ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 டிசம்பர், 2014

“லிங்கா“ படம் பார்த்தேன்!




நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இந்தப் பதிவு “லிங்கா“ பட விமர்சனம் இல்லை. என் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் மட்டுமே சொல்லும் பதிவு. அவ்வளவே!
   சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றால் எல்லோருக்கும் இருக்கும் ஆவலைப்போல எனக்கும் படம் பார்க்க ஆவல் உண்டு. ரஜினி படம் என்றால் மனத்தில் நிற்கும் பஞ்ச் டைலாக்குகள் பிடிக்கும். (அதை மற்றவர்கள் தான் எழுதினார்கள் என்பது தெரிந்திருந்தும்...)
   படத்தில் பிரமாண்ட காட்சிகள் இருக்கும். எந்திரன், சிவாஜி.... போன்று கதையில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எனக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே இருப்பது தான்.
    லிங்கா படம் இந்த மூன்று நாட்களில் 100 கோடி வசுலைத் தாண்டி விட்டது என்ற செய்தி கூட படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியது. தவிர படம் மூன்று மணி நேரமாம். டைட்டானிக் போல அலுப்பில்லாமல் சென்றது என்ற விமர்சனங்கள் மேலும் மேலும் ஆவலைத் தூண்டியது.

அதனால்....

   நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி நேர படம். (படம் மூன்று மணி நேரம் ஓடியது மக்களுக்கு அலுப்பு வந்ததால் படத்தில் வேண்டாத 26 நிமிட காட்சிகளைக் குறைத்துள்ளார்களாம்)
   கதை இன்றைய நாளிலும், இன்றிலிருந்து எழுபது வருடம் ஆதாவது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பும் நடந்த நிகழ்ச்சியையும் படமாக எடுத்திருக்கிறார்கள்.
   ஆனால், உண்மையில் முல்லை பெரியார் அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையின் தழுவல் தான் இந்த லிங்கா படத்தின் பழங்கால கதையமைப்பு.
   கதையில் இன்றைய நிலையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நயம்படவும் நகைச்சுவையாகவும் சொல்லி இருந்தாலும் முற்காலத்தில் நடந்தக் கதையைச் சொல்லிச் சென்ற விதம் சொதப்பல் தான். கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கமா இந்தப்படம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்ற வைக்கிறது.
   ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவைப் பல இடங்களில் பாராட்டலாம். ஆனால் கிராஃபிஸ் காட்சிகளில் கோட்டை விட்டுவிட்டார்.
   ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தியா.... பாடல் மனத்தை வருடுகிறது. மற்றப்பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் தான் பிடிப்பு ஏற்படும் என்ற அளவிலேயே உள்ளது.
   சூப்பர் ஸ்டார் கொடுத்த வேலையை மிகவும் நன்றாக செய்திருக்கிறார். அவர் நடிப்பில் குறையே சொல்ல முடியாது. நடிப்பு, நடனம், அவரின் ஸ்டெய்ல்.... எதிலும் அவரிடம் குறைகாண முடியவில்லை என்பது படத்தின் முக்கிய பிளஸ் பாயிண்ட்.
   கதாநாயகிகள் அனுஷ்கா, சோனாக் ஷி இருவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். சோனாக் ஷியை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம்.
   இடையிடையே ரஜினி சந்தானத்தின் நகைச்சுவை படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.
   
   இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், ரஜினி ரசிகர்களோ, ரசிகராக இல்லாதவரோ..... சூப்பர் ஸ்டாரின் படம் என்ற எதிர்ப்பார்ப்புடன் படம் பார்க்க வந்தவர்களுக்குப் படம் முழு திருப்பியைத் தந்திருக்குமா என்பது சந்தேகமே.

அருணா செல்வம்

16.12.0214

திங்கள், 22 செப்டம்பர், 2014

கவிஞர் வாலியின் நகைச்சுவை!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கவிஞர் வாலி அவர்களின் இந்த நகைச்சுவையை நீங்கள் ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கலாம். ஆனால் நான் நேற்று தான் கேட்டேன். இதை ஏற்கனவே கேட்காதவர்கள் அவரின் சாமார்த்திய பேச்சின் நகைச்சுவையைப் படித்து மகிழுங்கள்.

   ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
   அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுத்து இருக்கிறார்.
   உடனே ரஜினி அவர்கள் கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார். அங்கே கவியரசர் வைரமுத்து அவர்கள் ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
   ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன செய்வது என்று தெரியாமல் “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்“ என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லி விட்டு திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வந்தார்.
   வந்தவர் கவிஞர் வாலியிடம் “ஐயா.... இன்று சிங்கமும் புலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்“ என்று சொன்னார்.
   அதைக்கேட்ட வாலி உடனே, “யாரு.... வைரமுத்து வந்திருக்கிறாரா?“ என்று கேட்டார்.
  ரஜினியும் “ஆமாம் ஐயா“ என்று பதில் சொன்னார்.
   உடனே கவிஞர் வாலி கேட்டார்...., “ஆமாம்.... எங்களில் யார் சிங்கம்? யார் புலி?“ என்று.
   ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகி விட்டது. “ஐயா... அது வந்துங்க... நீங்க ரெண்டு பேருமே.....“ என்று இழுத்து இருக்கிறார் ரஜினி.
   அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கவிஞர் வாலி, “இதில் என்ன தயக்கம்? இங்கே நான் தான் சிங்கம்.“ என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.
   ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாகச் சிரித்தார். அவரைப் பார்த்த கவிஞர் வாலி, “என்ன ரஜினி...  என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா?“ என்று கேட்டார்.
   ரஜினி “இல்லை“ என்று தலையாட்டி இருக்கிறார்.
   உடனே கவிஞர் வாலி, “இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது“ என்றார் தன் தாடியைத் தடவி விட்டுக்கொண்டே...
   அவர் சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரித்தார். அங்கு வந்த வைரமுத்து அவர்களிடமும் இதைச் சொல்ல அவரும் சேர்ந்து சிரித்தார்.

கேட்டதில் ரசித்தது.
அருணா செல்வம்.

22.09.2014

வியாழன், 29 மே, 2014

பெண்களின் பார்வையில் கோச்சடையான்....!!!



நட்புறவுகளுக்கு வணக்கம்.
   நான் எப்படியாவது கோச்சடையான் திரைப்படத்தைத் திரையரங்கில் தான் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அதை நேற்று நிறைவேற்றிக் கொண்டேன். ஆனால்.....

   நான், என் தோழியர் இருவர் மட்டும் படம் பார்க்கப் போவதாக முன்பே பேசி நேரம் குறித்துவிட்டோம். ஆனால்..... கடைசி நேரத்தில் எங்கள் மூவரின் கணவர்மார்களும் கூடவே வருவோம் என்று அடம்பிடித்ததால்....(?!) வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல நேர்ந்தது. இதனால் என்ன குறை என்கிறீர்களா....? பின்னே இருக்காதா...?
    ரஜினியின் தீவிர ரசிகையான என் ஒரு தோழி(1).... ரஜினியைத் திரையில் காட்டியதும் கைதட்டி விசில் அடிக்கப் போவதாக ஏற்கனவே சொல்லி இருந்தாள். இவர்கள் உடன் வந்ததால் மரியாதை நிமிர்த்தமாக அந்த ஆசை நிறைவேராமல் போய்விட்டதே...!!!

    நாங்கள் மூன்று பெண்கள் படம் பார்த்ததைப் “பெண்களின் பார்வையில் கோச்சடையான்“ என்ற தலைப்பிட்டது ஏன் என்றால் இரண்டு பெண்கள் சேர்ந்தாலே அதைக் கூட்டம் என்று கூறலாம் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லி இருக்கிறார். இங்கே மூவர்! தவிர பெண்கள் இரண்டு பேர் எதையாவது பேசினாலே... அதைக் கேட்கும் மற்ற பெண்களின் பேச்சும் அதுவாகவே தான் இருக்கும். அதனால் தான் இந்த தலைப்பு.
    சரி விசயத்திற்கு வருகிறேன். திரையரங்கிற்குள் போனதுமே.... “என்ன.... ஒரு டிக்கெட் 13.95 யுரோவா....? நம்ம ஊருக்கு ஆயிரம் ரூபாயிக்கு மேலேயே ஆகிறதே.... இவ்வளவு பணம் கொடுத்து பார்க்கத்தான் வேண்டுமா....? இன்டர்நெட்டிலேயே வீட்டில் பார்த்துவிடலாம்“ என்றாள் ஒரு தோழி(2) (தோழிகள் இருவரும் தன் பெயரை வெளியடுவதை விரும்பவில்லை)
   இருந்தாலும் 3டி கண்ணாடி அணிந்து ஒரு வழியாக படம் பார்த்துவிட்டு வந்துவிட்டோம்.
   வெளியில் வந்ததும் எங்களின் கணவர்கள் எங்களை ஒரு பூங்காவில் விட்டுவிட்டு கால்பந்தாட்ட மைதானத்திற்குச் சென்று விட்டார்கள்.
   அப்பொழுது எங்களுக்குள் பேசியது. உங்களுக்கும்....

அருணா- “படம் எப்படி இருந்தது...?“
தோழி 1 – “சூப்பர். ஆயிரம் என்ன இரண்டாயிரம் கூட கொடுக்கலாம். என்னதான் அனிமேஷன் படம் என்றாலும் நம் நாட்டிற்கே உரிய கதையமைப்புக்கு கே.எஸ் ரவிக்குமாரைப் பாராட்டலாம். அதைவிட புதிய தொழில் நுட்பத்தைத் தமிழ் படத்தில் அறிமுகப் படுத்திய சௌந்தர்யாவிற்கு ஒரு சலுட் பண்ணலாம்“ என்றாள்.
தோழி 2 – “என்னமோ தெரியலையடி. ரஜினி மற்றும் மற்றவர்களையும் ஏதோ குட்டை க்குட்டையாகக் காட்டியது போல் இருந்தது. அதிலும் கோச்சடையான் உருவத்தில் இடுப்பிலிருந்து மேல் பாதியை அருமையாக வடிவமைத்துக் கீழ் பாதியைக் குட்டையாகவும் கோணல் காலாகவும் இல்லாமல் வடிவமைத்து இருக்கலாம்.“
அருணா – “ஏய் இப்படியெல்லாம் சொல்லாதே. ரஜினி ரசிகர்கள் உன்னைச் சும்மாவிட மாட்டார்கள்.“
தோழி 2 “அதற்கெல்லாம் நான் கவலை படலை. நான் உண்மையைத் தான் எப்பொழுதும் பேசுவேன். அந்தக் கதாநாயகி உருவத்தில் ஏன் கண்களுக்கு அவ்வளவு மை? அந்த தீபிகா படுகோணுடைய அழகு அதனால் கொஞ்சம் குறைவாகவே தான் தெரிந்தது. ஒரு முறை தான் உருவத்தை வடிவமைக்கிறார்கள். அதை அழகாக செய்திருக்கலாம்.“
அருணா – “நீ இதையெல்லாத்தையும் கூட பாப்பியா...?!“
தோழி 1 – “அவளை விடுடி. நான் சொல்லுறதைக் கேள். ஒளிப்பதிவு ராஜிவ் மேனன். என்னமா அற்புதமாக இருந்தது. நாம எதிர்பார்க்காத இதுவரையில் பார்த்திராத பிரமான்டமான அரண்மனை அமைப்புகள். அதில் வடிவமைத்துள்ள சிலைகள் அற்புதம். பாடல் காட்சிகளில் அந்த மலையமைப்புகள்.... பள்ளத்தாக்குகள்.... சோலை.... அடடா... நாம் வாழ்நாளிலே உண்மையில் இந்த மாதிரியெல்லாம் பார்க்கவே முடியாது. கண்கொள்ளா காட்சிகள்“
தோழி 2 – “ஆமா.... எல்லாம் அனிமேஷன் தானே. ஏதோ எல்லாம் கிட்டகிட்ட தெரியும் என்று பார்த்தால்... தொடக்கத்தில் சூப்பர் ஸ்டார் எழுத்து மட்டும் தான் கிட்ட தெரிந்தது. மற்றதெல்லாம் சாதாரணமாகத் தான் இருந்தது. வாள் வீசும் பொழுது, சண்டையிடும் பொழுதெல்லாம் இந்த 3டியைக் கொஞ்சம் பயன்படுத்தி இருந்தால் கொஞ்சம் திகிலுடன் படம் பார்த்தது போல் இருந்திருக்கும்.“
தோழி 1 – “அப்படி இருந்தால் சின்ன பிள்ளைகள் பயப்படும் என்று தான் அப்படி எடுக்கவில்லை. சும்மா இரு. எதையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்காதே. சரி. படத்தோட பாடல் எப்படின்னு சொல்லு.“
தோழி 2 – “எட்டு பாட்டு. கேட்க கேட்கத் தான் மனசுல பதியும்ன்னு நினைக்கிறேன். கோச்சடையானக பாடும் பாடலில் உள்ள கருத்துக்கள் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கிறது. ஒரு சமயம் வைரமுத்து வரிகளோ.... ஆனால் நான் இசையமைப்பைக் குறையே சொல்ல மாட்டேன்ப்பா. ஏ.ஆர்.ரகுமான் சும்மா வெளுத்துக் கட்டியிருக்கிறார்.“
அருணா – “படத்துல வர்ற நாகேஷ் கேரட்டரைப் பற்றி எதுவுமே சொல்லலையே.“
தோழி 2 – “புது உத்தி தான். பாராட்டலாம். ஆனால்.... இப்பொழுது வாழும் பழங்கால நடிகருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம்.“
தோழி 1 – “நீ எதையாவது குறை சொல்லிக்கிட்டே இரு. உண்மைய்யைச் சொல்லுடி. இந்த படத்தில் நீ நிறைவாக எதையும் நினைக்கலை...?“
தோழி-2 - ஏன் இல்லை. நாம் கொடுத்த பணம், ரசினி கோச்சடையானாக ஒரு ருத்திர தாண்டவம் ஆடுகிறாரே.... அது ஒன்றுக்கே செரித்துவிடும். நான் மிகவும் இரசித்த காட்சி அது. சரி அருணா. கோச்சடையானுக்கு எவ்வளவு மார்க கொடுக்கலாம்.
அருணா – மார்க்கா...?
புது தொழில் நுட்பத்திற்கு
ரஜினி + சௌந்தர்யா      – 20
இசை                    - 10
கதை வசனம்            - 10
ஒளிப்பதிவு               - 10
சண்டை பதிவு           - 10
மற்றவை                - 5

மொத்தம் நாற்றுக்கு 65 மார்க் கொடுக்கலாம்பா. என்னடி நான் சொன்ன அளவு சரியா...?
தோழி -2 சரியான அளவு தான்.
தோழி -1- ஓரளவிற்கு சரிதான். என்று முடித்தாள்.

அருணா செல்வம்

29.05.2014