செவ்வாய், 14 டிசம்பர், 2021

செம்மொழி நாள்!

 



.
வழிதனில் நிறைவுகள் தடமாய்ப் பதிந்து
        வளமிகு அழகுடன் பொலிவாய் தெரிந்தாள்!
பொழிந்திடும் மழையதன் பயனைப் போலே
        புரிந்தவர் பயன்பெற உதவி புரிந்தாள்!
எழிலெனும் அணிகளில் மிளிர்ந்து நடந்தாள்!
        இவளிடம் குறையிலை என்றே அறிந்தும்
மொழிதனில் உயர்வெனத் தமிழைப் புகழ்ந்தும்
       முதல்மொழி இதுவெனத் திருநாள் வகுத்தார்!
.
இதைவிட உலகினில் இனிமை உளதோ!
       இலக்கண இலக்கியம் இனிக்கும் கரும்போ!
எதையிதற் கிணையென இயம்ப முடியும்?
       எழுத்தினை அளகிடம் இயல்பும் உளதே!
விதையெனப் பெருக்கிடுந் தொடர்பும் வளர
       வினைவிய பழையவர் இறைவன் தானோ!
சதைதனில் உலவிடுங் குருதி யெனவே
       தமிழினை அறிந்தவர் தழைத்தே வாழ்வார்!
.
கலைகளும் கவிதையும் உறைந்து வாழ்ந்து
     கலைமகள் உருவென வணங்க வைக்கும்!
இலைகளும் கனிகளும் நிறைந்த மரம்போல்
      இயற்கையின் வளமெனப் பிறருக் குதவும்!
அலைபெறும் கடல்தனில் கலந்த உப்பாய்
      அறிந்தவர் அதன்சுவை உயர்வைக் கண்டும்,
நிலையெனும் நிரந்தரம் தமிழ்தான் என்றே
       நிறைவுடன் முழங்கினார் மொழிநாள் என்றே!
.
(அரையடிக்கு விளம் + விளம் + மா + மா என்றமைந்த எண்சீர் விருத்தம்) 

பாவலர் அருணா செல்வம்
12.12.2024

1 கருத்து: