வெள்ளி, 20 நவம்பர், 2020

இதுவும் கடந்து போகும்!!


.
நிலையாய் இருக்கும் என்றேநாம்
   …..நெடிய வாழ்வை எண்ணுகிறோம்!
வலையைப் போட்டே இழுக்கின்றான்!
  ….. வகையாய் மாட்டி விடுகின்றோம்!
அலையாய் இன்பம் அடித்திருக்க
 …..  அமைதி யான வாழ்க்கையினைக்
கலைத்துப் போட்ட கோலத்தைக்
 …..   கண்டு நானும் துடித்திட்டேன்
.
காதல் கொண்ட வாழ்வினிலே
 …..  கணவன் என்றும் தெய்வம்தான்!
சேதம் இல்லா வாழ்வினிலே
 …..  சேர்ந்த துன்பம் என்சொல்வேன்?
சாதல் என்றும் பழையதுதான் !
…..   சகித்துப் போகச் சொன்னாலும்
பூத மனமோ மறக்காத
…..   பொல்லா நிலைதான் என்சொல்வேன்?
.
அந்த செய்தி நானென்றும்
…..   அறியா மலேயே இருந்திருந்தால்
சொந்தம் கண்ட அனாதைபோல்
 …..  சுடரும் முகமாய் இருந்திருப்பேன்!
வந்த செய்தி இதயத்தை
…..   வலிக்கச் செய்து விட்டதினால்
சிந்தை முழுதும் அவள்நினைவாய்
…..   சின்னத் தனமாய் அழுகின்றேன்!
.
என்ன சொல்வேன் ஆறுதலாய்?
  ….. எதைதான் சொன்னால் ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
…..   இதயம் ஏந்தி சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
…..   துணிவாய் முன்னோர் சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
…..   இதுவும் கடந்து போகுமென்றே!
.
பாவலர் அருணா செல்வம்
20.11.2020

1 கருத்து: