செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஊருக்கு உழைப்பவன்!

 


.
காடுமேடு கழனியெல்லாம் சுத்தம் செய்து
    …….காய்க்கின்ற வயலாக மாற்றி வைத்தான்!
தேடுகின்ற பணத்தையெல்லாம் நிலத்தில் கொட்டி
    …….தேர்ந்தெடுத்த விதைநட்டுத் தழைக்கச் செய்தான்!
மாடுகட்டிப் போரடிக்க முடியா தென்றே
    …….லையாளும் யானைகட்டிப் போர டித்தான்!
வீடுவாசல் சேர்த்துநன்றாய் விருந்து வைத்து
    …….விளையாடிச் செழித்திருந்தான் உழவன் அன்று!
.
வேருக்கு நீரோட்டம் பார்க்கும் நல்ல
    …….விவசாயி கையைநம்பி வாழ்ந்தி ருந்தோம்!
ஊருக்கே உழைக்கின்ற வயிறு காய
    …….உணவுக்கே பஞ்சமென்றால் என்ன செய்வான்?
நேருக்கு நேர்நின்றே ஒன்றாய் கூடி
    …….நீதிகேட்டு நிற்கின்றான்! தரகர் என்றே
பேருக்குக் கொடுக்காமல் உழைத்த கூலி
     ….. பெறுவதற்கே இணைந்திடுவோம் நாமும் சேர்ந்தே!
.
பாவலர் அருணா செல்வம்
09.12.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக