திங்கள், 29 ஏப்ரல், 2019

வேற்றுப்பொருள் வைப்பு அணி.



வேற்றுப்பொருள் வைப்பு அணி.
முழுவதும் சேறல்!
.
பாடலில் கவிஞன் தான் கருதிய ஒரு நிகழ்வை உரைத்துவிட்டுப், பிறகு அந்த நிகழ்விற்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு செயலை (பொதுப்பொருளை) முற்றாகவும் உரைப்பது ஆகும். (முற்றாக உரைத்தல் என்பது, சிறப்புப் பொருளையும் பொதுப் பொருளையும் உலகமானது முழுவதுமாக ஏற்றுக் கொண்ட செயலை அப்படியே உரைப்பது ஆகும்)
.
கரைத்தொட்டு ஓடும் கடல்அலை நாளும்
இரைந்தாலும் ஓயாது இருக்கும்! – தரையிலே
பொன்னான வாழ்வில் பொதிந்தே நடக்கின்றோம்
இன்பமும் துன்பமும் ஏற்று!
.
பொருள்கரையைத் தொட்டு ஓடும் கடல் அலையானது எந்நாளும் இரைச்சலுடன் ஓயாமல் அலை அடித்துக்கொண்டே இருக்கும். நிலத்திலே நமக்குக் கிடைத்த பொன்னான வாழ்க்கையில் பொதிந்திருக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றே வாழ்க்கையை நடத்துகின்றோம்.
    …..பாடலில் கடல் அலையானது இரைச்சலுடன் எந்நேரமும் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கும், என்ற சிறப்புப் பொருளுக்கு,  நிலத்திலே பிறந்த மானிதர்களின் வாழ்வில் இன்பமும் துன்பமும் ஓயாமல் இருந்து கொண்டே இருக்கும் என்று ஒரு கருத்தை அதன் மேல் ஏற்றிச் பொதுப் பொருளைச் சொன்னதால் இது வேற்றுப்பொருள் வைப்புஆகியது. உலகில் பிறந்தவர்களின் வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்து நடந்து கொண்டே தான் இருக்கும் என்ற உலகறிந்த ஒரு பொருளை சொன்னதால் இதுமுழுவதும் சேறல்என்னும் வகை ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
30.04.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக