வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மூன்று எழுத்து!!



   
மூன்றெழுத்தைத் தலைப்பிட்டே எழுத சொன்னீர்!
    முத்தமிழில் மூன்றெழுத்தோ கணக்கில் இல்லை!
நான்எடுத்தே எதைக்கொடுப்பேன்? அன்னை, தந்தை,
    நல்லபிள்ளை, அன்புபண்பு, வாழ்வு, தாழ்வு!
தேன்கொடுக்கும் சொற்களென காதல், காமம்,
    தேகசுகம், ஆசைநேசம், ஊடல், கூடல்!
வான்கொடுக்கும் பகல்இரவு, நிலவு, மேகம்,
    வளம்மழையும் வர்ணவில்லும் எதைநான் சொல்வேன்?

இலக்கணத்தில் சென்றுபார்த்தால், உயிரும், ஒற்றும்,
    இன்எதுகை, குறில்நெடிலும், இயைபும், ஈற்றும்!
இலக்கியத்தை உற்றுநோக்க அறமும், வாய்மை,
    இறைபெருமை அகம்புறமும், நன்மை, தீமை!
புலம்எதென நோக்கிவிட அறிவு, பார்வை,
   பூஉணர்வு, வாய்மைபோற்ற வாசம் வீசும்!
நிலம்நோக்கி யோசித்தால் கடலும், காற்று,
    நிலையாமை, மரம்மலர்கள், மக்கும், மாறும்!

தாய்மைதன்னை நினைத்திடவே அன்பின் ஆழம்
    தன்னுள்ளே வைத்துநம்மை நெகிழும் நெஞ்சம்!
சேய்யைஎண்ணி பார்த்துவிட்டால் மழலைப் பேச்சு,
    சிரித்திட்டால் சிந்தைமகிழ வலிமை கூடும்!
வாய்மையொன்றை எண்ணிவிட நீதி, நேர்மை,
    வாழ்வுதன்னில் நிலைத்திருந்தால் இறந்தும் வாழும்!
தூய்மையென்றால் வெண்மைமென்மை, நேர்மை, மேன்மை
    தூயநெஞ்சம் எந்தமூன்றை எடுத்துச் சொல்வேன்?

பாவையென்றால் அழகுஇளமை, செழுமை, நாணம்,
    பார்வைபேச்சு, மேனிவளைவு, மூக்கும் முந்தும்!
பூவேயென்றால் அல்லிமுல்லை, வாசம் வீசும்!
    போதைநாடி மெல்லிதழைத் தேடும் வண்டு!
சேவையென்றால் பரிவுபாசம், கருணை, தொண்டு,
    சேர்த்தலின்றி எதைத்தந்தும் உதவும் நெஞ்சு!
தேவையென்றால் கல்விகேள்வி, நல்ல, நூல்கள்
     தெளிதமிழில் எந்தமூன்றை எடுத்துக் காட்ட?

ஒன்றிரண்டா மூன்றெழுத்தில் உள்ள சொற்கள்?
    உயர்தமிழில் நான்கைந்தே இருந்து விட்டால்
நன்றென்றே நானுமிங்கே கொடுத்தி ருப்பேன்!
    நற்றமிழில் உள்ளசொற்கள் நறுந்தேன் யாவும்!
என்னுள்ளே மகிழவைக்கும் எழுத்தைத் தேடி
    எங்கெங்கோ அலைந்துவிட்டு கண்டு கொண்டேன்!
என்னுயிராய் இயங்கவைக்கும் மூன்றெ ழுத்தோ
    என்றென்றும் தமிழென்ற அழகு சொல்லே!

அருணா செல்வம்.
29.03.2013

(போன மாதம் பிரான்ஸ் குறளரங்கத்தில் “மூன்று எழுத்து“ என்ற தலைப்பு கொடுத்துக் கவிதை எழுதச் சொன்னார்கள். எனக்குப் பிடித்த மூன்றெழுத்தை எழுதினேன். நன்றி.)

35 கருத்துகள்:

  1. மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  2. மூன்றெழுத்து கவிதை அசத்திவிட்டீர்கள். முத்தாய்ப்பாய் தமிழை சொன்னது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  3. அருணா என்பதிலும் மூன்றெழுத்து.
    அதில் சொல்ல வந்து கவிதை யும் மூன்றெழுத்து.

    சுப்பு தாத்தா.

    அடே !! சுப்பு என்பது மூன்றே எழுத்து.
    தாத்தா என்பதும் அதுவும் மூன்றே எழுத்து.

    www.subbuthatha.blogspot.in


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க
      நன்றி
      சுப்பு
      தாத்தா.

      நீக்கு
  4. எத்தனை எத்தனை...!!!

    அற்புதம்... பாராட்டுக்கள்...

    சுப்பு தாத்தாவும் அசத்தி விட்டார்...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  5. அன்புத்தோழி! அற்புதமாய் மூன்றெழுத்துக்கவி படைத்து அசத்திவிட்டீர்கள். உங்கள் திறமையே திறமை.
    வாழ்த்துகிறேன் தோழி!

    குறளரங்கில் கூறிய பாட்டு
    திறமை தன்னை காட்டுதம்மா
    அழகான தமிழினிலே
    அருமையாக கவிதை சொல்லி
    அகம் மகிழச் செய்திட்ட
    அன்புத்தோழி அருணாவை
    உளமார வாழ்த்துகிறேன்
    வாழ்க தமிழ்! வாழிய உன் புகழ்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளமதியின் வாழ்த்துக்கள் என்றென்றும் என்தன்
      உளமகிழ்ந்து பொங்கும் உணர்வு! - வளம்படைத்த
      நற்கவி தோழி நலமெலாம் பெற்று
      நற்றமிழால் சேர்ந்திருப்போம் நாம்!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  6. மூன்று மூன்றாக நீங்கள் சொன்ன அத்தனையையும் ரசித்தேன்.

    @சுப்பு தாத்தா: எங்க வீட்டுல என்ன ரஜினி-ன்னு தான் கூப்பிடுவாங்க.
    ஸோ என் பெயரும் மூன்று....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரஞ்சனி அம்மா.

      உங்களின் “ரஜினி“ என்ற மூன்றெழுத்துப் பெயர் எனக்கும் பிடிக்கும்.

      நீக்கு
  7. மூன்றெழுத்து தமிழ் சொற்களை கொண்டு கவிதை பாடி அசத்தி விட்டீர்கள்! அருமை! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  8. அற்புதமாக 3 எழுத்தை கவியாக்கிய விதம் சிறப்புங்க. வாழத்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  9. மூன்றெழுத்துக்களின் சிறப்புக்களை அடுக்கிச் சென்று, தமிழ் என்ற மூன்றெழுத்து மனங்கவர்ந்ததாய் முடித்தது சிறப்பு. எனக்கும் அதுவே மனங்கவர்ந்து கொண்டிருக்கிறது அருணா! அசத்தலான கவிதை! உங்களுக்கு என் மகிழ்வுமிகு நல்வாழ்த்துகள்! (சுப்புத்தாத்தாவின் கமெண்ட் சூப்பர்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  10. எங்க தலிவர் அன்றே பாடிவிட்டார்....
    மூன்றெழுத்தில் என் மூச்சி-ருக்கும்.
    அது முடிந்த பின்னால் என் பேச்சி-ருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பளகி.

      உங்க தலைவரின் மூன்றெழுத்து “கடமை”
      எனக்குப் பிடித்த மூன்றெழுத்து ”தமிழ்“

      வருகைக்கு நன்றி நம்பள்கி.

      நீக்கு
  11. அருமை அருமை அருமை அழகு தமிழின் எழுத்தின் வர்ணனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  12. கவிதை
    அருமை
    தமிழ்
    அருணா...


    நன்றி...

    அடடே...

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. தமிழ்க்கடலில் முத்தெடுத்து மும்மூன்றாய்த் தந்திட்ட
    அமுதின் அருணாநீர் வாழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அப்பாதுரை ஐயா.

      நீக்கு
  15. செழுமையான வார்த்தைக் கோர்புகள்...அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கலாகுமரன்.

      நீக்கு
  16. மூன்றேழுத்து கவி புனைந்து
    முத்துமணி போல் தந்தீர்
    ஒத்தைவரியேனும் பாடி
    உமைவாழ்த்த வார்த்தைதேடி
    எத்தனித்தேன் இன்றுவரை
    எல்லாமும் உமகவியின்
    சொத்தாகி விட்டதனால்
    மௌனித்தேன் மனதோடு ..!

    இனிய கவிதை ..வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொத்தென்று நற்கவிகள் நெஞ்சைத் தொடுவதெல்லாம்
      முத்தான நல்வாழ்த்தே! “மூன்றெழுத்து“ - முத்தமிழைச்
      சித்தத்தில் வைத்தநல் சீராளன் மௌனமொழி
      நித்தமும் நிற்கும் நிலைத்து!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீராளன்.

      நீக்கு
  17. மூன்று எழுத்து அருமையான கவியாக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  18. அருணா தமிழ் கவிதை அருமை ....இதுவும் மூன்றெழுத்து சரியா.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு