சென்ம குரு!
.
பாவலர் அருணா செல்வம்
21.04.2023

செவ்வாய், 7 மார்ச், 2023

சந்த விருத்தம் - 4

 


சந்த விருத்தம் - 4
(6 + 6 + 6 + 4)
.
ஒளியேவிழி அருளேபொழி ! உறவேதொட ராகும் !
கிளியேயென அமுதேபொழி கிலியேவெளி யோடும் !
அளியேகவி அகமேயென அதுவேதமி ழாகும் !
உளியோடிய சிலையோயென உலகேயதி லாடும் !
.
சந்தக் கலிவிருத்தம் - 5
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மலையென வளர்வது மனமெனு மிடமே!
அலையென மறைவது(ம்) அழிகிற வகையே!
விலையென உயர்வது விதியெனு மரசே!
கலையென நிறைவது கடவுளி னுருவே!
.
சந்த விருத்தம் - 6
(ஒவ்வொரு சீரும் 4 சந்த மாத்திரை)
.
மெல்லிய பூவில் மெல்லிசை பாடும் !
சொல்லிய சீரில் சொக்கிட ஆடும் !
துல்லிய தேனின் தொன்மையி லாழும் !
வல்லமை யேகும் வண்டின மாகும் !
.
(துல்லியம் – சுத்தம்)
.
சந்தக் கலிவிருத்தம் - 7
(4+4+4+4)
.
அன்புடை நெஞ்சினு ளாறிய நோயோ
வன்வடு கொண்டது வானென நீண்டே!
இன்பென எண்ணிய ஏறிய நாளோ
முன்மன மொன்றிய மூவிசை வேரே!
.
சந்தக் கலிவிருத்தம் - 8
(4+6+4+6)
.
பொருளினை விளங்காது புணைகிற அடியாலே
கருவினை யறியாமல் கனமழை இருளாகும்!
திருமக னருளாலே தினமொரு கவியெழுதித்
தருகிற தெளிவாலே தணிகிற மனமாகும்!
.
பாவலர் அருணா செல்வம்
07.03.2023