செவ்வாய், 20 அக்டோபர், 2020

சிறுகதை, “வெவ்வேறு மனம்“,



வெவ்வேறு மனம் ! 

 

 வேலைவிட்டு வந்ததிலிருந்து தன் கணவன் ஏதோ கவலையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்தது போல் தெரிந்தது கோமதிக்கு.

    எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டாரே.... ஏன்...? இன்று என்னவாகியது...? யோசனையுடன் அருகில் சென்று மெதுவாக விசாரித்தாள். தொடக்கத்தில் ஒன்றுமில்லைஎன்றவர், அவள் திரும்பவும் கேட்க, சற்றுக் கோபத்துடனும் கவலையுடனும் சொன்னார்.

    “இன்னைக்கு எப்பொழுதும் வர்ற பஸ்சுல தான் வந்தேன். நான் ரெண்டு பேர் உட்கார்ற சீட்டுல உட்கார்ந்து இருந்தேன். ஒரு ஸ்டாப்புல ஒரு பொண்ணும் ஒரு ஆளும் ஏறினார்கள். அவங்களுக்கு உட்கார இடம் இல்லை. அந்தப் பொண்ணுக்கு நம்ம பொண்ணோட வயசு தான் இருக்கும். பார்க்கவும் நம்ம பொண்ணு மாதிரி தான் இருந்தாள். வயிறு கொஞ்சம் உப்புன மாதிரி.... கர்ப்பமாக இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.

   அதுக்கு அடுத்த ஸ்டாப்புல என் பக்கத்துல இருந்த ஆள் இறங்கிட்டாரு. அவர் இறங்கியதும், அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே நான் ஜன்னலோரம் நன்றாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் உட்கார இடம் கொடுத்தேன்.

   ஆனால் அவள் உட்காரவில்லை. நானும், “வந்து உட்காரும்மா...என்றேன். அவள் திரும்பி தன் கணவனைப் பார்த்தாள். அவனும் போய் உட்காருஎன்றான். ஆனால் அவள் உட்காராமல் என்னைப் பார்த்துப் பரவாயில்லைங்கஎன்று சொல்லி விட்டு நின்று கொண்டே வந்தாள்.

    எனக்குத் தான் என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அடுத்த ஸ்டாப் வந்தபோது எழுந்து நின்று கொண்டேன். பிறகு அவளும் அவனும் அமர்ந்து கொண்டார்கள். அதே சமயம் அவர்களுக்குப் பின்பிருந்த சீட்டு காலியாகவும் நான் அதில் அமர்ந்து கொண்டேன்.

    அப்போ அந்தப் பெண் அவள் கணவனிடம் சொன்னாள்... என்னங்க நீங்க. அந்த ஆள் இடம் விட்டதும் நீங்களும் உடனே என்னை உட்கார சொல்லிட்டீங்க. என்றாள்.

    ஏன் அதனால் என்ன...? அவன் கேட்டான்

    அதனால என்னவா...? கேட்க மாட்டீங்க. இப்போதெல்லாம் சின்ன பையன்களைக் கூட நம்பிடலாம். இந்த மாதிரி கிழடுகளை நம்பவே கூடாதுங்க... என்றாள். எனக்கு அதிலிருந்து மனசு என்னவோ போல் ஆகிவிட்டது. நான் என் பொண்ணு மாதிரி நினைச்சேன். சே.... ஏன் தான் பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு கோண புத்தி வருதோ...தலையில் கைவைத்த படி கவலையாகச் சொன்னார் சிவராமன்.

   “சரி விடுங்க. அவள் உங்களோட தோற்றத்தைப் பார்த்துப் பயந்திருப்பாள். அவளுக்கு உங்களோட வயசு தெரியாது இல்லையா...என்று சொல்லி விட்டு சிரித்த கோமதி அந்த சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினாள்.

 

சற்று நேரத்தில்

   கல்லூரி போய்விட்டு வந்த விமலா கோபமாக புத்தகத்தை வைத்துவிட்டு அமர்ந்தாள். என்னம்மா... என்னவாச்சி?“ அவளின் தலையைத் தடவி விசாரித்தார் சிவராமன்.

   “பாருங்கப்பா.... இன்னைக்குப் பஸ்சுல இடம் இல்லைன்னு ஒரு வயசானவர் பக்கத்துல போய் உட்காந்தேன். ஆனால் அந்த கிழம் பண்ணின அதம் இருக்குதே.... சே...கோபமாக முகம்சுளித்தாள். உடனே எழுந்து,  நல்லா நாலுபேருக்குத் தெரியிற மாதிரி திட்டுறது தானே...கோமதி கோபமாகச் சொன்னாள்.

    “இல்லம்மா... அவரைப் பார்க்க நம்ம அப்பா மாதிரி தெரிந்தார். அவரை எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்த பிடிக்கல. பேசாம எழுந்து நின்னுக்கினே வந்தேன்என்று சொல்லிவிட்டு எழுந்து போனாள்.

   சிவராமன் மனைவியைப் பார்த்தார். கோமதி அவரை அர்த்தத்துடன் பார்த்தாள். அவர் புரிந்து தலையாட்டினார்!

 

   ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு மனம் தான். அது ஒவ்வொரு நிகழ்வில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகட்டுகிறது.

 .

அருணா செல்வம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக