செவ்வாய், 8 ஏப்ரல், 2014

விநாயகர் விருத்தம்! (அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)




 மங்கல வேலை வந்தால்
    மஞ்சளைப் பிடித்து வைத்துக்
குங்குமப் பொட்டு மிட்டுக்
    கூடியே கும்பிட் டாலே
சங்கடம் எல்லாம் போக்கிச்
    சகலமும் தந்து காக்கும்
எங்களின் துயரைத் தீர்க்கும்
    சங்கரன் மைந்தா போற்றி!

சந்தனக் காப்பை ஏற்கும்
    சர்வமும் நீதான் என்று
சிந்தனை செய்தே எந்தன்
    சிரசினில் கொட்டிக் கொண்டு
வந்தனை செய்து வந்தால்
    வறுமைகள் யாவும் தீரும்
கந்தனின் மூத்தோ னான
    கணபதி தோழா போற்றி!

பண்பல பாடி உன்னைப்
    பரவசப் படுத்தும் போதும்
கண்களில் கண்ணீர் தேங்கிக்
    காதலாய் உருகி யோடும்
மண்ணிலே மக்கிப் போகும்
    மனிதரின் மனத்தில் வாழும்
விண்ணிலும் முதலாய் நிற்கும்
    விநாயகா போற்றி! போற்றி!

   இந்த அறுசீர் விருத்தம், நான் யாப்பிலக்கணம் என்று கற்றவுடன் எழுதி பழகிப் பார்த்த பாடல்.
   “முட்டா நைனா“ அவர்கள் “அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்“ ஒன்றை எழுதுமாறு நேற்று கேட்டெழுதி இருந்தார்.
  
   மேலே உள்ள பாடலை “அறுசீர் விருத்தம்“ என்று பொதுவாகச் சொல்வோம். ஐந்து சீர்களுக்கு மேல் சீர்களை அமைத்துப் பாடுவதே “கழி நெடிலடி“  என்பது. அறுசீரும் அதற்கு மேலும் உடைய எல்லா அடிகளையும் கழிநெடிலடி என்றே குறிப்பிடுவார்கள்.

   கழிநெடிலடியில் ஐந்துக்கு மேல் எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரலாம். நூற்றுத் தொண்ணுர்ற்றாறு சீர்க் கழிநெடிலடி வரையிலும் உண்டு. எனினும் 6,7,8,12 சீர் அடிகள் தாம் பெரும்பாலும் வருகின்றன.

   மேலே உள்ள பாடல் “அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்ததில்“ எழுதியதே!

அருணா செல்வம்.
09.04.2014

21 கருத்துகள்:

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

கணபதி ராயன் கழலிணை போற்று!
மணமதி வீசும் மலா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி... நைனா அவர்களுக்கும் நன்றி...

sury siva சொன்னது…


அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்ததில்“ எழுதிய

தங்கள் பாடல் உள்ளத்தைக் கவர்ந்தது என்று சொல்லவேண்டும். ஆதலால் உடன் அதை பாடினேன்.

அதை இங்கு இட்டு இருக்கிறேன். இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை.

தமிழ் கணினி உலகில் காணும் அழகிய கவிதைகளை பாடுவது எனது பொழுதுபோக்கு. அவ்வளவே. உங்களுக்கு விருப்பம் இல்லை எனின் அதை நீக்கி விடுகிறேன்.

விநாயகனின் பெருமையை போற்றும் விதமாக அமைந்துள்ள இந்த விருத்தம் உலகெங்கிலும் எதிரொலிக்கும் பொலிவு உடையது.

விநாயகன் அருள் தங்களுக்கு எடுத்த கருமங்கள் அனைத்திற்கும் கிடைக்கட்டும் என்று அப்பெருமானை வேண்டி நிற்கின்றேன். வணக்கம்.

சுப்பு தாத்தா.
https://soundcloud.com/meenasury/mohanavinayakar

அபயாஅருணா சொன்னது…

பாடலும் அதற்கான இலக்கண விளக்கமும் நன்றாக இருந்தது

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பாடலும் இலக்கண விளக்கமும் சிறப்பு! நன்றி!

அம்பாளடியாள் சொன்னது…

மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி .

Unknown சொன்னது…

ஆகா அருமை... மிக அருமை...!

வேண்டுகோளுக்கு செவிசாய்த்து "அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்" படைத்ததோடல்லாமல் அதற்குண்டான இலக்கண விளக்கத்தையும் எளிமையாக விளக்கியமைக்கும் மிக்க நன்றி டீச்சர்... மிக்க நன்றி...!

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான பாடல். ரசித்தேன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பெரிய்யா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் சுப்பு தாத்தா.

நான் பலபாடல்கள் எழுதி இருக்கிறேன். ஆனால் என் பாடலை ராகத்துடன் பாடிக் கேட்ட பொழுது தான் அதன் சுவை தெரிகிறது.

அழகாக ராகம் அமைத்தப் பாடி இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி சுப்பு தாத்தா அவர்களே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும்
மிக்க நன்றி அபயா அருணா தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி “தளிர்“

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

நைனா... என்னாச்சி......!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நான் எழுதிய, பதிவிட்ட அனைத்து எண்சீர் விருத்தங்கள், அறுசீர் விருத்தம் அனைத்தமே கழிநெடிலடி விருத்தங்கள் தான்.

ஏதோ உங்க புண்ணியத்துல மெட்ராஸ் பாசை கத்தக்கலாம்ன்னு நெனச்சேன். ம்ம்ம்.... அவ்வளவு தானா கொடுத்து வைச்சது.... போவட்டும்.
வெரி டாங்க்ஸ் பா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

Yarlpavanan சொன்னது…

யாப்பிலக்கணத்தில் வரும் கழிநெடிலடி பற்றிய விளக்கம் அருமை!
"வந்தனை செய்து வந்தால்
வறுமைகள் யாவும் தீரும்
கந்தனின் மூத்தோ னான
கணபதி தோழா போற்றி!" என்ற
அடிகளை நானும் விரும்புகிறேன்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனக்கும் பிடித்தமான ஒன்று. சரளமாக எழதும் ஆற்றல் இல்லைஎன்றபோதும் அவ்வப்போது முயறசி செய்திருக்கிறேன் .இலக்கணக் குறிப்புக்கும் நன்றி