வியாழன், 12 ஏப்ரல், 2012

தயக்கம் ஏனடி அதைச்சொல்ல?



 
கன்னித் தமிழ்மேல் மட்டும்தான்
காதல் என்றாளாம் கள்ளியவள்!
கவிஞன் என்னிடம் பொய்யாய்க்
கதைதான் அளந்தாள் சொல்லிலவள்!


கண்ணே! என்காதலே! கேள்பெண்ணே!
காற்றுக் கேதுஉருவம்? ஓடிடும்
காலத்திற் கேதுகால்கள்? வணங்கும்
கடவுளுக்கு எத்தனை வடிவங்கள்?

ஏட்டுக் கவிமேல் காதலென்றாய்!
எடுத்து அதனை அணைப்பாயா?
தீட்டும் பாட்டில் சொல்கின்றேன்
தீந்தமிழும் நானும் ஒன்றென்றே!

கருவறைக்குள் குடியிருந்த நாளில்
கருத்தாக ஊறிய குருதியவள்!
உருவெடுத்து வெளிவந்த பின்னால்
உயிர்வாழ உதவிய மூச்சுஅவள்!

அன்பென்று அன்னை ஊட்டிட
அமிர்தமாய்க் காதினுள் நுழைந்தவள்!
அமைதியாய் நான்னுறக்கம் கொள்ளவே
ஆசையாய்த் தாலாட்டியத் தாயவள்!

அம்மா என்றுநான் அழைத்தபோது
ஆனந்தம் பொங்கிய உணர்வுஅவள்!
அப்பா என்றபோதோ என்னுள்ளே
ஆணவம் தோன்றிட வைத்தவள்தான்!

ஏட்டில் கண்ட அவளுருவால்
ஏங்க வைத்த அழகிஅவள்!
எழுதிப் பழகிய நாள்முதலாய்
என்னுள் புணர்ந்த இன்பமவள்!

பாட்டில் பார்த்த இலக்கியத்தில்
பண்பு பொங்கும் நாயகியவள்!
பழகிப் படித்த இலக்கணத்தில்
பண்பாடு நிரம்பிய பதுமையவள்!

தீட்டும் ஒவ்வோர் பாட்டினிலும்
தீட்ட ஒளிரும் வைரம்அவள்!
வாட்டும் காதல் வேகத்தில்
வளமை கூட்டும் கவிதையவள்!

புவியில் பிறந்த நாள்முதலாய்ப்
புவிக்குள் போகும் நான்வரையில்
தமிழைத் தவிர்த்தால் நானில்லை
தமிழும் நானும் வேறில்லை!

விருப்பம் தமிழ்மேல் என்றேநீ
வியக்கும் வகையில் பதில்சொன்னாய்!
மயக்கம் கொண்டது தமிழென்றால்
தயக்கம் ஏனடி அதைச்சொல்ல?

13 கருத்துகள்:

  1. அழகாய்த்தான் இருக்கிறது சொல்லாமல் இருக்கும் வரை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்காகச் சொல்லாமலே இருக்க முடியுமா சசிகலா?
      எப்படியாவது சொல்ல வைக்கிறேன் பாருங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

      நீக்கு
  2. உங்கள்
    தமிழும் பாடலும் ரெம்ப அமிர்தமாய் இனிக்கிறது
    எப்படிங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேன்தமிழ் இல்லையா....
      அதனுள் காதல் சுகந்தாலும் கசந்தாலும்
      இனிப்பாகத் தான் இருக்கும் செய்தாலி அவர்களே!

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  3. மயக்கம் கொண்டது தமிழென்றால்
    தயக்கம் ஏனடி அதைச்சொல்ல...//

    எப்படியாவது சொல்ல வச்சிருங்க...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி பண்ணுகிறேங்க...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க ரெவெரி.

      நீக்கு
  4. தமிழின் சிறப்பைக் கண்குளிர வாசித்து மகிழ்ந்தேன். பிரமாதம். ஒரு தாலாட்டுபோல் இனிமையைக் குழைத்து இசைக்கிற அழகுக் கவிதை. பாராட்டுகள் அருணா.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்
    மிக்க நன்றிங்க கீதமஞ்சரி!

    பதிலளிநீக்கு
  6. காதலின் சுவையும் தமிழின் சுவையும் கலந்து தித்திக்கிறது.அருமையாய் இருக்கிறது.ரசித்தேன் அருணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்
      மிக்க நன்றிங்க ஷெமா.

      நீக்கு
  7. நல்ல கவிதைகளை நாங்கள் பெறுவதற்காகவது
    காதலைச் சொல்ல கொஞ்சம் தாமதிக்கட்டும்.
    மனம் கவர்ந்த பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
      இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு