ஞாயிறு, 24 ஜூலை, 2016

செங்கழுநீர் அம்மா !





செங்கழுநீர் அம்மா, செழிக்கின்ற வாழ்வினை
எங்களுக்குத் தந்தருள் என்னாளும்! – மங்கையர்
குங்குமத்தின் உள்ளே குடிகொண்ட தேவியே!
பொங்கல் படைப்போம் புகழ்ந்து!

வேப்பிள்ளை ஆடை விரும்பிடும் வித்தகியே!
கூப்பிட வந்தருளும் கோமதியே! – காப்பாய்!
வருத்திடும் அம்மை வடிந்தோடச் செய்யும்
மருந்தைக் கொடுத்ததுன் மாண்பு!

அலைதொடரும் வாழ்வும் அடங்காத் துயரும்
நிலையிலா வேலை நிலத்தில்! – தலைமகள்
உன்முகம் கண்டால் உயர்ந்தோங்கும் வாழ்வு!நல்
பொன்னென மின்னும் பொலிந்து!

தளிர்இலைப் பந்தலிட்டுத் தண்ணீர் தருவார்!
குளிர்மோர் கஞ்சியுடன் கூழும் - அளிப்போர்க்குச்
செங்கேண் அம்மா சிறப்பெலாம் தந்திடுவாள்
அங்கம் குளிர அறிந்து!

ஆடிவரும் தேரில் அமர்ந்து மகிழ்பவள்!
கோடி நலத்துச்செங் கேணியவள்! – தேடியே
ஓடிவந்து காப்பாள்! உளமொன்றித் தாய்பாதம்
கூடிடும் நெஞ்சம் குளிர்ந்து!

(கட்டளை வெண்பா)
கவிஞர் அருணா செல்வம்

22.07.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக