வெள்ளி, 13 மார்ச், 2020

தமிழெனும் மொழியினிலே…. !



நொண்டிச் சிந்து ! - 2
.
தமிழெனும் மொழியினி லே – முழ்கித்
தண்ணொளி வீசிடக் கண்டிருந் தேன்!
அமிழ்தெனும் வார்த்தையி லே – நீந்தி
அழகெனும் கவிதையில் பழகிவந் தேன்!

பெண்ணெனும் பேதமை யால் – அதில்
பிணைந்திட்ட வார்த்தையில் இணைந்திருந் தேன்!
விண்வெளி பறப்பது போல் – இதயம்
விரித்திட்ட சிறகென வரித்திருந் தேன்!

வளமிடும் கவிதைகண் டேபூவை
வருடிடும் வண்டென உருகிநின் றேன்!
உளமெனும் கூட்டுக்குள்ளேதேனை
ஒளித்திடும் அழகினில் களித்துநின் றேன்!

இசையதன் மயக்கத்தி லே – என்னுள்
இறங்கிய உணர்வினில் மறந்திருந் தேன்!
திசையெனும் எட்டினி லும் – அதன்
திருமுகம் கண்டிட விரும்பிநின் றேன்!

மனமிடும் கலைகளி லே - இன்ப
மலரினுள் மணமென வளரவிட் டேன்!
குணமதை அறியவில் லைஉண்மை
கொடுத்திடும் அடிதனில் ஒடுங்கிவிட் டேன்!

குழந்தையின் உயர்வுகண் டே – அன்னை
கொடுமைகொ டுமையெனத் தடுப்பது மேன்?
பழமையில் சூழ்ந்துகொண் டே – குரு
பகைமையை வளர்த்தியுள் திகைப்பது மேன்?

குறையெது தேடிநின் றேன் – சினம்
கொண்டிடக் கருமையாய்க் கண்ணிசைக் கும்!
இறையிடம் கொடுத்துவிட் டேன் – கரு
இன்னிசைக் கொட்டிடப் பண்ணிசைக் கும்!
.
பாவலர் அருணா செல்வம்
14.03.2020

2 கருத்துகள்: