செவ்வாய், 11 நவம்பர், 2014

ரோஷம்!!



     “என்னங்க..... நம்ம மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்குப் பைக் வாங்கித் தர்றேன்னு சொன்னீங்களா....?“
   வேலைவிட்டு வந்த முருகனிடம் காபியை நீட்டியபடியே கேட்டாள் பங்கஜம்.
    “ஆமா. இப்ப அதுக்கென்ன?“ சற்று சளிப்புடன் சொன்னான் முருகன்.
   “காலையில ரேவதி போன் பண்ணினாள். இன்னைக்குச் சாய்ந்தரம் பக்கத்தல இருக்கிற கோவிலுக்கு அவளும் அவ மாமியாரும் வர்றாங்களாம். அப்படியே இங்க வந்திட்டு போறேன்னு சொன்னாள். அது மட்டுமில்லாம நீங்க பைக் வாங்கித் தர்றேன்னு சொன்னதை நியாபகப் படுத்தச் சொன்னாள்“ என்றாள் பங்கஜம்.
   “ம்... வாங்கனும் அதுவும் நம்ம கடமை தானே....“
    “எதுக்குங்க நீங்க இதுக்கு ஒத்துக்கினீங்க? கல்யாணத்துக்கே நிறைய செலவு. இப்போ இது வேறயா...?“ பங்கஜம் கொஞ்சம் கோபமாகக் கேட்டாள்.
    “இத பாரு பங்கஜம். நாம பைக் வாங்கித் தரலைன்னா அந்த வக்கத்தவன் நம்ம ரேவதிய ஆட்டோவுல இல்லாடி நடந்து தான் கூட்டிக்கிட்டு போவான். வெளிய பாக்குறவங்க என்னைத் தான் குறையா பேசுவாங்க. செலவோட செலவா இதையும் செஞ்சிதான் ஆகனும்.“
    முருகன் சொல்லி முடிக்கவும் ரேவதியும் அவள் மாமியாரும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அந்தச் சந்தர்ப்பம், நான்கு பேருக்குமே அதிர்ச்சி! என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
   சம்பரதாய பேச்சு வார்த்தைகள் உபசரனைகள் முடிந்து கிளம்பிய மகளின் கலங்கிய விழிகள் பங்கஜத்தின் மனத்தைப் பிழிந்தது.

    நாளுக்கு மூன்று முறை அம்மாவுடன் தொலைபேசியில் பேசும் ரேவதி, இப்போதெல்லாம் மூன்று நாளைக்கு ஒருமுறை அதுவும் இரண்டொரு வார்த்தை என்று பேச்சைக் குறைத்திருந்தாள். இதைக்கவனித்த மாமயார் ரேவதியிடம்.... “ரேவதி.... நீ ஏன் முதல்மாதிரி உன் அம்மாகிட்டே பேசுறதில்லை?“ என்று கேட்டாள்.
   “நான், அவங்க எனக்குச் செய்த சீதனம் எல்லாம் என் மேல இருக்கிற அன்பால தான் செய்தாங்கன்னு நெனச்சிட்டேன். ஆனா இப்போ தான் புரியுது. இவரால இதெல்லாம் வாங்க முடியாது என்ற காரணத்தால தான் எனக்கு எல்லாமே வாங்கித் தந்தாங்கன்னு நினைக்கும் போது கவலையாக இருக்கிறது மாமி“ என்றாள் லேசான அழுகையுடன்.
    “இதுல என்னம்மா கவலை? இப்படியெல்லாம் கொடுக்கனும். இப்படியெல்லாம் வாங்கனும். இது தான் கௌரவம்ன்னு இன்றைய கால கட்டத்தில் எழுத்தாத சட்டம் இருக்கே. இதுக்கெல்லாம் அம்மா அப்பாகிட்ட கோவிச்சிக்கினா பிறகு உனக்கு தான் கஷ்டம். எப்போதும் போல நீ உன் அப்பா அம்மாகிட்ட பேசும்மா“ என்றாள் கனிவாக மாமியார்.
   “இல்லை மாமி. உங்க பிள்ளையை என் அப்பா வக்கத்தவன்னு சொன்னது எனக்குக் கோபம் தான் மாமி. அதை மறக்க முடியலை மாமி“ என்றாள் சற்று கோபமாக.
   “ரேவதி... இதுக்கெல்லாம் ரோசப்பட்டா நம்முடைய சந்தோஷங்கள் தான் வீணா போகும். எனக்குக் கல்யாணம் ஆகி என் அம்மா வீட்டிற்கு மறுவீடு போனோம். அப்போ, கல்யாணம் ஆன புதியதில் உன் மாமா ரொம்ப ஒல்லியா இருப்பார். அந்த நேரத்துல அங்க வந்த என் அப்பாவின் நண்பர் “என்னப்பா... மாப்பிள்ளை ரொம்ப ஒல்லியா இருக்கிறார்“ என்று சொன்னார். உடனே என் அப்பா “அதனாலென்ன நம்ம வீட்டுல கறி எலும்புன்னு ஆக்கிப் போட்டா போவுது“ என்று சிரித்துக் கொண்டு தான் சொன்னார். ஆனால் அதைக்கேட்ட என் கணவர், அன்னைக்குக் கோவத்துடன் வெளியே வந்தவர் தான். தான் சாகிற வரைக்கும் என் அப்பா வீட்டில் கை நனைக்கவே இல்லை. என் தங்கச்சிங்க எல்லாம் நல்ல நாளு கிழமையில அம்மா வீட்டுல தங்கி சந்தோஷமா இருக்க நான் மட்டும் போய் பார்த்திட்டு உடனே இவருடன் திரும்பிடுவேன். அவரோட ரோஷத்தல நானும் அப்பா வீட்டில் சாப்பிடவே முடியலை. அந்தக் கவலை எனக்கு இன்னைக்கும் இருக்குதும்மா. அதனால தான் சொல்றேன். நாம அம்மா அப்பா மேல ரோஷப்பட்டா நமக்குத் தான் நஷ்டம். பேசாம இதை மறந்திட்டு எப்போதும் போல சகஜமா பேசு“ என்றார் மாமியார்.
   ரேவதி சற்று தெளிந்து “சரி மாமி“ என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். எதிரில் அவள் கணவன்...
   “ரேவதி... உன் அப்பாகிட்ட பைக் வேணான்னு சொல்லிடு. வேலையில லோன் கேட்டிருக்கேன். அதுல கார் வாங்க போறேன்னு சொல்லிடு“ என்று சொல்லிவிட்டு விர்ரென்று போனான்.
   ரேவதியும் மாமியாரும் ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டார்கள்.

அருணா செல்வம்

12.11.2014

14 கருத்துகள்:

  1. இதுவும் கடந்து போகும் என்னும் மனநிலை இருந்தால் வாழ்வு எப்போதும் சந்தோஷமே

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    தன்மானம் வேண்டும்! தருகின்றார் பொன்னென்று
    சன்மானம் வாங்கல் தமிழ்மரபா? - இன்கானம்
    பெண்ணின் பெருமை! இதையுணர்ந்தால் ஓங்குமே
    மண்ணின் பெருமை மலர்ந்து!

    நாட்டின் நடத்தையை நல்கும் கவி.அருணா
    தீட்டும் எழுத்தெல்லாம் தேன்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  3. பைக்கோ , காரோ சுயமாய் வாங்குதலே நலம்

    பதிலளிநீக்கு
  4. அப்பன் ரத்தம்தான் மகனிடமும் ஓடுகிறதா ?சிந்திக்க வைத்து விட்டீர்களே :)
    த ம 5

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை! அருமையாக இருக்கின்றது! எப்படியோ மாப்பிள்ளைமனம் மாறியய்தே!

    பதிலளிநீக்கு
  6. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமையான, அழகான சிறுகதை. முடிவு நச்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான, அழகான சிறுகதை. முடிவு நச்.

    பதிலளிநீக்கு