வெள்ளி, 22 ஜூன், 2012

யாரோ அமைத்தப் பாதை!! (சிறுகதை)


‘பாட்டி… பாட்டி .. எழுந்திருங்க…”
    குமார் செல்லம் பாட்டியை உலுக்கி எழுப்பினான். சட்டென்று விழிப்பு வந்த பாட்டி ‘என்னப்பா குமாரு..” எழாமலேயேக் கேட்டாள்.
    ‘பாட்டி எனக்கும் பாரதிக்கும் ஒரு சந்தேகம். நீதான் தீர்த்து வைக்கனும்.. எழுந்து உட்காருங்க..” அவள் கையைப் பிடித்து தூக்கி அமரச்செய்தான்.
   ‘என்னடா கண்ணு சந்தேகம் ஒனக்கு…?”
   ‘பாட்டி ஆத்தீகம் என்றால் என்ன? நாத்தீகம் என்றால் என்ன?’
    அவன் கேட்டக் கேள்விக்குச் செல்லம் பாட்டி நிமிர்ந்து உட்கார்ந்தாள். இப்படி ஒரு சந்தேகம் நம் பேரக் குழந்தை களுக்கா..?
    ‘சொல்லு பாட்டி….” உலுக்கினான்.
    ‘ஆத்தீகம் நாத்தீகம் ரெண்டும் ஒன்னு தான்பா..” கொட்டாவி விட்டபடிச் சொன்னாள்.
    பாட்டியின் பதில் புரியாமல் இருவரும் அவளை அதிசயமாகப் பார்த்தார்கள்.
    ‘இல்ல பாட்டி…”

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில மேனியும்
மூசு வண்டரை பொய்கையும் போன்றதே
இசன் உன்தன் இணையடி நிழலே!

   ‘இப்படின்னு திருநாவுக்கரசர் பாடிய பாட்டைத் தானே பாடியதாக நினைத்துக்கொண்டு கடவுளுக்குப் பூசை செய்கிறவர்கள் ஆத்தீகவாதி…
   கடவுள் என்று எதுவுமில்லை. மதம் சாதி சமயம் எல்லாம் மனிதனால் ஏற்படுத்தப் பட்டது என்று சொல்பவர்கள் நாத்தீகவாதிகள்.
   நீங்க ரெண்டு பேருமே ஒன்றுதான் என்று சொல்கிறீர்களே.. எங்களுக்கு விளங்கவில்லை. விளக்கமாகச் சொல்லுங்கள் பாட்டீ…” பாரதி கொஞ்சளாகக் கேட்டாள்.
   ‘பாரதி.. நாத்தீகம் என்பது உலகில் நடந்ததை நடப்பதைப் பகுத்து ஆராய்வது. நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டிருந்த போது சுதந்திர உணர்ச்சியை ஊட்டி கவி படைத்தார் பாரதியார். நாடு சுதந்திரம் பெற்றப் பிறகும் நாட்டிலுள்ள பெண்களின் விடுதலைக்காகவும் பெண்ணடிமைத் தன ஒழிப்பிற்காகவும் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அது மட்டும் அல்லாமல் சாதி மதம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சிலர் தங்களின் உயர்வுக்காக வகுத்துக் கொண்ட வழி என்றும் சாடினார். முக்கியமாகப் பார்ப்பனியத் தனத்தை எதிர்த்தார். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் தூங்கிக் கொண்டிருந்த மக்களின் ஆறாவது அறிவைத் தட்டி எழுப்பினார். இவருடையக் கொள்கைகளைத் தாங்கியது தான் திராவிடக் கழகம்!
   இவர் கொள்கைகளை ஏந்தியவர்களை நாத்தீகர் என்று சொல்கிறார்கள்.”
   ‘அப்போ ஆத்தீகர்கள் என்றால்…?”
   “தம் முன்னோர்கள் நடந்து வந்த சாதி சமயம் என்ற பாதையைத் தாங்களும் விடாமல் அதிலே தொடர்ந்து பயணம் செய்பவர்களை ஆத்தீகர் என்று சொல்கிறோம்;.”
   “அப்போ ரெண்டும் ஒன்னு கிடையாதே பாட்டீ…’



   ‘நல்லா யோசிச்சிப் பாரு. ரெண்டும் ஒன்னுதான்னு புரியும்.
ஆத்தீகரோ நாத்தீகரோ.. இவர்களாகப் புதியதாக எதையும் சொல்லவில்லை. இந்துக்களோ கிருஸ்துவரோ முஸ்லீம்களோ அல்லது பௌத்தமோ எல்லா மதத்தினரும் எங்கள் மதம் இப்படி சொல்கிறது. இராமானூஜர் இப்படி சொன்னார். ஆதி சங்கரர் இப்படி சொன்னார் என்று இந்துக்களும் ஏசுகிறிஸ்து சொன்னார் அப்போஸ்தலர் சொன்னார் என்று கிருஸ்துவர்களும் முகமதுநபி சொன்னார் என்று முஸ்லீம்களும் புத்தர் வாக்கு என்று பௌத்தர்களும் சொல்லிக் கொண்டு தன் மதத்தை வளர்க்கிறார்கள். ஆனால் அவர்களாக ஏதாவது புதியதாக சொன்னார்களா..?
   நாத்தீகரோ.. புரட்சி கவிஞர் பாரதி தாசன் தந்தைபெரியார் அம்பேத்கார் சொன்னதையேப் பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களும் எதையும் புதியதாகச் சொல்ல வில்லை. இப்பொழுதுப் புரிகிறதா..? நான் ஏன் இரண்டும் ஒன்றென்றுச் சொன்னது….”
   ‘இல்ல பாட்டீ.. நீங்க தப்பா சொல்லுறீங்க. பெரியார் பாரதிதாசன் சொல்லுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறது. இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் இருக்கிறது. ஆனால் மதத்திற்கு அப்படி எதுவும் இல்லையே!’
   ‘குமாரு… பெரியார் காலத்தில் நாடு சுதந்திரம் இன்றி இருந்தது. பெண் அடிமைப் பட்டிருந்தாள். அதைச் சுட்டிக்காட்டி அவ்வடிமைத் தனத்தை நீக்கியவரை மக்கள் மதிக்கிறார்கள்.
   ஆனால் பழங்காலத்தில் பெண் அடிமையாய் இல்லை. நாடும் அன்னியருக்கு அடிமையாய் இல்லை. மக்களுடைய ஏதோ ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் மதம் என்பது தோன்றி இருக்கும். ஆனால் எந்த காலத்தில் தோன்றியது என்று தெரியாது. ஆனால் அந்த சமயத்தை மக்கள் அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தான் வேதனை!
   ஆகமொத்தத்தில் நத்தீகமோ ஆத்தீகமோ மக்களின் தேவைக்காகத் தான் தோன்றியது என்று புரிந்து கொண்டாலே அவை இரண்டும் ஒன்றே என்பதும் புரிந்துவிடும்.’
   ‘அப்போ கடவுள் நம்பிக்கை என்பது பொய்யா…?”
    பாவமாகக் கேட்ட பாரதியிடம் சொன்னாள்.. ‘நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நினைத்தே ஆத்தீகர்கள் அதற்கோர் வடிவம் கொடுத்து கற்பூரம் ஊதுவத்தி மெழுகுவத்தி என்று தீபங்களைக் காட்டி வழிபடுகிறார்கள். நாத்தீகர்களும் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தங்கள் மறியாதையைச் செலுத்துகிறார்கள். இருவருக்குமே ஒவ்வோர் வழிகாட்டி இருக்கிறது. அவர்கள் காட்டிய வழியில் பயணம் செல்கிறார்கள்.
   இப்பொழுது புரியுதா…? நான் ஏன் ரெண்டும் ஒன்னுதான்னு சொன்னது. இதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கடினம் தான். ஆனால் நன்றாக சிந்தித்தால் உங்களுக்கே நன்றாகப் புரியும். போய் ரெண்டு பேரும் சண்டைப் போடாமல் விளையாடுங்கள்.”
   அவர்களை அனுப்பி விட்டு செல்லம் பாட்டி உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

       

17 கருத்துகள்:

  1. ஆத்திகம்,நாத்திகம் இரண்டும் எப்படி ஒன்றாகும்?வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிற கொள்கையல்லவா?நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமலன் ஐயா...

      ஒரு பாதை என்னும் பொழுதே அது
      இரண்டு வழிகளை நிச்சயம் காட்டும் இல்லைங்களா...?
      ஒரே பாதையில் ஆத்தீகமும் நாத்தீகமும் வெவ்வேறு திசையில் பயணிக்கிறது என்பதை தான் சொல்லியிருக்கிறேன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      மிக்க நன்றிங்க விமலன் ஐயா.

      நீக்கு
  2. அழகாக கடவுள் கொள்கையை விளக்கக் கூடிய கதையாக இருக்கிறது....ஆனாலும் ஆத்தீகம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது என்னைப் பொருத்தவரை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி...

      ஆத்தீகம் மட்டும் இல்லை நாத்தீகமும் என்றும் இருக்கத் தான் செய்கிறது.

      சிட்டுக்குருவி... ஒன்றை நாம் எப்பொழுதும் மனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிற்கு இன்னொன்று எதிராக இருந்தால் தான் மற்றொன்றின் சக்தி புலப்படும்.

      நன்றிங்க சிட்டுக்குருவி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. 1.தூங்கிக் கொண்டிருந்த மக்களின் ஆறாவது அறிவைத் தட்டி எழுப்பினார்.

    2. “தம் முன்னோர்கள் நடந்து வந்த சாதி சமயம் என்ற பாதையைத் தாங்களும் விடாமல் அதிலே தொடர்ந்து பயணம் செய்பவர்களை ஆத்தீகர் என்று சொல்கிறோம்;.”

    மிக அழகாகச் சொன்னீர்கள்.

    நல்லதொரு புரிதல், நல்ல தேடல்.

    பதிலளிநீக்கு
  5. இருவருக்குமே ஒவ்வோர் வழிகாட்டி இருக்கிறது. அவர்கள் காட்டிய வழியில் பயணம் செல்கிறார்கள்.
    மிக அறிவுப்பூர்வமான விளக்கம் . நல்ல பகிர்வு சகோ .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க சசிகலா.

      ( பூக்களை விட நீங்கள் அழகாக இருந்தீர்கள் சகோதரி.)

      நீக்கு
  6. வித்தியாசமான சிந்தனை
    சிந்திக்கத் தூண்டிப் போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  7. கடவுளின் பெயரால் மனிதரை இழிவுசெய்யும் செயலைக் கண்டு வருந்தியதால்தான் கடவுளை மற, மனிதனை நினை என்றார் பெரியார். ஆத்திகரோ, நாத்திகரோ, யாரொருவர் சக மனிதனை மனிதனாய் மதித்து, மனித நேயம்காத்து தன் மனசாட்சிக்கு நேர்மையாய் நடக்கிறாரோ அவரே உண்மையான மனிதர். மற்றவரெல்லாம் மனிரென்னும் போர்வை போர்த்திய சந்தர்ப்பவாதிகளே. சிந்தித்தமைக்கும் சிந்திக்கவைத்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி அக்கா...

      அருமையான விசயத்தை எடுத்துச் சொன்னீர்கள். மிக்க நன்றிங்க.

      நீக்கு
  8. சூப்பர்... கீதாக்கா சொன்னதை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். இப்படி அற்புதமான கருத்தை கதையாச் சிந்திச்ச என் ஃப்ரெண்ட் அருணாவுக்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு