வியாழன், 3 டிசம்பர், 2020

பேரண்டப் பெருவெளி !

 


..

கார்போன்ற வானத்தைக் கண்ணால் பார்த்தால்
……கவியொன்றை இயற்றிடவே எண்ணம் தோன்றும்!
நீரில்லை! நிலமில்லை! நீலம் மட்டும்
……நிசமென்று நம்பவைத்து மறைக்கும் கண்ணை!
வேரின்றி விளைகின்ற கனிகள் போன்றே
……வெள்ளிநிலா விண்மீன்கள் நன்றாய் மின்னும்!
சீர்கொண்டு எழுதிவிட வந்தால் இங்கே
……பேரண்டப் பெருவெளியும் அடங்கும் மையில்!
 
விண்வெளியில் இருக்கின்ற கோள்கள் எல்லாம்
……விழிதிறந்து பார்த்தாலும் தெரியா(து) உண்மை!
மண்ணிலேயே நின்றுகொண்டு கணிதம் காலம்
……மகத்தான தீர்வுகளும் முன்னோர் அன்றே 
கண்கொண்டு பாராமல் சொல்லிச் சென்றார்!
……கலிகாலம் கொண்டுவந்த கணிணி மாற்றம்
விண்களமாய் ஏவிவிட்ட செயலால் தானே
……விளைகின்ற நிகழ்வுகளை இன்று கண்டோம்!
 
பலகாலம் முன்னாலே படைத்த தோற்றம்
……பழமையாக மாறாமல் புதுமை போன்றே
உலவுகின்ற பெருவெளியின் உண்மை என்ன?
……உலகிருக்கும் மாந்தர்களின் மனத்தின் உள்ளே
கலந்திருந்து ஒளிந்திருக்கும் எண்ணம் கண்டு
……காட்சியாக்கிக் கூறிவிட முடியும் என்றால்
அளவில்லாப் பேரண்ட வெளியில் உள்ள
……அத்தனையும் சொல்லிவிட முடியும் அன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
03.12.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக