திங்கள், 25 நவம்பர், 2019

பிரிமொழிச் சிலேடை!



    ஒரு பாடலில் வந்திருக்கும் பொருளானது, அப்பொருளின் தன்மைக்கும், அதனின் எதிரான தன்மைக்கும் பொருந்தும் படி வருவதுபிரிமொழிச் சிலேடைஎனப்படும்.
. ம்
கார்நிறைவா தாரமுகைக் காற்றடித்துத் தொட்டணைக்க
சேர்முறைமா மன்மேனிச் சீண்டிருக்கும்! – கூர்காற்றால்
ஆடுமுடைத் தேடும்புள் ஆவலிக்கக் கட்டவிழும்
கூடும் குளிர்காலக் கூற்று!

குளிர்காலத்தில் நடக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரு பாடலிலேயே ஒருவகையானச் சொற்களாலேயே அமைந்துள்ளது. இப்பாடலில் குளிர்கால இன்பத்தைச் சொல்லும் போது ஒருவிதமாகவும், துன்பத்தைச் சொல்லும் போது வேறு விதமாகவும் பிரிந்து பொருள் படுவதால் இது பிரிமொழிச் சிலேடைஆகியது.


குளிர்கால இன்பத்தைச் சொல்லுங்கால்,… அழகு நிறைந்த உடலை மழையில் மலரும் பருவத்து அரும்பாக, வாடைக் காற்றானது தொட்டு அணைக்க, சேரும் முறையுள்ள மாமன் மேனியைத் தீண்டிவிட மகிழ்ச்சிதரும். மிகுதியான காற்றால் உடலானது ஆடுவதால் உடையைத் தேடும். மதுபானத்தால் ஆசை அதிகமாக மனக்கட்டானது அவிழ்ந்து திரும்பவும் கூடி மகிழ்வது தான் குளிர்காலத்தில் நடப்பது.

குளிர்காலத்தில் துன்பத்தைச் சொல்லுங்கால் --- அச்சம் நிறைந்ததும், வன்மையான சத்தமுடைய மழைக்கூட்டமும், பேய்க்காற்றும் தொட்டு அணைக்க, நெற்குதிரில் உள்ள கருவண்டானது மந்திரம் ஓதுவது போல மேனிதனில் ஆரவாரித்துத் தொந்தரவு செய்யும். கூர்மையான குளிர் காற்றால் உடல் ஆட போர்த்திக்கொள்ள துணியைத் தேடும். காற்றால் பறவைகள் புலம்ப அதன் கூடுகளின் கட்டுகள் அவிழ்ந்து மண்ணில் விழுவது தான் குளிர்காலத்தில் நடப்பது.

கார்- கரியது, அச்சம், அழகு,
ஆதாரம்பற்றுக்கோடு, ஆதாரம், நிலை, உடல்
தாரம்வல்லிசை, மழை,
முகைகூட்டம், மலரும் பருவத்து அரும்பு
காற்றுவாடை, பேய்,
சேர்நெற்குதிர், சேருதல்,
மாஅழகு, வண்டு,
மன்கணவன், மந்திரம்
மேனிஉடல்
சீண்டுதல்தொந்தரவு செய்தல், தீண்டியுணர்த்துதல்,
கூர்கூர்மை, மிகுதி,
புள்பறவையினம், மதுபானம்
ஆவலிக்கஆசைப்படுதல், புலம்பல்,

இப்பாடலில் குளிர்கால இன்பத்தைச் சொல்லும் போது ஒருவிதமாகவும், துன்பத்தைச் சொல்லும் போது வேறு விதமாகவும் பிரிந்து பொருள் படுவதால் இது “பிரிமொழிச் சிலேடைஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
26.11.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக