திங்கள், 17 ஜனவரி, 2022

மார்கழி 30!

 



.
மார்கழியில் கொட்டிடும் மத்தளச் சத்தமெல்லாம்
கார்நிறக் கண்ணணுக் காகவா? - மார்சுமந்த
மன்னவனைத் தையில் மணமுடிக்க வேண்டிய
இன்ப முழக்மென எண்ணு!
.
கூடிக் கலப்பேன் ! 20
.
மார்கழியில் நோம்பிருக்கும் மங்கையைத் தேடிவந்து
சேர்வராம் நற்றுணைவர்! செப்பினர்! - ஆர்வலனே!
சூடிக் கொடுத்தச் சுடர்க்கொடிப்போல் உன்னிடத்தில்
கூடிக் கலப்பேன் குலைந்து!
.
பழகாத உள்ளம் ! 21
.
மார்கழியில் காத்தகோ வர்த்தன மாமலைபோல்
நேர்பேசும் சொல்மழையை நீதடுத்தால் - பார்பேசும்
பண்புள்ளோன் என்று ! பழகாத உள்ளமும்
விண்ணளவு போற்றும் வியந்து!
.
நல்வழி வாழ்வு !22
.
மார்கழியில் பாரதப்போர் ! மாண்டாலும் வென்றார்கள் !
போர்வேண்டாம் பொன்னுயிர்கள் பூக்கட்டும்! - கூர்வாளோ
காயப் படுத்தியிடும் கட்டளை ! நல்வழியில்
நேயமுடன் வாழ்வோம் நிலைத்து!
.
நோக்கத்தைக் காத்தல் ! 23
.
மார்கழியில் பாற்கடலில் வந்த விடத்தினைச்
சேர்ந்தவர்க்கு உண்டார் சிவபெருமான் ! - சீர்கவியே
காக்குஞ் செயல்சிவனுக் கானதில்லை ! நம்பியோரின்
நோக்கத்தைக் காத்தலும் நோம்பு !
.
சேர்ந்துலா போவோம் ! 24
.
மார்கழியில் சொர்க்கத்தின் வாசல் திறந்ததும்
சேர்ந்துலா போவோம்…வா ! சீருலகில் - ஈர்க்குமிடம்
போக பொருள்வேண்டும் ! பொய்யாம் நினைவினில்
மேகத்தில் செல்வோம் மிதந்து !
.
வேந்தனடிப் பற்று ! 25
.
மார்கழியில் மின்னிடும் வாதிரை நன்னாளில்
ஓர்குறையும் வையா தொளிர்ந்திடும் ! சீர்மாந்தர்
சேந்தன் களியைச் சிவனுண்டார் ! நாமுமந்த
வேந்தனடிப் பற்றிடுவோம் வீழ்ந்து !
.
பொன்னாள் எது ? 26
.
மார்கழியில் பாடிய மங்கையைப்போல் நானுமுன்னை
நேர்வழியில் பாடி நினைக்கின்றேன் ! ஓர்வழிச்சொல் !
என்கையை நீபிடிக்க உன்கையை நான்பிடிக்கும்
இன்பமெனும் பொன்னாள் எது ?
.
நமைச்சேர்ப்பார் யார் ? 27
.
மார்கழி மாதம் வரமளிக்கும் என்றெண்ணித்
தீர்மானங் கொண்டு தினம்போனேன் ! ஓர்நினைவு
மின்றி அவன்தாள் இணைந்தேன் ! இனிஅவன்
அன்றி நமைச்சேர்ப்பார் யார் ?
. 
மனத்தால் விளித்தேன் ! 28
.
மார்கழியில் உன்னை மனதார எண்ணியதால்
சீர்குலைந்த நெஞ்சால் செயலிழந்தேன் ! நார்போல்
நெளிந்தேன் ! மேனி வெளிர்த்தேன் ! மனத்தால்
விளித்தேன் ஒலியிழந்து விட்டு !
.
இல்லறம் காண்போம் ! 29
.
மார்கழிக்குப் பின்பு மலர்ந்திடும் தைத்திருநாள் !
சேர்வழிக் காண்போம் சிறப்புடன் ! யார்த்தடுப்பார் ?
நல்லோர் நலஞ்செய்ய வல்லோர்கள் வாழ்த்திட
இல்லறம் காண்போம் இணைந்து !
.
கற்பெனும் திண்மை ! 30
.
மார்கழி போனது மங்கலஞ் சேர்ந்தது !
சீர்தாலி கட்டியெனைச் சேர்த்தணைத்தாய் ! சீர்நிறைந்த
நற்குறள் சொல்லினைப்போல் நல்லறமாய் வாழ்ந்திடுவோம்
கற்பெனும் திண்மையைக் காத்து !
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2022


மார்கழி என்ற  சொல்லில் துவங்கும் முப்பது நேரிசை வெண்பாக்கள் முடிவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக