சனி, 24 அக்டோபர், 2020

கலைமகளே அருள வேண்டும்!

 


பெற்றெடுத்த தாயே என்றும்
    பெரும்பசியைப் போக்கி நிற்பாள்!
பற்றிருக்கும் தந்தை வாழ்வின்
    படியுயரும் வழியைச் சொல்வார்!
சுற்றமுடன் செல்லும் பாதை
   சுமையின்றி அறிந்தி ருக்கக்
கற்றறியும் கல்வி தன்னைக்
   கலைமகளே அருள வேண்டும்!
 
நிலையான வாழ்வு வாழ
    நெஞ்சத்தில் உறுதி வேண்டும்!
சிலைபோன்ற அழகு கூடச்
    சிறப்பான உழைப்பு வேண்டும்!
விலையில்லாச் செல்வம் பொங்க
    வினையில்லாக் கல்வி வேண்டும்!
கலையாத இவைகள் சேரக்
    கலைமகளின் அருளே வேண்டும்!
 
பொன்னோடு பொருளி ருந்தும்
    புகழ்பெருமை வீரங் கொண்டும்
அன்போடு துணையி ருந்தும்
    அழகான மழலைக் கண்டும்
இன்மொழியைக் கல்லா வாழ்வு
    இனிக்காத கரும்பு போலே!
கன்னியவள் நெஞ்சி லேறக்
    கலைமகளே அருள வேண்டும்!
 
கொக்கென்று பதவி கண்டு
    கொக்கரித்து நிமிர்ந்து நிற்பார்!
மக்காகப் படித்துப் பேசி
    மற்றவரைச் சிரிக்க வைப்பார்!
செக்கொன்றைச் சுற்றும் மாடாய்ச்
    செகத்தினையும் சுற்ற வைப்பார்!
சொக்கவைக்கும் கல்வி யற்றால்
    சுடரிருந்தும் குருடன் கண்ணே!
 
ஒருவிளக்கின் சுடரை ஏற்ற
    ஓராயி ரவழிக் காட்டும்!
அருட்மறையின் பொருளை எல்லாம்
    அறிவுருத்தி உயர்த்த நோக்கும்,
உருமாறும் வாழ்வில் நாளும்
    உயர்ந்திடவே தேடி வாழும்
கருவிருட்டில் என்னைக் காக்க
    கலைமகளைப் பணிந்தேன் நானே!

.
பாவலர் அருணா செல்வம்
24.10.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக