ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

என்னென்று பாடுவேன் ?

 


ஏழிசை நாதத்தை
இதயத்துள் உருக்கியதை
வாயிசை உணர்வாக
வற்றாமல் அளித்தஉன்னை   
என்னென்று பாடுவேன் ?
ஏதென்று எழுதுவேன் ?
.
துள்ளித் திரியும் பருவத்தில்
தூக்க மில்லா இரவுகளில்
அள்ளி யணைக்கும் நேரத்தில்
அமைதி கொஞ்சும் உள்ளத்தில்
 
சொல்லில் சொக்கும் உயிரிருக்கும்
சொட்டும் தேனின் சுவையிருக்கும்
நல்ல மொழியின் நயமிருக்கும்
நடன மாட விருப்பமிடும்
ஏழிசை நாதத்தை….
.
காற்றில் நம்மைப் பறக்கவிடும்
காந்தம் போலே இழுத்துவிடும் !
ஊற்றின் குளிரில் நனையவிடும்
ஊஞ்சல் கட்டி ஆடவிடும்
 
ஏற்றும் துன்ப நினைவினையும்
இசையின் அழகால் மறக்கவிடும்
ஆற்றின் நடையின் அழகான
ஆற்றல் உடலில் ஊறிவிடும்
ஏழிசை நாதத்தை….
.
ஏக்கம் கொண்ட இறைவனவன்
ஏங்கி உன்னை அழைத்தானோ
ஆக்கம் போதும் என்றேநீ
அங்கே செல்ல விழைந்தாயோ
 
நோக்கம் எதுவோ இருந்தாலும்
நொந்த எங்கள் மனத்திற்கு
ஊக்கம் கொடுக்க உன்குரலே
உந்தி மறைய வைத்தாலும்
ஏழிசை நாதத்தை…..
.

பாவலர் அருணா செல்வம்
28.09.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக