செவ்வாய், 15 நவம்பர், 2022

பெண்ணின் உள்மனப் பேறு !

 


(கலிவிருத்தம்)

.
அன்பாய் பேசிய அன்றைய நினைவெல்லாம்
இன்றும் நெஞ்சினுள் இருந்தே இனித்திருக்கும்!
துன்பப் பொழுது தோழியர்ச் சூழ்ந்துவர
நின்று போயிடும் நெகிழ்ந்த கனவலைகள்!
.
சொல்லச் சொக்கிடும் சுவையாய்க் கவிகளையும்
மெல்லப் பேசிடும் மென்மொழி இனிமையையும்
நல்ல நேரமும் நிறைந்து கிடைத்தாலும்
மல்லுக் கட்டிடும் மனத்தைக் குழப்பிவிடும்!
.
கற்றோர் காட்டிய காலமெ னும்நிகழ்வோ
உற்றுக் கடக்கும் ஊழ்வினை என்றரிந்து
பற்று வைத்தலே படைப்பின் நிறைவென்றே
முற்றும் அன்பினால் முயன்று நெகிழ்ந்துவிடும்!
.
பெண்ணின் உள்மனப் பேற்றினைக் கண்டவளின்
கண்கள் நோக்கிடக் கவிகள் பிறந்துவிடும்!
வண்ணங் கூட்டிடும் வடிவில் கலந்துவிட்டால்
எண்ணந் தீட்டிடும் இதயம் இனிதுறுமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக