புதன், 1 ஏப்ரல், 2020

காலோடி நடக்கும் வெண்பா!



.
விண்மாலை நல்லழகில் மண்வாசம் பின்னிவரப்
பண்பாடும் நல்லழகு பாட்டனைய, - கண்கவரும்
இன்மாது கண்டதும் என்பாவம் சுற்றுதடி!
தன்மானம் காட்டிடத் தாங்கு!
.
பொருள்மாலைப் பொழுதின் மண்வாசம் இணைந்துவர நற்பண்புகளைக் கொண்டு பாடிடும் அழகான பாடலைப் போல் கண்ணைக் கவரும் இனிமையான பெண்ணைக் கண்டவுடன் என் எண்ணம் சுற்றுதடி. நல்லன்பைக் காட்டி என்னைத் தாங்கு.
.
காலோடிய வெண்பா!
.
விண்மலை நல்லழகில் மண்வசம் பின்னிவரப்
பண்படும் நல்லழகு பட்டனைய, - கண்கவரும்
இன்மது கண்டதும் என்பவம் சுற்றுதடி!
தன்மனம் கட்டிடத் தங்கு!
.
பொருள்விண்ணளவு மலையின் நல்லழகில் மண்ணும் விரும்பி கலந்திருக்க, பண்படுத்தப்பட்ட அழகான சிற்றூரைப் போல் கண்ணைக் கவரும் இனிமை தரும் மதுவைக் கண்டவுடன் என்னுலகம் சுற்றுதடி. தன்மையான மனத்தைக் கட்டிவிட என்னுள் தங்கு.

பாவம்எண்ணம்
அனையபோல
பவம்உலகம்
வசம்விருப்பம்
பட்டுசிற்றூர்

(தமிழில் அரைக்கால் உள்ள எழுத்துக்களின் சொற்களால் முதலில் பாடலை அமைக்க வேண்டும். அவ்வெண்பாவிலே உள்ள அக்கால்களை மட்டும் நீக்கினால் மற்றொரு வெண்பா வரவேண்டும். இதுவேகாலோடி நடக்கும் வெண்பாஎன்பதாகும். இரண்டு வெண்பாவும் வெவ்வேறு பொருளைத் தர வேண்டும்)
.
பாவலர் அருணா செல்வம்
27.03.2020

2 கருத்துகள்: