வியாழன், 3 டிசம்பர், 2020

நதிக்கரை நாணல்கள்!


.

ஆற்றின் ஓரம் இதுவென்றே
…..அழகாய்க் காட்டும் அனைவருக்கும்!
காற்றின் இசைக்குத் தலையசைத்தும்
…..கவிதை பாட நமையழைக்கும்!
நாற்றுப் போன்ற செழுமைதான்
…..நாவிற் கினிமை அளிக்காது!
ஈற்றில் நீரோ வற்றிவிட
…..இருந்த சுவடோ தெரியாது!
.
ஓடும் நீரின் அழுக்கெல்லாம்
…..ஓரம் ஒதுக்கி அதையனுப்பும்!
ஆடும் புயலின் காற்றினிலும்
……அசைந்து கொடுத்து நமைமயக்கும்!
நாடும் உயிருக் கிடமளித்து
…..நன்மை செய்தே வாழ்ந்திருக்கும்!
வாடும் காதல் வற்றிவிட
…..வருந்தி தானும் வளமிழக்கும்!
.
நாணல் சேர்ந்த புதர்தனிலே
…..நலமாய் வாழும் பலவுயிர்கள்!
கூனல் கொண்டே இருந்தாலும்
…..குறைவாய் இல்லை குணத்தினிலே!
ஊனம் கொண்ட மனமிருந்தால்
…..உலகில் வாழ்ந்தும் பயனில்லை!
கானல் நீரோ அங்கில்லை
…..காட்சி உண்மை நல்கிடுமே!
.
உதவ வேண்டும் எனநினைத்தால்
…..உடனே ஓடிச் செய்திடலாம்!
பதவி பலவும் இல்லாமல்
…..பண்பாய் எதையும் கொடுத்திடலாம்!
முதலில் செய்யும் உதவிக்கே
…..முழுமை யான பலமிருக்கும்!
எதையும் எதிரே பார்க்காமல்
…..இந்த நாணல் உயர்கிறதே!
.
பாவலர் அருணா செல்வம்
04.12.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக