செவ்வாய், 17 நவம்பர், 2020

தீபாவளி பாசம்

 

  அமுதன் ரகுவின் வீட்டில் நுழைந்த போது அவனின் மகள் புவனா, புது கவுன் போட்டுக்கொண்டு தெரு வாசலிலேயே நின்று கொண்டு மற்றவர்கள் பட்டாசு கொளுத்துவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

   “அவளிடம் இவன் புவனா.... இந்த கவுன் திபாவளிக்கு எடுத்ததா...?“ என்று அன்பாகக் கேட்டான்.

   அவள் இவனை முறைத்துவிட்டு, “இல்ல. இந்த கவுன் எனக்கு எடுத்ததுஎன்றாள்.

   உள்ளே போகும் போதே இப்படியா... என்ற யோசனையுடன் நுழைந்தவனை ரகு பெரியதாக வரவேற்காமல் வாடா...என்று மட்டும் சொன்னது இவனுக்கு மேலும் என்னவோ போல் ஆகிவிட்டது.

   என்ன செய்வது?  உதவி என்று கேட்க போகும் இடத்தில் மரியாதையை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா....? மனத்தைத் திடமாக்கிக் கொண்டான்.

   “என்னடா ரகு! இன்னைக்கு மழை வரும்ன்னு ரேடியோவில சொன்னாங்க. நீ கேட்டியா...?“

   “நான் கேக்கலைடா. அவங்களாத்தான் சொன்னாங்க.முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சொன்னான் ரகு. அமுதன் ஐயோஎன்று தலையைப் பிடித்துக்கொண்டான்.

   “என்னண்ணா... தலைவலியா...? அவர்கிட்ட பேசினாலே தலை வலிக்கும் தான். தலைவலி மருந்து வேணுமா...?“ பாசத்துடன் கேட்டபடி வந்தாள் ரகுவின் மனைவி.

   “வேண்டாம்மா. கொஞ்சம் சூட காப்பி இருந்தா கொடுஎன்றான்.

   “க்கும். ரெண்டும் ஒன்னு தான். எதை சாப்பிட்டால் என்ன?“ ரகு முணுமுணுத்தது அவள் காதிலும் விழுந்தது.

   “இதோ பாருங்க... ரெண்டு நாளா சண்டை போட்டது போதும். இன்னைக்கு நல்ல நாளும் அதுவுமா எங்கிட்ட சண்டைக்கு வர்றாதீங்க. எனக்கு கெட்ட கோபம் வந்திடும்... ஆமா...

   “உனக்கு நல்ல கோபம் கூட வருமா...? போ... போயி அந்த கஷாயத்தைப் போட்டு இவனுக்குக் கொடு.என்றான் ரகு எரிச்சலுடன்.

   அவள் முறைத்துவிட்டு அடுப்பறைக்குள் சென்றாள்.

   ரகு அமுதன் கொண்டு வந்த பலகாரப்பையைத் திறந்து அதிலிருந்த அதிரசத்தை எடுத்துச் சாப்பிட்டான். அதிரசம் சூப்பர்டா. வீட்டுல செஞ்சிதா?“

   “ஆமாம். ஆமா... நீங்க எதுவும் பலகாரம் செய்யலையா...?“ இவன் கேட்கும் பொழுதே.... காபியைக் கொண்டு வந்தவள், “ஆமா... நாளும் கெழமையுமா உங்க பிரெண்ட் நாளு பலகாரம் செய்யவிடுறாரா?“ மூக்கைச் சிந்தாத குறையதாக இழுத்தாள்.

   “ஏன்டா... என்ன ஆச்சி? ஏன்ம்மா புது டிரெஸ் வாங்கலையா...?“

   “நான் எனக்கு ஒரு புடவை வாங்கினேன்

   “நீ என்னடா வாங்கினே...?“

   “நான் கடன் வாங்கினேன்டா.

   “ஐயோ... என்னச்சி உனக்கு?“ அவன் பேசாமல் இருக்கவும் இவன், அவனின் மனைவியிடம் என்னதான்மா ஆச்சி?“ கேட்டான்.

   “அது ஒன்னும் இல்லையண்ணா. இந்த வருடம் அவருடைய தங்கைக்கு தலைதீபாவளி இல்லையா...? அவுங்க அம்மா பணம் கேட்டு போன் பண்ணினாங்க. இவரும் இந்த வருஷம் நாம தீபாவளியை சிக்கனமா கொண்டாடிடலாம்ன்னு சொல்லிட்டு எங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இருந்த பணத்தை ஊருக்கு அனுப்பிட்டாரு. கேட்டதுக்குத் தான் இவ்வளவு கோபம்.என்றாள்.

   “உங்கிட்ட சொல்லி இருந்தா நீ பணத்தை அனுப்பவா விட்டிருப்பே? எனக்கு அது வேணும் இது வேணும்ன்னு பணத்தைக் காலி பண்ணி இருக்க மாட்டே...கோபத்துடன் ரகு சொன்னான்.

   “ஆமா... அப்படியே நீங்க வாங்கி கொடுத்திட்டாலும்.... இப்ப கூட பாருங்ண்ணா. என் அண்ணன் தீபாவளிக்கு புவனாவிற்கு கவுன் வாங்க சொல்லி பணம் கொடுத்தது. அதுல சிக்கனமா எனக்கு ஒரு புடவையும் அவளுக்கு ஒரு கவுனும் எடுத்தேன். எங்களுக்குன்னு இவரு என்ன பெரிசா செய்திட்டாரு? நமக்கும் பொண்டாட்டி குழந்தைன்னு இருக்கிற எண்ணமே கொஞ்சம் கூட இவருகிட்ட இல்லண்ணா...குரல் தழுதழுத்தது.

   “சரி விடும்மா. இதையெல்லாம பெரிசா நினைச்சி கண் கலங்கிட்டு. ஏதோ நம்ம வசதிக்கு நம் தங்கைக்கு நம்மால முடிஞ்சதை செய்தோமே... என்ற திருப்தியாவது அவனுக்கு இருக்கட்டும். ரெண்டு பேரும் எங்கேயாவது வெளியில கிளம்பி போயிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

   வாசல் வரையில் வந்த ரகு அமுதனின் பாக்கெட்டில் இரண்டாயிரம் ரூபாயைச் செறுகினான்.

   “ஏதுடா இது?“

   “எனக்குத் தெரியும்டா. உன் தங்கைக்கும் இந்த வருடம் தலை தீபாவளி என்று. நான் கடன்வாங்கும் பொழுதே உனக்கும் சேர்த்து தான்டா வாங்கினேன். என் பொண்டாட்டிக்கு அவ அண்ணன் கொடுத்தான். நம்ம தங்கச்சிக்கு நாம தானே கொடுக்கனும். இதுவே தீபாவளி கொண்டாடின திருப்தியை நமக்கு கொடுத்திடும்டா... ம்.. கிளம்பு

   அமுதன் நன்றி சொல்லமுடியாத நிலையில் ரகுவைப் பார்த்துவிட்டு நடந்தான்.

 .

அருணா செல்வம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக