பெட்ரோலுக்குப் பணத்தை எண்ணி
டிரைவரிடம் கொடுத்து விட்டு நிமிரும் போது தான், தன் பால்ய நண்பன் செந்திலைப்
பார்த்தான் மனோகரன்.
“செந்தில்...“ என்று கூப்பிட்டதும்
ஓடி வந்து கைகுலுக்கினான். நட்பின் உண்மையைக் கையின் தொடுதலிலும் முக
மலர்ச்சியிலும் இருவரும் உணர்ந்தார்கள்.
“என்ன மனோ.... இவ்வளவு காலையில இங்க
வந்திருக்கிறே...?“ ஆச்சர்யத்துடன் கேட்டான் செந்தில்.
“பொண்ணுக்குக் கல்யாணம்
வைச்சிருக்கிறேன். அதுக்காகத்தான் ஒருத்தரைப் பார்க்க வந்தேன். அவரு காலையிலேயே
இங்கே ஜாகிங் வருவார். பார்த்துப் பேசிட்டேன். “ என்றான் மனோகரன்.
“யாரு... நம்ம ரம்யாவுக்கா....?
பேஷ் பேஷ்... ரொம்ப சந்தோஷம்டா.“
“நீ எப்போ உன் பையனுக்குக் கல்யாணம்
பண்ண போறே...?“
“ம்... பொண்ணெல்லாம் பெரிய இடத்துல பார்த்துட்டேன்.
கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வைக்க உன் வீட்டுக்கு வர்றேன்.“
“சீக்கிரம் வா. ஆமா... நீ எங்க இந்த
நேரத்துல?“
“நான் எப்பவும் ஜாகிங் வருவேன்.“
“நடந்தா போவே...? வாயேன்... என்
வண்டிலிலேயே போயிடலாம்“
“இல்ல... போற வழியில கையோட பால்
காய்கறி வாங்கிக்கினே வீட்டுக்குப் போயிடுவேன்.“ என்றான் செந்தில்
“சரி செந்தில். நான் கிளம்புறேன்“
“இந்த நேரத்துல நிறைய டிராபிக்
இருக்கும். பார்த்துப் போ.“ என்று கையசைத்து அனுப்பிவிட்டு நடையைத் தொடர்ந்தான்
செந்தில்.
காரின் பின் இருக்கையில் சாய்ந்து
கொண்டு யோசித்தான் மனோகரன். இருவருக்கும் ஒரே வயது. ஒரே படிப்பு. இருவரும் ஒரே
நேரத்தில் தான் வேலையில் சேர்ந்தார்கள். ஆனாலும், செந்திலை விட தான் அதிக சம்பளம்
வாங்கும் கர்வம் கூட இருந்தது மனோகரனுக்கு.
இருந்தாலும் தன்னைவிட குறைந்த
சம்பளம் வாங்கிய செந்தில் தன் மகனையும் மகளையும் மேல் படிப்பு படிக்க வைத்துப் போன
வருடம் மகளுக்கு மிகவும் வசதியான இடத்தில் பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு
சீதனம் கொடுத்துச் செலவு செய்து கல்யாணம் செய்து வைத்தான்.
அடுத்து பையனுக்கும் கல்யாணம் செய்ய
இருக்கிறான். இரண்டு வீடு கட்டிவிட்டான். விலை உயர்ந்த கார் வீட்டின் முன் நிற்கும்
அளவிற்கு வசதியாக இருக்கிறான்.
ஆனால் அவனைவிட அதிகமாக சம்பாதித்த
தான், இன்று மகளுக்குக் கல்யாணம் செய்ய அடுத்தவரிடம் கடன் கேட்கும் நிலையில்
இருக்கிறோமே... என்று வருத்தத்துடன் யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
செந்தில் ஒரு முட்டாள். இவ்வளவு
பணம் இருந்தும்.. வீட்டில் கார் இருந்தும் அனுபவிக்கத் தெரிகிறதா...? கஞ்சன்.
இவ்வளவு கஞ்சத்தனமாக இருந்தால் சேர்த்து வைக்கலாம் தான்... என்று தன் மனத்தைத்
தானே தேற்றிக்கொண்டான்.
“இந்தாம்மா.... நாளையிலேர்ந்து நான்
பால் வாங்கி வந்து தர மாட்டேன். உன் புருஷனை வாங்கிக் கொடுக்கச் சொல்லு. இல்லைன்னா
நீயே எழுந்து போய் சம்பாதித்து வாங்கி சாப்பிடு.“ என்று செந்திலின் குரல் அருகில்
கேட்க திரும்பிப் பார்த்தான் மனோகரன்.
கார் ஒரு சந்தின் முனையில்
டிராபிக்கில் நின்றிருந்தது. அந்தத் தெரு ஓரத்தில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த
பெண்ணிடம் தான் செந்தில் சத்தமாக இப்படிச் சொல்லிக்கொண்டு இருந்தான்.
“ஐயா... சாமீ... நீங்க இவ்வளவு
செஞ்சதே பெரிய புண்ணியமுங்க. புள்ளைய பெத்துட்டு என்னால நகர முடியாத நேரத்துல
எனக்கு உங்க செலவுல பால் வாங்கி இத்தனை நாளும் கொடுத்தீங்க. உங்கள நா வாழ்நாள் பூரா
மறக்கமாட்டேங்க. நீங்க உங்க புள்ள குட்டியோட நல்லா இருக்கனும் சாமி...“ அவள் பெரிய
கும்பிடு போட்டாள்.
“அட.. இவனைப்போய் கஞ்சன்னு
நினைத்தோமே... என்று நினைத்துக்கொண்டே செந்திலைப் பார்த்தான். அவன்,
“ரெண்டு கிலோ பழம் அம்பது ரூபாய்ன்னுற. ஆனா..
ஒரு கிலோ பழத்தை முப்பது ரூபாய்க்குத் தான் தருவேன்னு சொல்லுற. இது எப்படி
நியாயம்.“ செந்தில் ஒரு தள்ளுவண்டி பழக்கடைக் காரனிடம் பேரம் பேசிக்கொண்டு இருந்தான்.
“சார்... ரெண்டு ரெண்டு கிலோவா
வித்தாத்தான் இன்னைக்குள்ள பழத்தை எல்லாம் வித்திட முடியும்“ என்றான் வியாபாரி.
“அப்போ சரி. ரெண்டு கிலோ பழம் கொடு.
இந்தாங்க மேடாம் நீங்களும் ஒரு கிலோ தானே கேட்டீங்க. ரெண்டு பேரும் பிரிச்சிக்கலாம்“
அவன் சொல்ல பக்கத்தில் இருந்த பெண் தலையாட்டினாள்.
“சே... ஒரு கிலோவிற்கு ஐந்து ரூபாய்
தானே அதிகம்... கொடுத்துட்டு வாங்கிக்கொண்டு போய் இருக்கலாம். இதுக்குபோய் பேரம்
பேசிக்கொண்டு... என்று எண்ணியபடி மனோகரன் சுற்றும் முற்றும் பார்த்தான். “என்ன
டிரைவர்... இவ்வளவு நேரம் கார் ஓட்டிக்கினு வந்திங்க... என் பிரெண்ட் நடந்துக்கினே
இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்...“ ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“ஆமாம் சார். அவர் நடைபாதையில்
நடந்தே வந்திட்டாரு. நாம காருல வருவதால டிராபிக்குல மாட்டிக்கினு நிக்கிறோம்.
ஆனால் பாருங்கள் சார்... அவர் அஞ்சு ரூபாயாக இருந்தாலும் அதை விட்டுக்கொடுக்காமல்
எப்படி பேசி வாங்கிட்டார்.“ என்றார் அந்த வயதான டிரைவர்..
“ஒரு அஞ்சு ரூபாய் தானே... கஞ்சன்.
அதை மிச்சப்படுத்தி என்னவாகிடப் போகுது...“ சற்றுக் கோபத்துடன் சொன்னான் மனோகரன்.
“இது கஞ்சத்தனம் இல்லை சார்.
சிக்கனம். நூறு ரூபா சம்பாதித்தாலும் அதுல ஒத்தை ரூபாய சேமிச்சி வைக்கனும். நிறைய
பணம் சாம்பாதிக்கிறவங்க எல்லாம் பணக்காரன் இல்லைங்க. நாளைக்குன்னு சேமிச்சி
வைக்கிறவன் தாங்க பணக்காரனாக முடியும். இந்த சூட்சமத்தோட எல்லாரும் வாழுறது
இல்லைங்க“ என்றார் டிரைவர்.
செந்திலுக்கு எப்படி இவ்வளவு வசதி
வந்தது என்பது புரிந்தது மனோகரனுக்கு. திரும்பி செந்திலைத் தேடினான். அவன் நடந்தே
ரொம்ப தூரம் போய்விட்டு இருந்தான்.
அருணா செல்வம்
07.12.2013