நிகழ்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 மார்ச், 2014

நான் பூதமான கதை!! (நகைச்சுவை நிகழ்வு)



   
   ஒரு முறை ஒரு திருமணத்திற்குப் போக என் அண்ணன் அண்ணி அவர்களின் ஆறு வயது மகள் சோனியாவும் ஊரிலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நாங்களும் அந்தத் திருமணத்திற்கு போவதாக ஏற்பாடு.
   திருமண தம்பதியர்க்குப் பரிசு பொருள் வாங்காததால், எங்களைக் கிளம்பி ரெடியாகி இருக்கும்படி சொல்லிவிட்டு என் கணவருடன் அவர்கள் இருவரும் கடைக்குச் சென்றுவிட்டனர்.
   நானும் மற்ற வேலைகளை முடித்துவிட்டு, சோனியாவை அழகாக உடுத்திவிட்டேன். பின்பு அவளை டீ.வி பார்க்கச் சொல்லிவிட்டு, நானும் குளித்து அலங்காரம் (மேக்கப்) பண்ணிக்கொண்டேன்.
   திருமணத்திற்குப் பட்டுப்புடைவையைக் கட்டிக்கொண்டதால் எந்த வேலையும் செய்ய விரும்பாமல் நாமும் டீ.வி பார்க்கலாம் என்று ஹாலுக்கு வந்தேன்.
   என்னைக் கண்டதும் சோனியா கண்களை ஆச்சர்யமாக விரித்து... “அத்தை... நீங்க ரொம்ப ரொம்ப....“ அதற்கு மேல் அவளுக்குச் சொல்லத் தெரியாமல் வார்த்தையைத் தேடினாள். நானும், ஆஹா... நாம்ம அண்ணன் பொண்ணு நம்மைப்பற்றி ஏதோ சொல்ல வருகிறாள் என்று நினைத்து... “என்ன சொல்லவர்றே சோனியா? சொல்லும்மா“ என்றேன் ஆவலாக.
   அவள் சில நொடிகளில் வார்த்தையைத் தேடிவிட்டு, “அத்தை.. நீங்க.... நீங்க....ரொம்ம்ம்ம்ப பூதம் அத்தை“ என்றாள். (எனக்கு ஷாக்)
   “பூதமா...?“ கேட்டேன்.
   “ஆமா. நீங்க பூதம் தான் அத்தை“ என்றாள்.
   எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
   குளித்துவிட்டு ஈரத்துடன் பவுடர் போட்டதால் பூத்துவிட்டதோ என்று நினைத்து முகத்தை உடனே அழுத்தத் துடைத்துவிட்டு, “இப்போ பரவாயில்லையா...?“ என்று கேட்டேன். அவள் சற்று யோசித்துவிட்டு “இப்பவும் நீங்க பூதம் தான் அத்தை“ என்றாள் லேசாக சிரித்தபடி.
   எனக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தத் திம்மாத்துண்டு வாண்டு என்னைக் கலாய்க்கிறதா...என்று நினைத்தபடி, “பரவாயில்லை சோனியா... நீயாவது உன் வாழ்க்கையில ஒரு பூதத்தைப் பார்த்திருக்கிற. ஆனால் நான் இது வரையில எந்த ஒரு பூத்தையும் பார்த்ததில்லை“ என்றேன் சற்று வாட்டமாக முகத்தை வைத்துக் கொண்டு.
   அவள் உடனே, “ஏன் அத்தை அப்படி சொல்லுறீங்க? நீங்க ஒரு பூதம். உங்க அக்கா ஒரு பூதம், உங்க தங்கச்சி ஒரு பூதம், உங்கள் அம்மா கூட பூதம் தான்“ என்றாள்.
   ஐயோ... இவளைப் பேசவிட்டால் நம் குடும்பத்தையே பூதக்குடும்பம்ன்னு சொல்லிடுவாள் என்று நினைத்து “போதும் போதும் போய் டீவிய பாரு.“ என்று சற்று கோபமாகச் சொன்னேன். அவள் என்னை ஒருமாதிரி கவலை கலந்து பரிதாபமாக பார்த்து விட்டு திரும்பிக்கொண்டாள்.
   எனக்கும் அவள் முகத்தை அப்படிக் கண்டதும் சற்று கவலையாகிவிட்டது. அவள் சின்னப்பிள்ளை. அவள் மனத்தில் பட்டதைச் சொன்னாள். இதைப்போய் பெரியதாக எடுத்துக் கொண்டோமே... என்று என்னையே நொந்துக்கொண்டேன்.
   இருந்தாலும் திரும்பத்திரும்ப கண்ணாடியைப் பார்த்து, ஏன் அப்படி சொன்னாள்? எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது. அப்படி ஒன்றும் பூதம் போல் தெரியவில்லையே என்று நினைத்தபடி சரியானதையே திரும்பத் திரும்பச் சரிசெய்தேன்.

   சற்று நேரத்தில் கடைக்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என் அண்ணி... “வாவ் சூப்பரா இருக்கிறீங்க“ என்றார்.
   எனக்கு சந்தேகம். “நான் சரியாகத் தானே உடுத்தி இருக்கிறேன்? ஏதாவது மாற்றமாகத் தெரிகிறதா?“ என்று கேட்டேன்.
   “ஏன்?“ என்று சொல்லியபடி என்னைச்சுற்றிப் பார்த்துவிட்டு, “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. நல்லா அழகாகவே இருக்கிறீர்கள்“ என்று சொன்னார்.
   நான் உடனே... “நீங்க இப்படி சொல்லுறீங்க. உங்க பொண்ணு என்னை என்ன சொன்னாள் தெரியுமா...?“ என்றேன்.
   என் அண்ணி ஆர்வமாக... “என்ன சொன்னாள்?“ என்று கேட்டார்.
   “அவள் என்னை பூதம்ன்னு சொன்னாள்“ என்றேன். அதைக் கேட்டதும் என் அண்ணிக்குச் சிரிப்பு தாங்கவில்லை. என் அண்ணனை ஏளனமாகப் பார்த்தபடி வேறு சிரித்தார். அண்ணனும் சிரித்தார்.
   நானும் அண்ணனைப் பார்த்தேன். என் பாவமான முகத்தைக் கண்ட என் அண்ணன், “அது ஒன்னும் இல்ல அருணா. நேத்து கிளம்பும் போது எனக்கும் உங்க அண்ணிக்கும் சின்ன வாக்குவாதம். அந்த நேரத்துல டீவியில மை டியர் பூதம்“ன்னு விளம்பரம் வந்திருக்கிறது. சோனியா அதைக் கேட்டுட்டு “பூதம்“ன்னா என்ன அப்பா என்று கேட்டாள். நான் கோபத்துடன் இருந்ததால “தோ... உங்க அம்மா மாதிரி இருக்கிறவங்களைத் தான் பூதம்ன்னு சொல்லுவாங்க“ என்றேன்.
   அப்படி சொன்னதும் உன் அண்ணி என்னை முறைச்சிது. நான் உடனே “உங்க அம்மா மாதிரி அழகா இருக்கிறவங்களை பூதம்“ன்னு சொல்லுவாங்ன்னு மாத்தி சொல்லிட்டேன். அதனால் தான் அவ உன்னை அப்படி சொல்லி இருக்கிறாள்“ என்றார் அண்ணன் சிரித்தபடி.
   அப்பொழுது தான் அவள் சொன்னத்தின் காரணம் புரிந்தது. திருப்தியுடன் நானும் சிரித்துவைத்தேன்.

அருணா செல்வம்.


புதன், 11 டிசம்பர், 2013

யாருக்கு எந்த இடம்? (நகைச்சுவை)


   ஒருவர் ஒரு துறையில் வல்லுநராக இருந்தால் அவருக்கு அந்தத் துறையைச் சார்ந்த இடங்களில் பங்களிப்புத் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும். நான் படித்துச் சிரித்தேன். நீங்களும் படித்துச் சிரியுங்கள்

   ஒரு சமயம் ஒரு கால்பந்தாட்ட சங்கம் தாங்கள் நடத்தும் ஒரு கால்பந்தாட்டப் போட்டிக்குத் தலைமை தாங்க ஜெய்ப்பூர் மகாராஜாவை அழைத்தனர்.
   மகாராஜாவிற்குக் கால்பந்தாட்டம் பற்றி எதுவுமே தெரியாது. கால்பந்தாட்டத்தை அவர் ஒருமுறை கூடப் பார்த்ததும் இல்லை.
   இருந்தாலும் அழைப்பு விடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, குறிப்பிட்ட நாளில் கால்பந்தாட்டப் போட்டிக்குத் தலைமை தாங்கச் சென்றார்.
   போட்டி துவங்கியது.
   இரு அணிகள் மோதின.
   பந்து இங்கும் அங்கும் பறந்தது.
   வீரர்கள் மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடினர்.
   விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த மகாராஜாவிற்கு ஒரே எரிச்சல். சட்டென்று எழுந்து அரண்மனைக்குக் கிளம்பிவிட்டார்.
   மறுநாள், அந்தக் கால்பந்தாட்ட கிளப்புக்கு 51 கால்பந்துகளை அனுப்பி வைத்தார் மகாராஜா. கூடவே ஒரு கடிதமும் இருந்தது.
   கிளப் தலைவர் கடிதத்தைப் படித்தார்.
   அதில்...
   சங்க நிர்வாகி அவர்களுக்கு மகாராஜா எழுதிக்கொள்வது.
   நேற்று நடந்த விளையாட்டில் பல வீர்ர்கள் ஒரு பந்துக்காக முட்டி மோதி சண்டை போட்டுக் கொண்டதைப் பார்த்தேன். கேவலம் ஒரு பந்துக்காக அவ்வளவு சண்டையா? அதனால்தான் 51 பந்துகளை அனுப்பியிருக்கிறேன். ஆளுக்கு ஒரு பந்தாகக் கொடுத்துச் சண்டைகிண்டை போடாமல் சந்தோஷமாக விளையாடச் சொல்லுங்கள்.  இப்படிக்கு மகாராஜா“
   என்று எழுதி இருந்தது. இதைப்படித்த கிளப் தலைவருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இதைப்படித்த உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?

படித்ததில் சிரித்தது.

அருணா செல்வம்.

வியாழன், 26 செப்டம்பர், 2013

யாராவது உதவி செய்யுங்களேன்... ப்ளீஸ்!!






நட்புறவுகளுக்கு வணக்கம்.
    நான் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இருந்ததால் உங்களுடன் அதிக தொடர்பில் இல்லாமல் இருந்தேன். இப்பொழுது இங்கு வந்ததிலிருந்து உடல் நிலை சரியில்லை. இப்பொழுது சற்று பரவாயில்லை.
   என்ன இவரின் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் சொல்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். ஆனால் நீங்கள் வேண்டாம் என்றாலும் நான் சொல்லி தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். காரணம்...
    என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களில் மிக முக்கியமானது மின் வலையில் பதிவுகளை ஏற்றுவதும் மற்றவர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திடும் நேரமும் ஆகும். ஆனால் இப்பொழுது அதிலும் பிரட்சனை வந்துவிட்டது.
   என்னவென்றால்...
   என் வலையைத் திறந்தாலே பதிவிற்கு மேல் நிறைய விளம்பரங்கள் வந்து அனைத்தையும் மறைத்து விடுகிறது. எழுத்துக்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை. மற்றவர்களின் வலைக்குள் போய் படித்தாலும் இப்படியான பிரட்சனைகள் வருகிறது. (இதனால் என் மனக்கவலைகளை இங்கே சொல்லி மாளாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்)
   நான் பலவகையில், (எனக்குத் தெரிந்த) அந்த விளம்பரங்கள் வராமல் தடுக்கப் பார்த்தாலும்.... அது சரிபடாமல் திரும்பவும் வந்து என்னை அலைகழிக்கிறது.
   ஆகவே நட்புறவுகளே.... யாருக்காவது இதனைச் சரி செய்யும் உத்தித் தெரிந்தால் அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

                     நன்றி!

அன்புடனும் நட்புடனும்
அருணா செல்வம்.